நெடுந்தெரு – வின்னி
அந்த அமைதியான கனேடியக் கிராமத்தில் ஒரு விவசாயி தனது ஊருக்கு ஒரு பெரிய தெரு வேணும் என்று அந்த ஊர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் விண்ணப்பித்து இருந்தான்.
அதற்கு அவர், அந்த அமைதியான கிராமத்துக்கூடாக நெடுந்தெருவை அமைத்தால்,அந்தத் தெருவால் வேகமாகப் போய் வரும் வாகனங்களால் அங்கு அமைதி கலைந்து போகும் என்றார்.
அதற்கு அந்த விவசாயி அத் தெருவால் அக் கிராமத்துக்கு பலர் உல்லாசப் பிரயாணிகளாக வருவார்கள், பலர் வந்து குடியேறுவார்கள், கிராமத்தில் உற்பத்தியாகும் பொருட்களை பட்டினங்களுக்கு இலகுவாகக் கொண்டு செல்ல முடியும். வியாபாரம் பெருகும், பொருளாதாரம் வளர்ச்சி அடையும், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றான்.
அவரும் யோசித்தார். அநேக மக்கள் அந்தக் கிராமத்தில் வந்து குடியேறினால் தனது வாக்குகளும் பெருகும் என்று அவருக்கும் அது நல்ல யோசனையாகத் தெரிந்தது.
“சரி நான் மந்திரியுடன் அதைப்பற்றிப் பேசுகிறேன்” என்றார்.
மந்திரியும் சம்மதித்து அந்தத் நெடுந்தெருவும் அக் கிராமத்துக்கு வந்துவிட்டது.
ஆனால் அந்த விவசாயிக்கு வேறொரு பிரச்சனை ஆரம்பித்தது!
அத்தெருவால் வேகமாகப் போகும் வாகனங்களால் அந்தத் தெருவைக் கடக்கும் அவனது கோழிகளும், அத்தெருவின் அருகில் இருக்கும் குளத்தில் தண்ணீர் குடிக்க வரும் அவனது ஆடுகளும் ஒவ்வொன்றாக வாகனங்களில் அடிபட்டு பலியாகின. அவனது வருமானமும் குறையத் தொடங்கியது.
விவசாயி அந்த ஊர் போலீஸ் நிலையத்துக்குப் போய், போலீஸ் அதிகாரியிடம், " ஐயா! வேகமாகப் போகும் வாகனங்களின் வேகத்தைக் குறைக்க ஏதாவது செய்ய வேணும்? என்றான்.
அதற்கு அந்த போலீஸ் அதிகாரி "என்னை என்ன செய்யச் சொல்கிறாய் " என்றார்.
“என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்குத் தெரியாது, வாகனங்களின் வேகத்தைக் குறைக்க ஏதாவது செய், எனது கோழிகளையும் ஆடுகளையும் காப்பாற்று” என்றான் அந்த விவசாயி.
அடுத்தநாள் குளத்துக்கு அருகே தெருவோரமா,
“வேகத்தைக் குறை- பாடசாலைஅருகில் ”
என்று ஒரு பலகை தொங்கியது.
மூன்று நாட்களின் பின்னர் மறுபடியும் அந்த விவசாயி அந்த போலீஸ் அதிகாரியிடம் போய். "அந்த பாடசாலை அருகில் என்ற அறிவிப்பு ஒன்றும் செய்யவில்லை”, அந்த வாகனங்கள் எல்லாம் இன்னும் வேகமாகத்தான் போகின்றன” என்றான்.
அடுத்தநாள் குளத்துக்கு அருகே தெருவோரமாக,
“வேகத்தைக் குறை- பிள்ளைகள் விளையாடுகிறார்கள் ”
என்று ஒரு புதிய அறிவிப்புப் பலகை தொங்கியது.
வாகனங்களில் வேகம் குறையவில்லை. விவசாயியும் முறையிடுவதை நிறுத்தவில்லை. "உனது அறிவிப்பு ஒன்றும் பலனளிக்கவில்லை என்ன செய்யப்போகிராய்?" என்றான்.
போலீஸ் அதிகாரியும் கோபத்துடன் "நீயே ஏதாவது செய்" என்றார்.
நாட்கள் கழிந்து விட்டன, விவசாயி போலீஸ் நிலையத்துக்கு வருவது நின்று விட்டது. போலீஸ் அதிகாரிக்கு ஆச்சரியம்.
வாகனங்கள் இன்னும் வேகமாகப் போகின்றனவா அல்லது விவசாயி அறிவிப்புப் பலகையை மாற்றி விட்டானா என்று ஒரு சந்தேகம்.
எதற்கும் போய்ப் பார்த்து வருவோம் என்று தனது வாகனத்தில் அந்த நெடுந்தெருவால் விவசாயியின் வீட்டை நோக்கி செல்கிறார்.
வேகமாகப் போன வாகனங்கள் எல்லாம் தனக்கு முன் வேகத்தை குறைப்பதை அவதானிக்கிறார்.
தான் வருவதைக் கண்டுதான் அவர்கள் அப்படி வேகத்தை குறைக்கிறார்கள் என்று நினைத்தபடி குளத்துக்கு அருகே வந்துவிட்டார்.
சாரதிகள் வேகத்தை குறைத்து அந்தக் குளத்தை நோட்டம் விட்டபடி போகிறார்கள்.
தெருவின் அருகே தொங்கிய பலகையைக் க ண்டுஆச்சரியத்தில் மூழ்கினார்
“பெண்கள் குளிக்கும் இடம்”
பி .கு: நீங்கள் இக் கதையை எவ்விதத்திலும் சிந்தித்துப் பார்க்கலாம். நான் நினைத்தது வாகனச் சாரதிகள் குழந்தைகளை மதிப்பதில்லை ஆனால் பெண்களை மதிக்கிறார்கள்.
{kunena_discuss:785}