2017 போட்டி சிறுகதை 37 - என் முகவரி மாற்றிவிட்டாய்..!! - சித்ரா.வெ.
This is entry #37 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - சூழ் நிலைக் கதை -கதையை தொடக்கத்தில் இருந்து தொடர்க...
எழுத்தாளர் - சித்ரா.வெ.
பழைய மாணவர்கள் தினத்தை ஆர்ப்பாட்டத்துடன் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களிடையே திடீரென அமைதி... அந்த விசாலமான அறையின் வாசலில் நின்ற உருவத்தின் வசீகரமும், கம்பீரமும் அவர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தது...
மெல்ல அமைதியை கிழித்துக் கொண்டு ஒரு குரல் ஒலித்தது...
"இது யாருன்னு தெரியலையா? எண்ணெய் வச்சு சப்புன்னு வாரின முடியோட, நீள மூக்கோட இருந்த... சோடாபுட்டி சேது.." என்று அங்கிருந்தவர்களில் ஒருவன் கூற..
அதற்கு முன்னரே அவனின் தோற்றம் மாறியிருந்தாலும் அந்த நீள மூக்கை வைத்து மற்றவர்களும் அவனை அடையாளம் கண்டுக் கொண்டனர். ஆனால் இத்தினம் தங்கள் கல்லூரி காலங்களை சந்தோஷமாக அசைப்போட்டுக் கொண்டிருந்தவர்கள், அதற்காக ஆவலாக வந்தவர்கள், சேது என்ற ஒருவனை மட்டும் மறந்துப் போயிருந்தனர்... அவனின் வருகையை யாரும் அங்கு எதிர்பார்த்து காத்திருக்கவில்லை... ஒருவளை தவிர.. அவள் தான் மித்திலா...
அதற்குள் அங்கு வந்த அந்த கல்லூரியின் நிர்வாகி "அட வாங்க சேதுராமன் வாங்க..." என்று வரவேற்றவர்... பின் எல்லோரிடமும் பேசினார்...
"இந்த மருத்துவக் கல்லூரியில் படித்த நீங்களெல்லாம், இப்போது ஒரு நல்ல நிலைமையில் இருப்பதை பார்த்து எனக்கு சந்தோஷமாக இருக்கிறது... அதுவும் சேதுராமனை பற்றி நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது... அவர் கண்டுபிடித்த மருந்துகள் இப்போ இந்தியா முழுக்க பேசப்படுகிறது... இன்னும் அது உலகளவிற்கு பேசப்பட வேண்டும்... அவர் இன்னும் அரிய நோய்களுக்கும் மருந்துகளை கண்டுப்பிடிக்க வேண்டும்..." என்று சொன்னபோது எல்லோரும் ஆச்சர்யத்தோடு சேதுராமனை பார்த்தனர்...
பக்கவிளைவுகள் அதிகம் இல்லாத மருந்துகளை கண்டுப்பிடித்திருக்கும் சேதுராமனை பற்றி மருத்துவ உலகத்தில் அறியாதவர்களே இருக்க முடியாது... ஆனால் அந்த சேது.. இவனா..?? எல்லோரும் அதிசயித்தனர்...
பின் எல்லோரும் அவனை சூழ்ந்துக் கொண்டனர்... தங்களின் இணைக்கு அவனை அறிமுகப்படுத்தி வைத்தனர்... சேது என்னை ஞாபகம் இருக்கா..?? என்னை ஞாபகம் இருக்கா..?? என்று அவனை மறந்தவர்கள் எல்லாம் அவனுக்கு தங்களை நினைவில் இருக்கிறதா..?? என்றுக் கேட்டு கொண்டிருந்தனர்... இதையெல்லாம் மித்திலா ஒரு ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்...
இப்படி ஒரு நாள் வரவேண்டும் என்று அவனிடம் கூறியவள் அவள்... அப்படி நடக்கவும் வேண்டும் என்று எதிர்பார்த்தவள்... அந்த நாளும் இன்று வந்ததில் ஆனந்தப்படுபவள்... இப்போதோ மனம் கடந்தக் காலத்தை நோக்கி தானாக சென்றது...
அது ஒரு பெரிய மருத்துவக் கல்லூரி... பணக்காரர்கள் மட்டுமே படிக்கும் கல்லூரி... மித்திலாவின் அப்பாவும் பெரிய பிஸ்னஸ் மேன்... அவள் மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதும், அவளை இந்த கல்லூரியில் சேர்த்துவிட்டார்... இப்படிப்பட்ட கல்லூரியில் ஏழை மாணவனாக சேது சேர்ந்தான்.... அவன் கல்விக்கான செலவை ஒருவர் ஏற்க முன்வந்ததால், அவனுக்கு இந்த பெரிய கல்லூரியில் இடம் கிடைத்திருந்தது...
கல்வி செலவை ஒருவர் ஏற்றிருந்தாலும், அவன் வசதிக்கு அவனால் எளிமையாக தான் கல்லூரிக்கு வர முடிந்தது... வசதியான வீட்டில் இருந்து படிக்க வந்தவர்களுக்கெல்லாம் அவனை பார்க்கும்போது இளக்காரமாக தான் தெரிந்தது... மற்றவர்களின் கேளிப்பார்வைகளையும், பேச்சையும் காதில் கேட்டாலும், அதை பொருட்படுத்தாது ஒரு அப்பாவியாக தான் அவன் இருந்தான்.... படிப்பு மட்டுமே அவசியம் என்பதே நோக்கமாக நினைத்திருந்தான்....
அப்படி இருந்த சேதுவிடம் முதலில் ஒரு இரக்கத்தின் பேரில் தான் மித்திலா பழகினாள்... பின் நாளாக நாளாக அவர்களுக்கிடையே ஒரு நல்ல நட்பு உருவானது... சில பேர் அவனை சோடாபுட்டி, கண்ணாடி என்று கேளியாகவும்... சில பேர் சேது என்றும் அழைக்க, இவள் மட்டும் அவனை ராம் என்று அழைப்பாள்...
இவர்களின் நட்பை பார்த்து சில பேர் கேளி செய்வார்கள்... அப்போது தான் காதல் கொண்டேன் படம் வந்த புதிது... "ஏ இங்கப் பாருடா... தனுஷும், சோனியா அகர்வாலும்... டேய் சோடாபுட்டி அந்த மித்திலாவை நம்பாதடா... உனக்கு டிமிக்கி கொடுத்துட்டு ஸ்மார்ட்டா இருக்கவனயா பார்த்து காதலிக்கப்போறா... அப்புறம் நீ மித்திலா, மித்திலான்னு தனுஷ் மாதிரி சைக்கோவா ஆகிடப் போற..." என்று ஒருவன் சொல்ல, " டேய் அதுக்கு தான் அவனுக்கு முன்னாடியே அவங்க வீட்ல சேதுன்னு பேர் வச்சிட்டாங்க போல... லாஸ்ட்டா அவன் ஏர்வாடிக்கு தான் போகப் போறான்..." என்று இன்னொருவன் கேளி செய்தான்...
இப்படி அடிக்கடி அவனை மித்திலாவோடு சேர்த்து கேளி செய்வார்கள், "அவங்க கிடக்காரங்க விடு ராம்... நம்ம ஃப்ரண்ட்ஷிப் பார்த்து அவங்களுக்கு பொறாமை..." என்று அடிக்கடி மித்திலா கூறுவாள்... சேது அப்போதும் அமைதியை கடைப் பிடிப்பான்...
இப்படியே அவர்கள் நட்பு தொடர்ந்துக் கொண்டிருக்க, கல்லூரி காலம் முடியும்போது மித்திலாவை காதலிப்பதாக சேது கூறினான்... மித்திலா அதை எதிர்பார்க்கவில்லை... அதை தவறாகவும் நினைக்கவில்லை...
இப்போது தான் எம்.பி.பி.எஸ் படிப்பு முடிந்தது... அதற்கு மேல் மேற்படிப்பு படிக்க வேண்டும்... ஒரு நல்ல டாக்டர் என்ற பேர் வாங்க வேண்டும்... இது மட்டும் தான் அவள் மனதில் இப்போது நினைப்பது... அதற்கு மேல் காதல், கல்யாணம் இதைபற்றியெல்லாம் அவள் நினைத்துப் பார்த்ததில்லை... அதுமட்டுமில்லை, சேதுவிற்கும் இவள் மேல் இருப்பது காதல் என்று சொல்ல முடியாது... இந்த கல்லூரியில் மற்றவர்கள் புறகணிப்பில் இவள் மட்டும் அன்பாக பழகியது அவனுக்கு அப்படி ஒரு எண்ணத்தை வரவைக்க காரணமாயிருந்தது என்று நினைத்தாள்...
மனதில் நினைத்ததை வெளிப்படையாக அவனிடமே கூறினாள்... "அப்படியெல்லாம் இல்லை மித்திலா... ஆரம்பத்தில் பழகிய கொஞ்ச நாளிலேயே நான் உன்னை காதலிக்க ஆரம்பிச்சிட்டேன்... ஆனால் என்னோட நிலையை நினைத்து தான் இவ்வளவு நாள் சொல்லாம இருந்தேன்... அதுமட்டுமில்ல, இதனால நம்ம நட்பு பாதிக்கக் கூடாதுன்னு நினைச்சேன்... ஆனா இப்போ நாம பிரியப்போற நேரத்துல... என்னோட மனசுல இருக்கறதை சொல்லாம இருக்க மனசு வரல... ஐ லவ் யூ மித்திலா.."
"ஏன் ராம்... படிச்சு முடிச்சதும்... காதல், கல்யாணம்னு அடுத்த ஸ்டேஜ்க்கு போகனும் இல்ல... உன்னை மாதிரி ஒருத்தனுக்கு அதுதான் வாழ்க்கை... படிப்பு, வேலை, காதல், கல்யாணம் அதுதான் வாழ்க்கை... இப்படியே ஒரு எல்லைக்குள்ள உன்னோட வாழ்க்கை அடங்கி போய்டனும்... அதை தாண்டி எதுவும் சிந்திக்க தோனாதில்ல.."
"அப்படியில்ல மிது.... எதாவது சாதிக்கனும்னு எனக்கும் ஆசையிருக்கு... சாதிச்சிட்டு தான் உன்கிட்ட என்னோட காதலை சொல்லனும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்... ஆனா அதுவரைக்கும் நீ எனக்காக காத்திருப்பியான்னு ஒரு பயம்... எனக்காக நீ காத்திருப்பேன்னு ஒரு வார்த்தை சொல்லு மிது.... நீ என்கூட எப்பவும் இருப்பங்கிற சந்தோஷத்துல, நான் பெரிய ஆளா வந்துக் காட்றேன்.."
"எனக்காக தான் நீ பெரிய ஆளா வரனுமா..?? நீ படிச்சு நல்ல நிலைமைக்கு வரனும்னு உன்னோட அம்மா, அப்பா நினைக்கிறாங்களே.. அவங்களுக்காக வரக் கூடாதா..?? உன்மேல நம்பிக்கை வச்சு நீ பெரிய ஆளா வருவன்னு உன்னைப் படிக்க வைக்கிறாரே.. அவருக்காக நீ சாதிக்கக் கூடாதா..?? இதோ இந்த கல்லூரியில் இன்னும் உன்னை அலட்சியமாகவும், கேவலமாகவும் நினைக்கும் இவங்க முன்னாடி நீ ஒரு உயர்வான நிலைக்கு வந்துட்டன்னு காட்ட வேண்டாமா...??
நீ அப்படி ஒரு நிலைக்கு வந்தா.. நான் என்ன..?? என்னைவிட பெஸ்ட்டா ஒரு பொண்ணு உனக்கு கிடைப்பா ராம்... எனக்கு இப்போ காதலிக்கிற எண்ணமெல்லாம் இல்ல... அதனால நீயும் அந்த எண்ணத்தை விட்டுவிடு... இனி நாம நண்பர்களாக பழகறது கூட நல்லா இருக்காதுன்னு நினைக்கிறேன்.. எப்போதாவது சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைச்சா... உன்னை ஒரு நல்ல நிலைமையில் பார்க்கனும்.." என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்...