(Reading time: 26 - 51 minutes)
சிறுகதை - சாரங்க் - அசிந்த்ய குமார் சென் குப்தா (சு.கிருஷ்ணமூர்த்தி)

டிக்கெட் வசூல் கணக்குக் கொடுப்பான். அவன் படகிலிருந்து இறங்கிப்போகும் வரையில் படிக்கட்டு கரையில் இறக்கப் பட்டிருக்கும். ஆனால், அவனுக்கு மூங்கில் கழியைப் பிடித்துக் கொள்ளத் தேவையில்லை. தாழ்வான நிலம் எப்போதும் நீரில் மூழ்கியிருக்கும். அடிமரம் மட்டும் உறுதியாக வேரூன்றியிருக்கும். படகிலிருந்து இறங்கும் பிரயாணிகள் தண்ணீரில் நடந்து கிராமத்துப் பாதைக்கு வந்து சேர்வார்கள். அவர்களிடம் மூட்டை முடிச்சுகள் இருந்தால் அவற்றை ஒரு தோணியில் வைத்துக் கையால் தள்ளிக்கொண்டே தண்ணீரைக் கடப்பார்கள். குழந்தை குட்டிகளைத் தோளில் வைத்துக் கொள்வார்கள். பெண்டாட்டி, உருவத்தில் சிறியவளாயிருந்தால் அவளை அப்படியே அலாக்காகத் தூக்கிக்கொண்டு தண்ணீரைக் கடப் பார்கள்...

  

"படியைத் தூக்கு!" மேல்தட்டிலிருந்து உத்தரவிடுகிறான் சாரங்க், படகின் தலைவன்.

  

படகுத்துறைக் குமாஸ்தா இன்னும் இறங்கவில்லையா?

  

இறங்கிவிட்டான், கோணல் மாணலாகக் கால்வைத்து இறங்கிவிட்டான். படிக்கட்டு படகின் மேலேறியது. தடிமனான சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்த நங்கூரம் மடமடவென்று மேலே ஏறத் தொடங்கியது.

  

ஒரு ஆள் இந்த அவசரத்தில் இறங்க முடியவில்லை போலிருக்கிறது. யார் அவன்? பத்து, பன்னிரெண்டு வயதுப் பையன். பிரயாணியா? யார் கண்டார்கள்? படகைப் பார்க்க அதில் ஏறியிருக்கிறான். அப்படியானால் அடுத்த துறையில் இறங்கிக்கட்டும். அங்கேயிருந்து சின்னத் தோணியிலே வீடு திரும்பிக்கலாம். அதற்குள் இருட்டிப் போயிடும். இருட்டிலே எப்படி வீட்டுக்குப் போய்ச் சேருவான்? பாவம், அவனோட அப்பா அம்மா எவ்வளவு கவலைப்படுவாங்க!

  

சிறிய படகு. மேல் தட்டில் மூன்றாம் வகுப்பு மட்டுந்தான். முன்பக்கம் புறாக் கூண்டு மாதிரி முதல் வகுப்பு அறைகள் இரண்டு. அவற்றுக்கு முன்னால் திறந்தவெளி மூலையில் சாரங்கின் சுக்கான். நசீம் நேரே அங்கே போய்ச் சேர்ந்தான்.

  

முதலில் யாரும் அவனைப் பொருட்படுத்தவில்லை. படகின் இயந்திரங்கள் இயங்குவதை வேடிக்கை பார்க்க யாரோ வந்திருக்கிறான் என்று நினைத்தார்கள். ஆனால் பையன் அங்கிருந்து நகரவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.