ஊர் உலகத்தில் திருமணத்திற்கு பிறகு மருமகளை மகனுக்கு சாப்பாடு போட அனுமதிக்காத தாய்மார்கள் இருப்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். மாறாக இங்கே என் தாய் சாப்பாடு போடு என்று சொன்னாலும் கேட்பதில்லை. என் தாயும் பார்த்துவிட்டு சொல்வதை விட்டுவிட்டார்.
கூட்டு கூடும்பத்தில் இருந்த போது சாப்பிட்ட தட்டை எடுக்க மாட்டேன். குடிப்பதற்கு யாராவது தண்ணீர் மொண்டு வந்து தரவேண்டும்.
ஆனால் தனிக்குடுத்தனம் வந்த பிறகு அந்த கொடுமையை கேட்காதீர்கள். ஒன்னா ரெண்டா? எத்தனையை சொல்றது?
அவள் சமைக்க உதவி செய்யனும். துணி துவைத்தால் காய வைக்கனும். டீ போடனும். ஒன்னு தெரியுமா? நான் அவளைவிட நல்லா டீ போடுவேன். அந்த அளவுக்கு எனக்கு டிரெயினிங் கொடுத்துட்டா.
குழந்தைகளோடு கொஞ்சி விளையாடுவதை அமைதியாக பார்த்துக்கொண்டிருப்பாள். அவர்கள் இல்லாத போது
“பிறந்த அன்னிக்கு கொண்டு போய் தள்ளுனீங்க. இன்னிக்கு பாசம் பொத்துக்கிட்டு வருதோ? அவங்க வளர்ந்த பிறகு கண்டிப்பா சொல்லுவேன். அவங்க பொண்ணா பிறந்ததே உங்களுக்கு பிடிக்கலைன்னு சொல்வேன்.”
அவள் மிரட்டலில் குழந்தைகளை கூட இயல்பாக பார்க்க முடியவில்லை.
இல்லற வாழ்க்கையில் இப்போது சந்தோச வரம் தரும் குட்டி தேவதைகளாக இருக்கும் என் பெண்கள் என்று குட்டிப்பிசாசுகளாக மாறுவார்களோ? என்ற பயம் எழுகிறது.
இப்ப இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னுதானே கேட்கறீங்க?
இன்னிக்கு அவ போன் செய்திருந்தா.
“எங்கே இருக்கீங்க?” என்றாள். பதில் சொன்னேன்.
எதற்கு கூப்பிட்டாள் என்று சொல்லாமல் இணைப்பை துண்டித்துவிட்டாள். இதில் இருந்தே அவள் கோபமாக இருக்கிறாள் என்று தெரிந்துவிட்டது. என்னதான் கோபமாக இருந்தாலும் மற்றவர்கள் முன் காட்ட மாட்டாள். நீங்க கொஞ்சம் துணைக்கு வந்தால்… என்னது வர மாட்டீங்களா?
ஐயோ என் வீடு வந்துடுச்சே. வீட்டுக்கு வெளியில் நின்னு என்ன நடக்குதுன்னு பார்க்கறீங்களா? என்ன பண்றது? என்னோட தலைவிதிப்படி நான் அனுபவிச்சுதானே ஆகனும்.
நான் உள்ளே நுழையும்போதே குழந்தைகளை மாடிக்கு விளையாட அனுப்பியிருந்தாள். குழந்தைகளுக்கு முன்பு சண்டை போட்டால் அவர்கள் மனநலம் கெடுமாம். இவள் சண்டை போடுவதால் யாரென்றே தெரியாத உங்களிடம் புலம்பும் அளவிற்கு என் மனநலம் கெட்டிருக்கிறதே. அது பரவாயில்லையாமா?
“சுருதிமா. எதுவுமே சொல்லாம போனை வச்சுட்டியே.”
“நான் கேள்விப்பட்டது உண்மையா?”
இவள் எதை கேள்விப்பட்டு இப்படி கோபப்படுகிறாள். இவளது கோபத்திற்கு பயந்துகொண்டு இவளிடம் மறைத்த விசயங்கள் ஒன்றா இரண்டா? எல்லாத்தையுமா கணக்கில் வச்சுக்க முடியும்?
இப்போதெல்லாம் சினிமாவில் வடிவேலு உள்குத்து வாங்கும்போது புலம்புவாரே அந்த வசனங்கள்தான் அதிகம் என் வாயிலிருந்து வெளிவருகினறன. இப்போது கூட ‘ஸ். அப்பா முடியலை’. என்றுதான் என் மனம் புலம்புகிறது
“எதைம்மா கேட்கறே?”
“ஓஹோ! அப்ப ஏகப்பட்டது கிடக்கு போல இருக்கே.”
ஐயய்யோ! நாடியை புடிச்சு பார்த்துட்டாளா? இவகிட்ட எதையுமே மறைக்க முடியாதா?
“ஏதோ சூப்பர் மார்க்கெட் வைக்கப் போறீங்களாமே.”
“ஆமாம்மா! நம்ம முருகேஷ் இருக்கான்ல. அவனோடதான் சேர்ந்து வைக்கப்போறதா பிளான்.”
“நம்ம முருகேஷ் இல்லை.” அவள் அழுத்திச் சொன்னாள்.
நான் தலையாட்ட வேண்டும் என்று நினைக்க கூட இல்லை. அதுவே தன்னால் ஆடி ஆமோதித்தது.
“நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன். அந்த ஆளை பார்த்தா நல்லவனா தெரியலை. அதுவும் உங்க குணத்துக்கு இந்த மாதிரி கூட்டு சேர்றது எல்லாம் சரிவராது. பேசி சிரிச்சாலே நல்லவங்கன்னு நம்பிடற ஆள் நீங்க.”
அவள் மறுத்துப்பேச எனக்குள் கோபம் துளிர்த்தது. அதற்கு என் நண்பனும் ஒரு காரணம்.
“ஏய் என்னடா பொண்டாட்டிகிட்ட சொல்றதுக்கு இப்படி பயந்து சாகறே? அப்ப நீ வீட்டில் எலி வெளியில் புலியா?” கிண்டல் தொனித்தது அவன் குரலில்.
அவனுக்கு முன்னாடி என்னவோ நான் தாழ்ந்து போய்விட்டதாக எனக்குள் ஒரு வலி.
“இல்லடா. நமக்கு சரிபாதி. அவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கனும்ல.”
“நீ சொல்றது சரிதான். அதற்காக எல்லா விசயத்திலும் சரிவராது. நீ அவங்க சொல்றபடி நடந்தா வேலைக்காரனாகவே தான் இருக்கனும். முதலாளியாக முடியாது. அதுதான் உன் விருப்பமா?”