பின்னே.....
பிறகென்ன எப்படியோ அவங்க லவ் ஸ்டார்ட் ஆகியிருக்கு. அதற்கு பின்னால எப்போ எங்கே சண்டை ஆரம்பித்தாலும் அவன் ஃபிரண்ட்ஸ் எல்லோரும் அவளைத் தேடிப் போய் கூப்பிட்டு வந்திடுவாங்களாம்.
ம்ம்
அவளைப் பார்த்ததும் அப்படியே இவனும் பாஸ் (Pause) பட்டன் அழுத்தின மாதிரி சண்டையை நிறுத்திடுவானாம்.
ஓ... உற்சாகமாக கேட்டுக் கொண்டிருந்தார்கள் மற்றவர்கள்.
ஒரு தடவை அவன் சண்டயை நிறுத்தினதும் எதிரில இருந்தவன் சட்டுன்னு தள்ளி விட்டதில் அவன் கண் புருவத்துக்கு மேல வெட்டி ஒரே ரத்தமாம்..
அப்புறம்...
ஏண்டா நான் என்ன கதையா சொல்லிகிட்டு இருக்கேன். போங்கடா...
ஏய் சொல்லுடா...
வேற அதிகமா எதுவும் சொல்லல, அந்த பொண்ணு ரொம்ப வசதியாம், அவன் மிடில் கிளாஸ். அவங்க காதல் எங்கே சேர்ந்திருக்கப் போகிறது. இப்படி ரவுடிக்கு எங்கே வேலை கிடைத்திருக்கும்.எங்கயாவது ரவுடித்தனம் செய்துக் கொண்டு இருப்பான்.என்னச் சொல்றே நீ....
அது சரி தாண்டா...சரி நேரமாச்சுப் போகலாம்.
சற்று நேரத்தில் அரவம் அடங்கியது , அவர்கள் வளனின் மனதில் ஆரவாரத்தை எழுப்பிச் சென்றிருந்தார்கள். கடல் அலையின் ஊடே கிழிஞ்சல்கள் கரைக்கும் கடலுக்குமாய் பயணிப்பதுப் போல அவன் ஞாபக அலையில் ஒரு சில நினைவுகள் வந்து அலைமோதின.
அ...ர..சு & பனி அ..ர..சி .....எங்க பெயரிலேயே என்ன ஒரு பொருத்தம் பார்த்தியா?! ....
அரசுவின் வாயிலிருந்து ஆயிரத்து நானூற்று எண்பத்தி ஒன்றாவது முறையாக இந்த வசனத்தைக் கேட்டு எஸ்கேப் ஆக முடியாமல் "டேய் வேற ஏதாச்சும் பேசுடா..." முனகினான் ஒருவன்.
"ஆனாலும் இவனுக்கு காதல் வந்திருக்க கூடாதுடா"....மற்றவன்..
பெண் என்றாலே "போடா அதெல்லாம் அறிவுக் கெட்டவனுங்க தான் பொண்ணுங்க கிட்ட பேசுவானுங்க. ஒண்ணா நம்பர் பொய்காரிங்க நம்பவே கூடாது" என்பவன் பெண்களிடம் நட்பு பாராட்டவே தயங்குபவன் இப்படி ஒரு பெண்ணிடம் உயிராய் மயங்குவான் என்றோ, அவள் கண்ணசைவில் செயல்படுவானென்றோ யாருமே நினைத்திருக்கவில்லை.
"அவள் தேவதைடா, அதட்டிப் பேசக் கூட தெரியாது. இப்படில்லாம் பெண்கள் இருப்பாங்கன்னு எனக்கு இதுவரைத் தெரியாது."
"ஏண்டா நீ இப்படி பேசுறது கேட்டு ஆச்சரியமா இருக்கு. சிஸ்டரைப் பற்றி உயர்வா பேசுற நீ முன்னெல்லாம் பெண்கள்னாலே வெறுப்பா இருப்ப... மற்றப் பெண்களை விடு உன் அம்மா எவ்வளவு அமைதி அவங்களைப் பார்த்துமா நீ பெண்களைக் குறைவாப் பேசினே அது தான் நம்ப முடியலை"
" அம்மா பாவம்டா அவங்க வாழ்க்கையையே ஒரு சிலர் தன்னோட பெருமைக்காக வீணாக்கிட்டாங்க.நல்ல விதமா மற்றவங்க சொன்னதை மட்டும் நம்பி சரியா விசாரிச்சிப் பார்க்காம குடிகாரனுக்கு கட்டிக் கொடுத்த என் அம்மம்மா ஒரு பெண். புகுந்த வீட்டில புருஷன் கொடுமையில் கஷ்டப் பட்டுக்கிட்டு இருந்த அம்மாவை புள்ளத்தாச்சின்னும் பார்க்காம கஷ்டப் படுத்தின என் பாட்டி, அத்தைகள் இவங்கல்லாம் பெண்கள். வேறு வழியில்லாம அம்மம்மாவோட வீட்டுக்கு வந்த எங்க அம்மாவையும் என்னையும் கடுமையா பேசுவதும், முகம் திருப்புவதும் புறக்கணிப்பதுமாக துன்புறுத்திய என் மாமியும் ஒரு பெண்தானேடா.பின்னே பெண்கள் மேல கோபம் வராம..." கேள்விக்கு பதில் சொல்வதோடு நிறுத்தாமல் தொடர்வான்.
எனக்கு சின்ன வயசில இருந்து கிடைக்க வேண்டிய அரவணைப்பு கிடைக்கவே இல்லைடா. எல்லோரும் அம்மா அப்பா கூட வெளியே போகும் போது எனக்கு எவ்வளவு ஆசையா இருக்கும் தெரியுமா?. அம்மா எவ்வளவுதான் பார்த்துக் கிட்டாலும் நான் சின்ன வயசில அப்பாவுக்கு ஏங்கினது ஜென்மத்துக்கும் மனக்குறையாவே இருக்கும்டா. அம்மா என் படிப்புக்காகத் தான் வேலைக்கு போறாங்க, என் மேல எவ்வளவு அன்பு இருந்தாலும் அவங்க வேலை காரணமா அன்பைக் காட்டுறதுக்கோ என்னை முழு நேரமும் கவனிக்கிறதுக்கோ அவங்களுக்கு நேரமில்லை அவங்களை குறைச் சொல்ல முடியுமா?
கோபத்தில நான் செய்கிற தப்புக்கெல்லாம் அம்மா மன்னிப்பு கேட்கிறது மனசுக்கு கஷ்டமா இருக்கு. ஆனா யாராவது எதுவும் சொன்னால் என்னால கோபத்தை அடக்க முடியலடா.
இவ்வளவு கஷ்டத்துக்கு காரணமான என் அப்பனை தூக்கிப் போட்டு மிதிக்கிறதுக்கு வழியில்லாம சீக்கிரமே செத்துப் போயிட்டான். கொடுத்து வச்சவன்..........பொருமும் அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமர்ந்திருக்கும் நண்பர் கூட்டம்.
நல்லவனோ கெட்டவனோ எல்லோருக்கும் அமைந்து விடுகின்றது ஒரு நண்பர் கூட்டம். அவர்கள் சமூகத்தில் எப்படி பட்டவர்களாகவும் இருக்கலாம். ஆனால்,அவர்கள் நட்பிற்க்குள் மட்டும் களங்கமும், கயமையும் கிடையவே கிடையாது.
"சரி நீ சிஸ்டரை முதன் முதலா எப்போ பார்த்த அதைச் சொல்லு? "
அவன் அமைதியாக அமர்ந்து இருப்பதை விரும்பாத கூட்டம் அவனை சகஜமாக்க, கேட்ட கதையையே மறுபடி கேட்க தயாரானது.