நாளை பார்க்கலாம்… - ராசு
This is entry #33 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
அவ்வளவு வேகமாக கிளம்பியும் தாமதமாகிவிட்டது. வீட்டினரிடம் விடைபெறுவதை சாக்காக வைத்துக்கொண்டு அவர்களுடன் பேசியவாறே கணவன் முகத்தை பார்க்காமல் வண்டியின் அருகில் சென்று நின்றாள் சீதா.
அதற்குள் பையன் வண்டியின் முன் ஏறி முதலிடத்தை பிடித்த வெற்றி வீரன் போன்று தலை நிமிர்த்தி நின்றான். மகள் ராகவனுக்கு பின்புறம் அமர்ந்து அவன் இடுப்பை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
வண்டியோ ராகவனின் மனம் போல் உறுமிக்கொண்டிருந்தது.
‘இருக்கு. இன்னிக்கு நல்லா மண்டகப்படி கிடைக்கப் போகுது.’
சற்று பயத்துடனேயேதான் ஏறி அமர்ந்தாள். வீட்டினரிடம் பிரியா விடை பெற்றாள். பெற்றோர், சகோதர சகோதரிகள், அவர்கள் குழந்தைகள் மற்றும் சுற்றத்தினரோடு கழித்த இந்த இரண்டு நாட்கள் போன்று இனி எத்தருணத்தில் எல்லோரும் ஒன்று சேர வாய்ப்பு கிடைக்குமோ. அதனால்தான் அவள் கிளம்புவதற்கு தாமதமாகிவிட்டது.
புகுந்தகத்திற்கு என்று பெண்கள் சென்ற பிறகு பிறந்தகத்தை மறந்துவிட வேண்டுமா என்ன? இது ஏன் இந்த ஆண்களுக்கு புரிவதில்லை.
அவளுக்கு கணவன் மீது கோபம் கோபமாய் வந்தது. இங்கு வந்ததிலிருந்து அது சரியில்லை, இது சரியில்லை என்று நொட்டை சொல்லிக்கொண்டுதான் இருந்தான்.
அவன் பேசுவது மற்றவர்கள் காதில் விழுந்து விடுமோ என்று அந்த பயம் வேறு.
திருமணமாகி போகும் இடத்தில் அடிப்படை வசதிகள் கூட, குறைவாக இருந்தால் அதை பெண்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் ஆண்கள் மட்டும் மாமியார் வீட்டில் குற்றம் குறைகள் காணுவதிலேயே குறியாய் இருப்பர். இத்தனைக்கும் மாப்பிள்ளை என்று பார்த்து பார்த்து செய்வர். அப்படி இருந்தும் ஏதாவது ஒரு சின்ன விசயத்தை பிடித்துக்கொண்டு தொங்குவர்.
‘இப்ப இங்கே என்ன குறையாம்? முகத்தை எதற்கு தூக்கிவைத்துக்கொண்டு இருக்கிறார்?’ மனதுள் சலித்துக்கொண்டாள்.
‘எனக்குன்னு வந்து வாச்சிருக்காரே? அக்கா தங்கச்சிக்கெல்லாம் இந்த பிரச்சினையில்லை. அய்யய்யோ! என் கண்ணே பட்டுவிடும் போல் இருக்கிறதே? தப்பு தப்பு.’ மனதுக்குள்ளேயே கன்னத்தில் போட்டுக்கொண்டாள்.
கையால் போட்டுக்கொள்ள முடியாது. ஒரு கை வண்டியை பிடித்திருக்கிறது. இன்னொரு கையில் பெற்றோர் ஆசை ஆசையாய் கட்டிக்கொடுத்த பை இருக்கிறது.
“இதெல்லாம் அங்கே கிடைக்காதா? எதுவும் இல்லாத மாதிரி மூட்டையைக் கட்டிக்கிட்டு கிளம்பிட்டே. நானும் நேரம் ஆச்சுன்னு கத்திக்கிட்டேயிருக்கேன். என்னமோ பசை போட்டு ஒட்டின மாதிரி கிளம்பவே மாட்டேங்கிற. அப்பன் வீட்டிலேயே இருந்துடலாம்னு ஐடியாவா?”
ஆரம்பித்துவிட்டான். இனி வீடு போய் சேரும் வரையிலும் வசை தொடரும். அவள் என்ன வேண்டுமென்றா தாமதமாக்கினாள். ரொம்ப நாட்கள் கழித்து ஒரு விசேசத்திற்காக குடும்பத்தோடு வந்தாள். அதுவும் ஒருநாள்தான் அம்மா வீட்டில் தங்கினாள். விசேசத்திற்கு போய்விட்டு வந்து பிறந்த வீட்டு சொந்தங்களோடு கதைத்துவிட்டு பங்காளி வீடு மாமன் மச்சான் வீட்டுக்கெல்லாம் வரவில்லை என்ற குறை வருமே என்று அங்கே எல்லாம் போய் தலையை காட்டிவிட்டு கிளம்பிவிட்டாள். அதற்கு இந்த குதி குதிக்கிறான்.
“பொழுது போயிடுச்சு. கொசு வேற கண்ணில் அடிக்கும். நான் ஹெல்மெட் போட்டிருக்கேன். குழந்தைங்க கண்ணில் விழுந்துச்சுன்னா தாங்குவாங்களா?” தொடர ஆரம்பித்தான்.
வீடு போய் சேரும் வரையில் அவனுக்கும் பொழுது போக வேண்டாமா?
‘குழந்தைகளுக்கு மட்டுமா கொசு விழும்? எனக்கும் தானே விழும். நான் இல்லாம எங்கேருந்து வந்தாங்களாம் இவருடைய குழந்தைகள்?’ மனதுக்குள்ளேயே அலுத்துக்கொண்டாள்.
இன்னும் கொஞ்ச நேரத்துக்குதான் பிரச்சினை.
ஏன் அப்புறம் அவன் அமைதியாகிவிடுவான்னு நீங்க நினைச்சா அது தப்பு. அவன் ஹெல்மெட்டையும் மீறிக்கொண்டு வரும் வார்த்தைகளை காற்று தள்ளிக்கொண்டு போய்விடும். அவன் ஏதோ பேசுகிறான் என்று மட்டும் அவளுக்குப் புரியும். என்ன பேசுகிறான் என்று தெரிந்தால்தானே அவளுக்கும் கோபம் வந்து வார்த்தைகள் தடிக்கும்.
வீடு இருக்கும் இடங்களை எல்லாம் கடந்து செல்லும் வரையில் அவளுக்கு நிம்மதியாக இருந்தது. அதன் பிறகுதான் தேவையில்லாத நினைவுகள் வந்து அவளை ஆட்டுவித்து மனம் பதைபதைக்க ஆரம்பித்தது.
இந்த வாரத்திலதான் ஒருநாள் ராகவன் வந்து அந்த நிகழ்ச்சியைப் பற்றி சொன்னான். வண்டியில் சென்ற இருவர் சாலை ஓரத்தில் கணவனுக்காக காத்திருந்த ஒரு பெண்மணியின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை அறுத்துக்கொண்டு சென்றுவிட்டனராம்.
இதை இங்கே வந்த போது மற்றவர்களின் பாதுகாப்பு கருதி சொல்லி வைத்தாள். செம்மறி ஆட்டுக் கூட்டம் பற்றி உங்களுக்கு தெரியும். முதலில் ஒரு ஆடு போகும் வழியில் மறறவை பின்தொடரும்.
இவள் சொன்ன மாதிரியே மற்றவர்களின் மனதில் ஏதோ ஒரு மூலையில் ஒதுங்கி கிடந்தவைகள் எல்லாம் வரிசை கட்டி வர ஆரம்பித்தன.
“அப்படித்தான் நம்ம ஊரில் நடந்தது…” என்று ஒருத்தி சொல்ல மற்றவர்களும் தொடர்ந்தனர்.
அதில் முக்கியமாய் சீதாவை பாதித்தது என்ன என்றால் வண்டியில் போகும்போதே ஒரு பெண்ணின் சங்கிலியை அறுத்து அந்த பெண்ணும் கீழே விழுந்து தலையில் அடிபட்டுவிட்டதாக கூறியது.