“இப்டியே முழுச்சுட்டு நில்லு...மதியம் வந்துடும்.....”
சமையலில் சூரப்புலி இல்லையெனினும் சுரைக்காய் கூட்டும், புளிக்குழம்பும் சமைக்க தெரிந்த அளவிற்கு சமையல் பிடிபடும் அவளுக்கு.
“அதெல்லாம் சமைப்பேன்...”
அவ்வளவுதான் அவன் சென்றுவிட்டான்.
வேகமாக சென்று குளித்து, கொண்டு வந்திருந்த உடைகளில் ஒன்றை மாற்றினாள். தேவைப்படாது என்று பழைய உடைகளை தவிர்த்து புது உடைகள் சிலவற்றை மட்டும் கொண்டுவந்திருந்தாள். இதை உடுத்திக்கொண்டு சமைக்க வேண்டுமா?
அத்தனை பெரிய சமையலறையில் என்னவெல்லாம் இருக்கிறது, எதுவெல்லாம் இல்லை என்று கண்டுபிடிக்கும் முன் அவளுக்கு வேர்த்து கொட்டிவிட்டது.
மீண்டுமாக நிவந்தனை தேடி வந்தாள்.
“க்ராசரி எல்லாம் இருக்குது, ஆனால் வெஜிடபுள்ஸ் எதுவும் இல்ல...வாங்கிட்டு வந்தா சமைக்க ஆரம்பிச்சிருவேன்...”
சில நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து நீட்டினான் அவன்.
“வீட்ல இருந்து லெஃப்ட் சைட் கொஞ்ச தூரம் போனா ஷாப்ஃஸ் இருக்கும்....வாங்கிட்டு வந்துடு....அப்பாக்கு ஃபிஷ் பிடிக்கும்...அதையும் செய்துடு...”
என்னவாயிற்று இவனுக்கு?
இதையெல்லாம் இவள் இதுவரை செய்ததே இல்லை.
இவள் பிறந்த பொழுதே அம்மா இறந்துவிட்டாலும் அப்பா இவளை தங்க தட்டில் வைத்து தாங்கித்தான் வளர்த்தார்.
மிடில்க்ளாஸ் பொருளாதாரம்தான் என்றாலும் ராஜகுமாரிதான் இவள். சாப்பிடுவதோடு இவள் வேலை முடிந்துவிடும். எல்லாம் அப்பாதான்.
கல்லூரியில் இரண்டாம் ஆண்டில் இவள் கால்வைக்கவும் சில மாதங்களாய் ‘உடம்பு சரி இல்ல அம்மு’ என்று சொல்லி கொண்டி இருந்த அப்பா மூச்சி பேச்சின்றி படுக்கையில் விழவும் சரியாக இருந்தது.
அவசர அவசரமாக பக்கத்து வீட்டுகாரர்கள் துணையுடன் இவள் அப்பாவை மிக உயர்ந்த மருத்துவமனையில் அனுமதிக்க, இருந்த அத்தனை சேமிப்புகளையும் காலி செய்துவிட்டு மூன்றாம் நாள் அப்பா மரித்துப் போனார்.
அதன்பின்தான் இவள் உலகம் தலை கீழாகிப் போனது.
ஆனாலும் எப்போதும் இப்படி கடைக்கு அலைந்தது இல்லையே.
“என்ன நின்ன இடத்துல கனவு கண்டுகிட்டு இருக்க...? கோடீஸ்வரன வளச்சு போட்டாச்சு இனி வாழ்க்கைக்கும் உட்கார்ந்த இடத்துல இருந்து திங்கலாம்னு நினச்சியோ...?”
கொதித்துக்கொண்டு வந்தது அவளுக்கு. என்ன சொல்லிவிட்டான் இவன்? பணத்தை அவள் ஒருபோதும் மதித்ததில்லையே.
முதல் சந்திப்பிலேயே இவன் பெரும் செல்வந்தன் என அஞ்சனிக்கு தெரியும், ஆனால் அவனை விரும்பியது அதற்காக இல்லையே.
கோபமும், முன்னிரவில் இருந்து கதறிக்கொண்டிருந்த காதலின் காய துடிப்புமாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அழக்கூடாது என எண்ணி இருந்தாலும் கண்ணீர் கருவிழி மறைத்தது.
“நான் அப்டி நினைக்கலைனு உங்களுக்கே தெரியும்...”
கடகடவென அவனை கடந்து சென்றாள். ஆட்களை எடைபோடும் அவன் திறன் அலுவலகத்தில் வெகு ப்ரசித்தி. இவளுக்குமே அது தெரியும். பின்பு இவளை எப்படி இப்படி எடை போட்டான்?
“கோபத்துல ப்ரேக் ஃபாஸ்ட் செய்யாம போயிடாத...”
குத்து வாளாய் குத்தியது அவன் கோப வார்த்தைகள்.
இவள் அழுது கொண்டிருக்கிறாள் அவன் என்ன பேசிக்கொண்டிருக்கிறான்?
திருமண மேடை வரை வந்த காதல் இப்பொழுது எங்கே...?
சேமியா உப்மாவும் தேங்காய் சட்னியும் செய்து டைனிங் ரூம் மேஜையில் வைத்துவிட்டு பசியும் கோபமுமாக கடைக்கு கிளம்பிச் சென்றாள்.
அவன் சொன்னதை நம்பி இடபக்கம் வந்தது தப்போ என்று அவள் தவிக்க தொடங்கி 15 நிமிடங்களுக்கு பின்பு கண்ணில் பட்டது அந்த சூப்பர் மார்கெட். காய்கறியும் பதபடுத்தபட்ட மீனும் வாங்கிக்கொண்டு மீண்டுமாக வீடு வந்து சேர்ந்த போது தலை சுற்ற தொடங்கி இருந்தது அஞ்சனிக்கு.
வீட்டின் நுழைவு வாசலில் நின்றிருந்த மூன்று கார்கள் கண்ணில் பட்டன. இரண்டு நிவந்தினுடையது. மற்றொன்று அவன் தந்தையினுடையது.
வந்து விட்டார்களா?
துப்பட்டாவால் முகத்தை துடைத்துக்கொண்டு முடிந்தவரை தலை முடியை சீர் செய்தபடி உள் நுழைய வரவேற்பறையில் நிவந்தின் தங்கை அனித்ரா மொபைலில் எதோ பேசி சிரித்துக்கொண்டிருந்தாள்.
திருமணத்திற்கு முந்திய நாள்தான் பாஸ்டனிலிருந்து வந்திருந்தாள் அவள். அங்கு எம்.பி.ஏ படித்துக்கொண்டிருக்கிறாள் அனித்ரா. இதற்கு முன் தொலைபேசியில் சில முறை அஞ்சனியுடன் பேசி இருக்கிறாள். நட்பு இருக்கும் அதில்.
இவளைப் பார்த்தவள் “சரியான அல்பம்....ரெண்டு கார் இருக்குது கடைக்கு நடந்து போய்ட்டு வருது....நாய குளிப்பாட்டி நடு வீட்ல வச்சாலும்னு ஏதோ சொல்வாங்களே அதுமாதிரி...” என்றுவிட்டு மாடி நோக்கி போனாள். திருமணத்திற்கு முன் பேசியவள் இவள்தானா?
இவள் டிரைவிங் பழகி இருந்தாள் தான். ஆனாலும் தன் அறைக்குள் வரவிடாதவனுடைய காரை எப்படி எடுத்துக்கொண்டு போக?
கணவனின் வார்த்தைக்கு வந்த கண்ணீர் அனித்ராவின் இந்த பேச்சுக்கு வரவில்லை. கோபம் மட்டுமே முழு உருவம் பெற்றது.
அதற்குள் நிவந்தின் அதட்டல் காதில் விழுந்தது. “ப்ரேக்பாஸ்ட் செய்து வைனு சொன்னா வெறும் சேமியாவ கிண்டி வச்சிட்டு போய்ட்ட....”
மொத்த கோபத்துடனும் அவனைப் பார்த்தால் அவன் முகத்தில் பசி தெரிந்தது. முதல்ல அவன் சாப்டட்டும் அப்புறம் பேசிக்கிடலாம்...காதல் மனம் அறிவுரை சொன்னது.
“இல்லையே சட்னியும் செய்து வச்சிருந்தேனே....” சொல்லியபடி உணவு மேஜைக்கு சென்றவள் உப்மாவை எடுத்து தட்டில் பரிமாறினாள்.
“அண்ணி சரியான மக்கு பிச்சக்காரி....நீ என்ன சொல்ற அவளுக்கு என்ன புரியுது...? இளக்காரமாக சொன்னாள் அனித்ரா “எங்க வீட்ல ப்ரேக் ஃபாஸ்ட்னா குறஞ்சது மூனு அயிட்டமாவது இருக்கும்...இட்லி, ஆப்பம், ஓட்ஸ் இல்லனா தோசை, இடியாப்பம், கார்ன்ப்ளேக்ஸ் இப்டி.... அதோட ரெண்டு டைப் சட்னி, சாம்பார், தேங்கா பால், குருமா இவ்ளவும் இருக்கும்...வேணும்கிறத சாப்டுப்போம்...”
“இதெல்லாம் முன்ன பின்ன பார்த்திருந்தான அவளுக்கு தெரியும்...அதனால இதுக்கெல்லாம் கோப்படாதே...” அண்ணனை சமாதான படுத்துகிறாளாம் அனித்ரா.
இத்தனையை இவள் தினமும் செய்ய வேண்டுமா? மனதிலிருந்த குமுறலையும் மீறி சோர்வு வந்து ஆட்கொள்ள அப்படியே நாற்காலியில் அமர்ந்தாள் அஞ்சனி.
இவளை அனித்ரா பிச்சைகாரி என்கிறாள், நிவந்த் வாயை மூடிக்கொண்டிருக்கிறான்.