படகின் கீழ்ப்பகுதியில் இயந்திரங்கள் இருக்கும். கரி போடுபவன், நெருப்பை வளர்ப்பவன், இயந்திரம் இயக்குபவன் இவர்களெல்லாரும் கீழே தான் இருப்பார்கள். எல்லாரையும் கண்காணிக்கும் பொறுப்பு சாரங்குக்கு. யாராவது தவற செய்து விட்டால், ஒரு இயந்திரத்துக்கு பதிலாக வேறொரு இயந்திரத்தை இயக்கிவிட்டால், ஒரு கழிக்குப் பதிலாக இன்னொரு கழியை இழுத்துவிட்டால் அவன் கதி அதோ கதிதான்! அடி உதை, மட்டமான வசவுகள், செருப்படி கூட விழும் அவனுக்கு. இவ்வளவும் போதாவிட்டால் வேலையே போய் விடும்.
காரணம், படகுக் கம்பெனிக்கு சாரங்கை மட்டுந்தான் தெரியும். மற்ற ஊழியர்களுடன் அதற்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. சாரங்க்தான் படகுக்கு மாஜிஸ்டிரேட் மாதிரி. எல்லாப் பொறுப்பும் அவனுடையது தான். படகு செல்லும் வழியில் ஒரு தோணியுடன் மோதி அதை மூழ்கடித்து விட்டால் அதற்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியவன் சாரங்க் தான். மழை புயலில் அடி பட்டு அந்தப் படகே முழுகினாலும் பொறுப்பு சாரங்க் தான், கம்பெனி முதலாளிகளல்லர். படகு சம்பந்தமாக எழும் எல்லா வழக்குகளுக்கும் அவன் தான் பொறுப்பு. அதே போல் படகு பெரும் புயலிலிருந்து தப்பிக் கரைக்குப் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டால் சாரங்குக்குப் பரிசு உண்டு. படகின் மற்ற பணியாளர்கள் எவ்வளவுதான் கடினமாக உழைக்கட்டும், எவ்வளவு தான் சாமர்த்தியத்தைக் காட்டட்டும், அவர்களுக்கு இந்தப் பரிசின் ஒரு துளி கூடக் கிடைக்காது. எல்லா சன்மானங்களும் மெடல்களும் சாரங்கின் கழுத்தில்தான் விழும்.
"என்ன ஆச்சு?"
நீராவிப் படகு மணலில் சிக்கிக் கொண்டு விட்டது. மூடு பனியில் மணல்மேடு புலப்படவில்லை. படகின் அடிப்பகுதி மணலில் நன்றாக மாட்டிக் கொண்டுவிட்டது. அதை விரைவில் மணலிலிருந்து விடுவிக்க முடியுமென்று தோன்றவில்லை. ஒரு தோணியைப் படகிலிருந்து இறக்க வேண்டும். ஒருவன் அந்தத் தோணியில் போய், தந்தி வசதியுள்ள படகுத்துறையில் செய்தி தெரிவிக்க வேண்டும். அத்தகைய படகுத்துறையெதுவும் அருகில் இல்லை. பெரும்பாலான துறைகள் மரத்தடிகள் அல்லது வயல் வெளிகள் தாம். இன்றைக்குக் குறைந்தது ஏழெட்டு மணிநேரம் படகு தாமதப் படும். வழியில் உள்ள துறைகளிலெல்லாம் பிரயாணிகள் இரவு முழுதும் படகுக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்குத் தொலைவில் புகை தெரியும், படகின் ஊதல் ஒலி கேட்கும், ஆனால் படகு வராது.