படிக்கட்டு ஏற்றி இறக்கும் வேலை கிடைத்தது. பிறகு மேல் தட்டில் வேலை, அதன் பின் கயிறு இழுக்கும் வேலை. அடி வாங்காவிட்டால் படகில் பதவி உயர்வுக்கு வழியில்லை.
"சாரங்க் துரையோட நல்ல பார்வை படலேன்னா ஒண்ணும் பிரயோசனமில்லே. பத்துப் பன்னெண்டு வருசம் ஒழைச்ச பிறகு துரைக்குத் தயவு வந்தா சான்றிதழ் கொடுப்பாரு. பிறகு அந்த சான்றிதழை வச்சுக்கிட்டு சாரங்க் பரீட்சை எழுதலாம்," என்று சொன்னான் மூன்றாவது மேட் அப்சாருதீன். அந்தச் சான்றிதழ் இல்லேன்னா எல்லா ஒழைப்பும் வீண். அதனாலே சாரங்கோட காலிலே அழுத்தமா எண்ணெய் தடவிக்கிட்டு இருக்கணும். பரீச்சை மட்டும் பாஸ் பண்ணீட்டா அப்புறம் கட்டிப் பிடிக்க முடியாது. அப்புறம் நீதான் ஜமீந்தார், நீதான் பொக்கிஷதார், நீதான் எல்லாம்!"
"ஆனா இதிலே இன்னொரு விசயம் இருக்கு. 'சிட்டகாங்' ஆளுங்கன்னா சாரங்குக்கு ரொம்பப் பிரியம்," என்ற தாழ்ந்த குரலில் சொன்னான், பாய்லரில் வேலை செய்யும் விலாயத் அலி. "சாரங்கோட சொந்த ஊர் சிட்டகாங். 'சிட்டகாங்கைத் தவிர வேறே எங்கே நல்ல சாரங்க் கிடைப்பான்?' அப்படீன்னு சொல்லுவாரு. 'சாரங்க், மீன், வத்தல், தர்கா இந்த மூணும் சேர்ந்தது சிட்டகாங்' அப்படீன்னு ஒரு பழமொழியே இருக்கு. அதே மாதிரி இன்னொரு பழமொழி 'நெல், கொள்ளைக்காரன், வாய்க்கால் இந்த மூணும் சேர்ந்தது பரிசல்..!' சாரங்க் வேலை கொள்ளைக்காரன் வேலையில்லியே!"
"ஏண்டா பயலே, ஒன் ஊரு எது?" என்று எல்லாரும் கேட்பார்கள், "இந்தப் பக்கந்தான்" என்று சோகமாகப் பதிலளிப்பான் நசீம். அவன் கண்கள் நீரால் மல்கும். அவன் முன்னே நிற்பவர்கள் மங்கலாகத் தெரிவார்கள்.
🌼🌸❀✿🌷
மறுநாள் அப்துலுக்கு செமை அடி கிடைத்தது. அவன் தண்ணீரின் ஆழத்தை அளக்கும்போது இரும்புக் கம்பியைத் தண்ணீரில் போட்டுவிட்டான்.
சாரங்க் யாரையாவது அடித்தால் அடி பட்டவனை விலக்க யாரும் முன்வர மாட்டார்கள். அடி படுவது எல்லாருக்கும் பழகிப் போன விஷயம், அன்றாட நிகழ்ச்சி. இருந்தாலும் அடி பட்டவன்