2017 போட்டி சிறுகதை 19 - காதல் - மங்கலஷ்மி
This is entry #19 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - காதல் வாழ்க்கை
எழுத்தாளர் - மங்கலஷ்மி
ஓரு வாரமாய் ஜானகி தன் கணவரிடம், தன் மனதில் இருப்பதைப் பற்றி பேசிவிட வேண்டும் என்ற எண்ணத்துடனேயே, அலுவலகத்தில் இருந்து வரும் அவனை வரவேற்பாள். ஆனால், அவன் வந்தவுடன் எப்படி சொல்லுவது என்று தவிப்பாள், சொன்னால் எப்படி எடுத்துக்கொள்வானோ! என்று அஞ்சுவாள்.
இதை சொல்லப்போக, சுமுகமாய் சென்று கொண்டிருக்கும் தங்கள் மணவாழ்க்கை கேள்விக்குறியாகிவிடுமோ என்ற எண்ணமும் அவளை சொல்ல விடாமல் தடுக்கும்.
“என்ன ஜானகி ஒரு மாதிரியா இருக்க உடம்புக்கு ஒன்னுமில்லையே” கணவனுக்கே உரிய அக்கறையில் அன்புமிளிர செல்வம் கேட்பான்.
அப்பொழுதும் ஜானகி வாயை திறந்தவளில்லை. ஜானகி தான் அப்படி என்றால், செல்வம் அதைவிட மோசமான நிலையில் இருந்தான். வீட்டிற்கு வந்தோம் மனைவியிடம் அன்பாக இரண்டு வார்த்தை பேசினோம் என்றில்லாமல் எப்பொழுதும் சிந்தனை வசப்பட்டே இருந்தான். ஜானகி இதனை கவனித்தாலும், தன் மனதில் ஓடும் எண்ணத்திலேயே உழன்றதால் அவனை எதுவும் கேட்கவில்லை.
செல்வம், ஜானகியை கை பிடித்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அன்று முதல் இன்று வரை அன்பு சிறிதும் குறையாமல் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து அன்னியோன்யமாகத்தான் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருந்தும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் மட்டும் எட்டாக கனியாக இருந்தது.
வெளியூருக்கோ!திருமண விழாவுக்கோ எங்கு சென்றாலும் கேட்காத ஆளில்லை. தூண்டித் துருவி தூற்றாத ஆளில்லை. ஆனால் இவர்களோ!அதற்காக எள்ளளவும் கவலை கொண்டவர்களில்லை. பிள்ளை ஒன்றுதான் வாழ்க்கையா? அதற்காக கவலைப்பட்டு இப்பொழுது இருக்கும் நிம்மதியை கெடுத்துக்கொள்வானேன் என்று எண்ணி மற்றவர் கூறுவதையும், குழந்தை இல்லை என்பதையும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொண்டதி;ல்லை.
மருத்துவரிடம் செல்லவும் மனமில்லை, எப்படியும் யாரேனும் ஒருவருக்கு குறையிருக்கும். தற்பொது யாருக்கு குறை என்பது தெரியாததால் பிரச்சனையின்றி வாழ்க்கை ஓடுகிறது. இது தெரிந்தால் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் என்ற பெயரில் வேதனை அதிகமாகும். நிம்மதி பறிபோகும், வாழ்க்கை தடம்புரளும், குள்ளநரிகள் புகுந்து குட்டையைக் குழப்பும். இப்பொழுது குழம்பாத குட்டை அப்பொழுது குழம்பிவிடும்.
என்னதான் உறுதியா இருந்தாலும் ஒரு கட்டத்தில் உடைஞ்சி போயிடும். அதனால் ஒன்றும் வேண்டாம் என்று திட்டவட்டமாக செல்வம் மறுத்து விட்டான். ஜானகி எவ்வளவு சொல்லியும் செல்வம் மறுத்ததோடு அவளையும், தனக்கு தெரியாமல் மருத்துவரிடம் எல்லாம் செல்லக் கூடாது என்று கூறிவிட்டான்.
அதனால் இருவர் வாழ்வம் சுமுகமாய் சுகமாய் போய்க்கொண்டிருந்தது. அந்த வேளையில் தான் ஒரு நாள் நண்பன் கோரிய உதவியைத் தட்ட முடியாமல், அனாதை இல்லம் ஒன்றிற்காக நிதியைத் திரட்டினான்.
அந்த குழந்தைகள் காப்பகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த நண்பனிடம், தான் திரட்டிய நிதியை கொடுக்க செல்ல, செல்வம் புறப்பட்ட பொழுது வீட்டில் சும்மாவேணும் பொழுதைக் கழித்த ஜானகியும் ஒட்டிக்கொண்டாள்.
அங்கு சென்று வந்ததில் இருந்து தான், ஜானகியின் மனம் ஒரு நிலையில் இல்லை, எப்பொழுதும் எதையோ அசைபோட்டவளாகவே இருந்தாள். இத்தனை ஆண்டுகளில் ஜானகி இது போல் இருந்ததில்லை, அதனால் எது நடந்தாலும் நடக்கட்டும், இன்று சொல்லிவிட வேண்டும் என்று முடிவு செய்தாள்.
அன்று இரவு இருவரும் உணவு அருந்த அமர்ந்தனர். சாதத்தை தட்டில் போட்டபடியே ஜானகிதான் முதலில் தொடங்கினாள்.
என்னங்க!... நான் உங்கிட்ட ஒண்ணு சொல்லனும்... அதற்கு மேல் ஜானகியால் பேச முடியவில்லை.
என்ன? ஜானகி!... என்ன சொல்லனும். நான் கூட ஒரு விஷயம் சொல்லனும். நீ அதை எப்படி எடுத்துக் கொள்;ளுவாயோ! தெரியலை. என்றவன் ஒரு நிமிடம் அமைதி காத்தான். பின்,
சரி, நீ ஏதோ சொல்ல வந்தியே, அதை சொல்லு.
இல்லைங்! அது வந்து...
“என்ன ஜானகி, என்கிட்ட என்ன தயக்கம், எதுவாக இருந்தாலும் தயங்காம சொல்லு”.
“நாம... நாம... ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கலாமே”!... மேற்கொண்டு ஜானகிக்கு பேச்சுவரவில்லை.
என்ன சொல்லுவானோ என்ற தயக்கம், பயம் நெஞ்சை அடைத்தது. கண்கள் கலங்கியது.
ஜானகி!... ஜானு!... என்று செல்வம் அழைத்தானே! தவிர அவனுடைய கண்களும் கலங்கத் தொடங்கியது. எதை நினைத்து அவனும் இதுநாள் வரை சிந்தனை வயப்பட்டிருந்தானோ, அதையே ஜானகி கூறியதில் ஏற்பட்ட மகிழ்ச்சி சந்தோஷம் மேற்கொண்டு அவனாலும் பட்டென்று பதில் சொல்ல முடியவில்லை. நெஞ்சும் ஆனந்தத்தில் படபடத்தது . இதுதான் காதல் என்பதோ!...
எதிர்பா, மிரட்டலா என்பதறியாமல் ஜானகி முழிக்க..., செல்வமே பேச்சை தொடர்ந்தான்.