சாவித்திரி சீட்டை எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக் கூட்டத்தில் ஒரு வாரம் முயன்று பார்த்தாள். ஒரு பலனுமில்லை. ஒரு நோயாளி அவளிடம், "இங்கேயும் பைசா இல்லாமே ஒண்ணும் நடக்காத. லஞ்சம் குடுக்கணும்," என்று சொன்னான்.
ரிபுன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படவில்லை, சாவித்திரியிடம் காசு ஏது? சிகிச்சையின்றியே காலங் கடத்தினான் ரிபுன். மறுபடியும் மூட்டை தூக்கவும் தொடங்கினான். ஒருநாள் அவனுடைய கூட்டாளியொருவன் அவனிடம் சொன்னான், "எனக்கு ஒரு நல்ல யோசனை தோணுது. நீ எப்படியாவது அலிபூர் ஜெயில்ல ஆறுமாசம் இருந்தால் உன் வியாதி குணமாயிடும்.."
"ஜெயில்லே இருந்தா வியாதி குணமாயிடுமா? என்ன சொல்றே நீ?" கூட்டாளியின் பேச்சை நம்பவே முடியவில்லை ரிபுனால்.
கூட்டாளி சொன்னான்,"ஹரு ஜெயிலுக்குப்போய் வியாதி குணமாகித் திரும்பி வந்திருக்கான். அவனுக்கும் காசநோய்தான் வந்திருந்தது. அங்கே நல்ல ஆஸ்பத்திரி இருக்கு. எலவசமா சிகிச்சை செய்யறாங்க. நீ ஜெயிலுக்கப் போயிடு!"
சில நாட்களுக்குப் பிறகு ரிபுன் ஒரு டிராமில் பிக்பாக்கெட் செய்யப்போய்க் கையுங்களவுமாகப் பிடிபட்டான். அங்கிருந்தவர்கள் அவனை நன்றாக அடித்துவிட்டுப் போலீசில் ஒப்படைத்தார்கள்.
நீதிமன்றத்தில் நீதிபதி அவனிடம் சொன்னார், "நீ உன் கட்சியை எடுத்துச் சொல்ல ஒரு வக்கீல் வச்சுக்கலாம். வக்கீல் வைக்க உனக்கு வசதியில்லேன்னா சர்க்காரே உனக்கு ஒரு வக்கீல்.."
ரிபுன் கைகூப்பிக்கொண்டு சொன்னான், "வேண்டாம் சாமி, எனக்கு வக்கீல் வேண்டாம். என்மேல் சுமத்தப்பட்ட குத்தம் உண்மைதான். நான் திருடறதுக்காகத்தான் அந்தப் பிரயாணியோட சட்டைப்பையில் கையைவிட்டேன்."
"ஐம்பது ரூபாய் அபராதம், அதைச் செலுத்தாவிட்டால் ஒரு மாதம் ஜெயில்," என்று தீர்ப்பளித்தார் நீதிபதி.