தெரியல - சத்தியசீலன் கண்ணன்
சென்னையின் நெரிசலான நான்கு சாலைச் சந்திப்பு, பிற்பகல் 3:00 மணி, ஊர்திநடமாட்டக்குறிகை சிவப்பு நிறத்திற்கு மாறிய நேரம், சாலை ஓரத்திலிருந்து ஒரு சிறுமி தன் கையில் வைத்திருந்த சில புத்தகங்களை அங்கு நின்றவர்களிடத்தில் விற்பதற்காக கொண்டு சென்றாள், அங்கு நின்றவர்களில் பெரும்பாலானோர் அச்சிறுமியின் முகத்தை கூட பார்க்காமல் வேண்டாம்! வேண்டாம்! என்று சொல்லி அனுப்பிவிட்டனர், அச்சிறுமியும் ஒருவரிடத்திலேயே நிற்காமல் அடுத்த அடுத்த வாகனம் நோக்கி சென்றாள், சில மகிழுந்துகள் ஜன்னல் காண்ணாடியை கூட திறக்கவில்லை, கடைசியில் அங்கு இருந்தவர்கள் யாரும் புத்தகம் வாங்கவில்லை !!!.
சாலை ஓரமாக நின்றுகொண்டு அச்சிறுமியை கவனித்துக் கொண்டிருந்த என்னையும் அவள் பார்த்துவிட்டாள், குறிகையும் பச்சை நிறத்திற்கு மாறியது, அச்சிறுமியும் என்னை நோக்கி வந்தாள் !, "20 ரூபா தான் ண்ணா ஒரு புத்தகம் வாங்கிகொங்கண்ணா !!!" என்று கேட்டவுடன் நானும் அவர்களை போலவே வேண்டாம்ன்னுதான் தலை ஆட்டினேன், "அண்ணா காலைலேர்ந்து சாப்பிடலைண்ணா!"ன்னு சொன்னவுடன் என்னமோ ஒன்று மனதிற்குள் குத்தியது போல் தோன்ற உடனே 20 ரூபா கொடுத்துவிட்டு அந்த புத்தகத்தை வாங்கி கொண்டு அந்த இடம் விட்டு நகர்ந்தேன்.
பேருந்தில் ஏறி விடு திரும்பும் போது யோசிக்கிறேன், இந்த வயசுல அந்த சிறுமி பள்ளிகூடம் கூட போக முடியாமல் பசிக்காக இப்படி புத்தகம் விற்குறது யார் குற்றம்?
என்னைய மாதிரியே அந்த சிறுமிக்கிட்ட காசுகுடுத்து புத்தகத்த வாங்குனதால தற்காலிகமா பிரச்சனையத் தீர்த்துட்டோம்ன்னு பெருமிதத்தோட கேவலமா தப்பிக்குறவங்க மேலயா?, நாகரிகவளர்ச்சியிலும், விஞ்ஞானவளர்ச்சியிலும் மட்டும் கவனம் செலுத்திவிட்டு, மக்களுக்கு இடையில் இருக்குற சமநிலை வளருதான்னு கவனிக்காம விட்டவங்க மேலயா?, இந்த மாதிரி ஒரு அமைப்பை படைத்த கடவுள் மேலயா?
"யார் மேல குற்றம் சொல்லுறதுன்னு தெரியல !!!"
இப்ப எதுக்கு பழிபோட ஆள் தேடுறன்னு கேக்குறிங்களா, இந்த சமுதாயம் பிரச்சனையை நிரந்தரமா தீக்குறது எப்படின்னு யோசிக்குறத விட்டுட்டு, எப்படி அடுத்தவங்கமேல பழிபோட்டுட்டு கடமைலேர்ந்து தப்பிக்கலாம்ன்னு சொல்லிக் கொடுத்து இருக்கு, அதான் !.
பின்குறிப்பு:
கிழ உள்ளத படிச்சிட்டு, இப்ப எதுக்கு சம்மந்தமே இல்லாம இத சொல்லுறன்னு கேக்காதிங்க!, எல்லாரும் சொல்லுறாங்க அதான் நானும் சொல்லலாம்ன்னு!.
இந்திய குடிமகனா/மகளா ஓட்டு உரிமை இருக்குற எல்லோரும் தன் கடமையைச் செய்து, எல்லா பேருந்து நிறுத்தத்திலும் எழுதி இருக்குற மாதிரி 100% வாக்குபதிவுக்காக முயற்சிப்போமே!!!
சரியாக ஒரு வருடம் கழித்து இந்த சிறுகதைப் பகுதியில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி நன்றி !
கதைய விட பின்குறிப்புதான் அதிகமா இருக்கோ, கடுப்பாகாதிங்க போய்ட்டேன்!.
{kunena_discuss:785}