ரிபுன் கை கூப்பியவாறு வேண்டிக்கொண்டான், "ஐயா, என்னாலே அபராதம் செலுத்த முடியாது, ஆனா எனக்கு ஒரு மாச ஜெயில் தண்டனைக்குப் பதிலா ஆறு மாச தண்டனை கொடுங்க!"
நீதிபதிக்கு ஆச்சரியமாகிவிட்டது. "ஏன் ஆறுமாச தண்டனை கேக்கிறே?" என்று அவர் வினவினார்.
"எனக்குக் காச நோய் வந்திருக்கு. அலிபூர் ஜெயில்லே காசத்துக்கு நல்ல சிகிச்சை செய்யறாங்களாம். ஆறுமாசத்திலே குணமாயிடுமாம். அதனாலதான்.."
ஆனால் நீதிபதி தன் தீர்ப்பை மாற்றவில்லை. ஜெயில் ஆஸ்பத்திரியில் ரிபுனின் நோய் குணமாகவில்லை. அவன் ஒரு மாதத்துக்குப் பிறகு இருமிக்கொண்டே சிறையிலிருந்து வெளியே வந்தான். அதற்குப்பின் ஒரு மாதந்தான் உயிருடனிருந்தான். அம்மாவின் காலடியிலேயே இரத்த வாந்தியெடுத்து உயிரை விட்டான், பாவம்!
திகைத்துப்போய் உட்கார்ந்திருந்தாள் சாவித்திரி. அவளுடைய கண்களிலிருந்து தீப்பொறிகள் பறந்தன.
ஆனால் ஒரு சொட்டுக் கண்ணீர்கூட விடவில்லை அவள்.
இதற்கு இரண்டு மாதங்களுக்குப்பின் தேர்தல் வந்தது. சாவித்திரிபாலாவும் ஒரு வாக்காளர். மதிப்புக்குரிய ஒரு பெரிய மனிதர் அவளிடம் ஓட்டுக் கேட்க வந்தார். சாவித்திரி அவரைச் சுட்டெரிப்பதுபோல் உற்றுப் பார்த்துக் கேட்டாள், "ஒங்களுக்கு ஓட்டுப் போடணுமா? நீங்க எனக்கு என்ன ஒபகாரம் செஞ்சிருக் கீங்க? என் புருசன் ஒரு பண்டிதர். நீங்க பதவியிலே இருந்தபோது அவர் ஒரு சாதாரணப் பிச்சைக்காரன் மாதிரி செத்துப் போனார். என்னால என் பெரிய புள்ளெயப் படிக்க வைக்க முடியலே. அவன் ரவுடியாத் திரிஞ்சு கடைசியில் கத்திக் குத்துப்பட்டு செத்துப் போனான். சின்னப் பையன் காசநோயிலே செத்தான். அவனுக்கு சிகிச்சை செய்ய முடியலே. எங்கே போனாலும் லஞ்சம் கேக்கறாங்க.. ஒங்களுக்கு எதுக்கு ஓட்டுப் போடணும்? நான் யாருக்கும் ஓட்டுப் போடமாட்டேன்..!"