*** *** ***
மறுநாள் பள்ளிக்கூடம் போய் வகுப்பு ஆசிரியரிடம் மழுப்பி மழுப்பிக் காரணம் கூறித் தப்பித்தாகிவிட்டது. ஆனால் நேற்று எதிர்பாராமல் கணக்கு ஆசிரியர் திடீர் கணக்குப் பரிசோதனை வைத்தார் என்றும் அதில் கலந்து கொள்ளாததால் அது ஆண்டு ரிப்போர்ட் கார்டில் "வரவில்லை" என்று எழுதப்படும் என்றும் கேள்விப்பட்டபோது அவனுக்கு வயிற்றைக் கலக்கியது.
கேசவனும்தான் கலந்து கொள்ளவில்லை. ஆனால் இது அவனுக்குப் பொருட்டல்ல. அவன் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. அவன் ரிப்போர்ட் கார்டைக் கேட்டுப் பார்க்க ஆளில்லை. கள்ளக் கையெழுத்தும் அவனே போட்டுக் கொள்வான். ஆனால் முத்தையாவின் அம்மா தவறாமல் கேட்டு வாங்கிப் பார்ப்பாள். அந்தப் பரிட்சையில் கலந்து கொள்ளாமல் போனதை ரிப்போர்ட் கார்டில் கையெழுத்து வாங்கும்போது அம்மாவுக்கு விளக்கியாக வேண்டுமே! இப்போதே மனம் பொய்ச் சமாதானங்களைத் தயாரிக்கத் தொடங்கியிருந்தது.
அன்று இரவும் சாப்பிட உட்கார்ந்த போது அம்மா சாப்பாட்டுக்கு வரவில்லை. அதிகம் பேசவும் இல்லை. ஆளும் மிகச் சோர்ந்து இருந்ததுபோல் காணப் பட்டாள். மீனாவைக் கூப்பிட்டு "நீயே எடுத்துப் போட்டுச் சாப்பிடு மீனா! அண்ணனுக்கும் போட்டுக்குடு!" என்றாள்.
சாப்பிடும் போது முத்தையா மீனாவிடம் ரகசியமாகக் கேட்டான்: "ஏன் மீனா, அம்மாவுக்கு என்ன, ஒடம்பு சரியில்லியா?"
"எனக்குத் தெரியாது!" என்று வெடுக்கென்று சொன்னாள் மீனா.
மறுநாள் பகல் பார்வதி படுக்கையிலேயே இருந்தாள். முத்தையா பள்ளிக்கூடத்திற்குத் தயாராகிய போது சாப்பாடு ஒன்றும் தயாராகியிருக்கவில்லை.
அவன் அவள் படுக்கையை எட்டிப்பார்த்து "ஏம்மா இன்னைக்கு சமைக்கிலியா?" என்றான்.