தோன்றவேயில்லை.
தம்பீ, நான் உனக்கொரு வழி சொல்லுகிறேன். அந்த முறையில் நீ சோதனை செய்து பார். இந்தச் சோதனைகளுக்காக நீ மூன்று ஆண்டுகள் ஒதுக்கினால் போதும். என் சொல்லை நம்பி நீ உன் வாழ்க்கையில் மூன்று ஆண்டுகள் செலவிட முன் வருகிறாயா?” என்று அவர் கேட்டார்.
முன் அறிமுக மில்லாதவராக இருந்தாலும் அவரை நம்ப வேண்டும் என்று ஒர் உள்ளுணர்ச்சி கூறியது.
"சொல்லுங்கள்" என்றான் மகாலிங்க சாஸ்திரி.
"முதலில் உன் பைத்தியக்கார அண்ணனைப் போய்ப் பார். பைத்தியக்கார விடுதியிலிருந்து, நீ இருக்கும் இடத்திற்கு அவனை அழைத்துக் கொண்டு வந்துவிடு. அவனை உனக்கு மேலானவனாக மதித்து மரியாதை செய். அன்பு காட்டு. ஆதரித்துக் காப்பாற்று. ஓர் ஆண்டுக்குப் பிறகு சித்திரை மாதத்து முதல் வெள்ளிக்கிழமையன்று இதே இடத்தில் என்னே வந்து பார். அப்போது நான் அடுத்த சோதனையைப் பற்றிக் கூறுகின்றேன்" என்றார் அந்தக் குடியானவர்.
“சரி” என்றான் இளைஞன். அந்தச் சொல்லை அவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை அந்தக் குடியானவருக்கு இருந்தது. அவன் குடியானவரைப் பற்றி எதுவும் விசாரித்துக் கொள்ளவில்லை. உடன் வந்த பிராமணர்களெல்லாம் தூங்கி எழுத்தபின் அவர்களோடு புறப்பட்டுச் சென்றான். போகும்போது குடியானவரிடம் "போய் வருகிறேன்" என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டான்.
சரியாக ஓராண்டு கழிந்தது. புத்தாண்டு பிறந்தது. சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை வந்தது. மகாலிங்க சாஸ்திரி அன்று நண்பகல் நேரத்தில் அந்தக் கிராமத்துச் சத்திரத்துக்குள் நுழைந்தான். அவனை எதிர்பார்த்துக் கொண்டு அந்தக் குடியானவர் காத்திருந்தார்.
அவர் அருகில் சென்றவுடனேயே அவன் தானாகப் பேசத் தொடங்கினன். ஆனந்தத்தோடு "ஐயா, என் அண்ணனுக்குப் பைத்தியம் தெளிந்துவிட்டது!" என்று கூறினான்.