காலில் செருப்பும் தலையில் படகுபோன்ற தொப்பியும் அணிந்துகொண்டு ஹுக்கா பிடித்தவாறு நின்று கொண்டிருந்த சாரங்க் திரும்பி அவனைக் கேட்டான். "என்ன வேணும்?"
"ஒங்களுக்கு ஒரு வேலைக்காரன் தேவைப்பட்டா என்னை வச்சுக்கலாம்."
"நீ எந்த ஊரு?" சற்றுநேரம் அவனைப் பார்த்துவிட்டுக் கேட்டான் சாரங்க்.
"இந்தப் பக்கந்தான், கனக்தியா."
"அப்பா அம்மா இருக்காங்களா?"
"ஒருத்தரும் இல்லே."
சாரங்க் இன்னும் சிறிது நேரம் அவனைப் பார்த்துக் கொண்டே நின்றான். பிறகு "ஒன்னால வேலை செய்ய முடியுமா?" என்று கேட்டான்.
"என்னென்ன வேலைங்க?"
"சமையல் செஞ்சு பரிமாறுவது, படகைத் தொடச்சுப் பெருக்கிறது, துணி துவைக்கிறது, பாத்திரம் தேய்க்கிறது இதெல்லாந்தான். முடியுமா? அப்படீன்னா இருந்துக்க. எலவசமா வேலைக்கு ஆள் கிடைச்சா நல்லதுதானே!" என்று சொல்லிவிட்டு சாரங்க் சுக்கானை இயக்கிக் கொண்டிருந்த இயாத் அலியைத் திரும்பிப் பார்த்தான்.
"கொறஞ்சது ஹூக்காவிலே புகையிலை போட்டுக் குடுப்பான், தேவைப்பட்டாக் கைகால் பிடிச்சு விடுவான்.."
"சம்பளம் ஒண்ணும் கிடையாதா?" இயாத் அலி கேட்டான்.
"சம்பளம் வேறயா?" என்று சீறினான் சாரங்க். "பாசியைக் கொண்டு கறி சமைக்கணுமா? அப்படி