ராட்சசியா…? ரட்சகியா…? - ராசு
This is entry #34 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
‘அவளால் மட்டும்தான் முடியும்.’
‘உனக்கு எதுவும் தெரியாது. உன்னால் எதுவும் முடியாதுன்னு என்னை பார்த்து அலட்சியமாய் வார்த்தைகளை சிந்திவிட்டு ஒரு உதாசீனப் பார்வையை வீச அவளால் மட்டுமே முடியும்.’
நினைக்க நினைக்க மனசே ஆறவில்லை எனக்கு.
இப்போது கூட ‘ஹ’ என்று அநாயாசமாய் தோளை குலுக்கும் அவளின் உருவம்தான் என் கண்முன் வருகிறது.
இவளை மட்டும்தான் ஆண்டவன் இப்படி படைச்சானா? இல்லை ஒட்டுமொத்த பெண்களுமே இப்படித்தானா?
ஒரு பெண்ணோட கோபத்தையே தாங்க முடியலை. இந்த நேரத்தில் ஒட்டுமொத்த பெண்களின் கோபத்துக்கு ஆளாகனுமா? எனது மனசாட்சி என்னை கிண்டல் செய்வதால் பெரிய மனது பண்ணி இப்போதைக்கு எனது சந்தேகத்தை ஒதுக்கி வைக்கிறேன்.
‘அட என்னதாங்க ஆச்சு?’ நீங்க கேட்கிறது புரியுது.
உங்களுக்கு அதை சொல்லனும்னா பத்து வருசத்து கதையை ஆரம்பிக்கனும். ஏன்னா அப்பதான் அந்த ராட்சசியின் பார்வை என் மீது விழுந்தது.
அப்ப சந்தோசமாதான் இருந்தது.
வீட்டில் பார்த்துதான் முடிவு செய்தனர். நானும் எனது பங்குக்கு அவளைப் பற்றி அறிந்துகொள்ள முயன்றேன். அவள் கூட வேலை பார்த்தவர்களும் சரி. அவளின் சொந்தபந்தங்களும் சரி.
“அட நம்ம சுருதியா? அவ ரொம்ப நல்ல பொண்ணாச்சே. யார்கிட்டயும் எந்த பிரச்சினைக்கும் போகமாட்டா. …”
என்று அவளின் நல்ல குணங்களை அடுக்கிய அவளது சொந்தங்கள் ஒட்டுமொத்தமாய் அவள் அமைதியின் திருவுரு என்றனர்.
நானும் ‘அடடா நமக்கு சிக்கிட்டாடா ஒரு அடிமைன்னு’ ரொம்ப கெத்தா இருந்தேன்.
இந்த ஆண்டவனுக்கு என் மேல் என்ன கோபம்னு தெரியலைங்க. சில நேரங்களில் வீட்டில் சாமி கும்பிடும் போது நண்பர்களுடன் சினிமா பார்ப்பதற்காக ஸ்பெசல் கிளாஸ் இருக்குன்னு போயிருக்கேன். கோயிலுக்கு போகலாம்னு அம்மா கூப்பிடும்போது முக்கியமான டெஸ்ட் இருக்கும்மான்னு நண்பர்களுடன் அரட்டையடிக்க சென்றிருக்கிறேன். அதை எல்லாம் மனதில் வைத்து கர்வம் கட்டிய ஆண்டவன் என் வாழ்க்கை முழுதுக்கும் சேர்த்து தண்டனை கொடுத்திட்டார். நான் செஞ்ச சின்ன விசயத்துக்காக இப்படியா பண்ணுவார்?
ஒரு வாரம்தாங்க. ஒரே வாரம்தான். என் திருமணத்திற்கு பிறகு நான் சந்தோசத்தை அனுபவித்தது. அதன் பிறகு சண்டையும் சமாதானமுமாக என் வாழ்க்கை ஓட ஆரம்பித்தது.
சண்டையும் போட்டு சமாதானமும்தான் பண்றாளே? பிறகு என்ன உனக்கு பிரச்சினை? ஏன்டா எங்க நேரத்தை வீணடிக்கிறேன்னு நீங்க முறைக்கிறது எனக்கு புரியுது?
சண்டை மட்டும்தாங்க அவ போடுவா. சமாதானத் தூதை நான்தான் அனுப்பனும். அப்படியும் முறுக்கிக்கொள்வாள்.
ஒன்னும் இல்லைங்க. ஒரு கடைக்கு போனா எனக்கு அது வேணும். இது வேணும்ன்னு பிரச்சினை பண்ணா பரவாயில்லைங்க. அதெல்லாம் பண்ணமாட்டா. அநாவசியமா ஒரு பொருளை கேட்டு அடம் எல்லாம் பண்ண மாட்டா. அப்புறம் உனக்கு என்னடா பிரச்சினைன்னு நீங்க மீண்டும் எகிறுவது சரிதான்.
நான் என்னங்க பண்றது? அவகிட்டதான் மனசு விட்டு பேச முடியலை. கிடைச்ச உங்களையும் விட்டுட்டா எப்படி?
கடையில் நுழைஞ்சு வெளியில் வருவதற்குள் எங்களுக்குள் சண்டை ஆரம்பமாகி காண்போருக்கு கேளிக்கையாகிவிடும்.
கடைக்காரன் செய்த தப்பை நான் சுட்டிக்காட்ட விரும்பினால் திடீரென்று “நீங்கதான் தப்பே செஞ்சதுன்னு” எதிர்கட்சிக்கு வழக்காடும் வக்கீலாகிவிடுவாள்.
நீங்களே நியாயத்தை சொல்லுங்க. ஒரு பொண்டாட்டி என்னங்க பண்ணனும்? புருசனுக்குதானேங்க சப்போர்ட் பண்ணனும். அதை விட்டுட்டு எனக்கு நியாயம்தான் முக்கியம்னு தராசை கையில் பிடிக்காத நீதி தேவதையாக அவதாரம் எடுப்பாள்.
அதுவும் கூட்டு குடும்பத்தில் இருந்த வரைக்கும் கொஞ்சம் பரவாயில்லை.
என்னுடன் கோபமாக சண்டை போடும்போது யாராவது வந்துவிட்டால் அப்படியே மாறிவிடுவாள். அவர்களிடம் சிரித்துப் பேசி அவர்கள் கேட்டதை சொல்லி அனுப்பிவிட்டு மீண்டும் ஸ்விட்ச் போட்டது போல் பழைய முகபாவங்களை அப்படியே கொண்டுவந்து விட்ட இடத்தில் இருந்து தொடர்வாளே அதை என்ன என்று சொல்வது?
அப்பாடா! சிரிச்சிட்டா-ன்னு நான் ஆசுவாசப்படுத்திக்கிறதுக்குள்ளேயே என் சந்தோசத்துக்கு அல்பாயுசு வந்துடும்.
அந்நியன் படத்தில் பிரகாஷ்ராஜ் அடிக்கும் காட்சியில் விக்ரம் அம்பியாகவும் அந்நியனாகவும் மாறி மாறி நமக்கு காட்சி கொடுப்பாரே. அதே எஃபக்ட் கிடைக்கும்ங்க.