‘யாரு யாரு, யாரு இப்ப பேசினது?’ வேற யாரு எல்லாம் இந்த தேவ் தான். ஆனால் பிரச்சனை என்று இவனுக்கு எப்படி தெரியும். மில்லியன் டாலர் கேள்வி.
“ஆனா அதுக்குள்ளையும் நம்ம கல்யாணம் நடந்துருச்சுன்னா?” என்று சந்தேகம் கேட்டாள் ரூபா.
“பரவாயில்லை டார்லிங்” என்று கண்ணடித்தான் தேவ்.
“என்ன பரவாயில்லை?” என்று கோபமுடன் கேட்டாள். பின்னே இவள் என்ன கேட்கிறாள் அவன் என்ன உளறுகின்றான்
“அவ கிடைச்சாலும் ஓகே தான், பட் நீ கிடைச்சா எனக்கு டபுள் ஓகே” என்று கிண்டல் செய்தான்.
‘என்ன ஒரு தைரியம்!!!’ இருடி’ என்று முறைத்தவள்
“அப்பறம் பின்னாடி இருக்க மாமியார் வீட்டுக்கு போகமுடியாது வேற மாமியார் வீட்டுக்கு தான் கூட்டிட்டு போயிருவேன் ஜாக்கிரதை” என்று மிரட்டினாள்.
“எனக்கே மாமியார் வீடு காட்டுறயா, ஓவரா பேசின, உன்னை உன் மாமியார் வீட்டுக்கு கூட்டிட்டுப்போறதுக்கு பதிலா ஹனிமூன்க்கு கூட்டிட்டு போயிருவேன் ஜாக்கிரதை” என்று பதிலுக்கு அவளை விரட்டினான்.
‘ஐயோ பாவி எப்படி எல்லாம் பேசுறான். இவனை எப்படி நான் சமாளிக்க, இப்போதைக்கு கப்சிபென்று அடங்கிருவோம் அப்பறம் யாருன்னு இவனுக்கு நான் காட்டுறேன்” என்று நினைத்தாள் ரூபா.
“பொண்ணை இந்த முகுர்த்த புடவையை குடுத்து கட்டி வர சொல்லுங்கோ, கூட பையனோட தமக்கையோ தங்கையோ போட்டும்” என்று ஐயர் ஒரு தாம்பாளத்தட்டை ரூபன்யாவிடம் கொடுத்துக் கூறினார்.
“எனக்கு சிஸ்டர் இல்ல ஐயரே” என்று தேவ் கூறினான்.
“பொண்ணுக்கு இருக்காங்களா?” என்று ஐயர் கேட்க “இருக்காங்க ஐயரே, ரூம்ல இருக்கா, அவ பார்த்துப்பா” என்று முடித்த ரூபாவின் தாய் மஹா அவளை எழுப்பி தன் சகோதரியுடன் மணமகள் அறைக்கு அனுப்பினார்.
சேலை மாற்ற உள்ளே வந்தவளோ தன் சகோதரி ரியாவை தேட அவள் அங்கு இருக்கும் அறிகுறியே இல்லை.
“இந்த ரூபா எங்க போனா? கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல இந்த பொண்ணுக்கு. அக்கா வேற இங்க தான் இருப்பானு சொன்னங்க. ஆனா பாரு ஆளையே காணோம்” என்ற சித்தி சுசித்ரா “சரி நீ சாரீய மாத்து நான் எங்க இருக்கானு பார்த்து கூட்டிட்டு வரேன்” என்றுவிட்டு வெளியில் சென்றார்.
ரூபாவினால் சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை. தொப்பென்று அங்கு இருந்த நாற்காலியில் அமர்ந்தவளின் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் எட்டிப்பார்த்தது.
எவ்வளவு நொடிகள் அப்படியே அமர்ந்திருந்தாளோ
அப்பொழுது...
“தட் தட்”
“தட் தட்”
என்ன சத்தம் என்று சுற்றியும் பார்த்தாள் ரூபன்யா.
“ஹேய் ரூப், இ.. இங்.. இங்க பாரு.. இந்த பால்கனி கதவை திற” சத்தம் பால்கனி பக்கம் வரவும் விரைந்து சென்று கதவைத் திறந்தாள்.
அங்கே...
பால்கனியின் மேல் ஏற கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தாள் ரூபன்யாவின் இரட்டை ரியா என்கிற ரிதன்யா.
“கெட்டிமேளம் கெட்டிமேளம்” ஐயர் மந்திரம் ஓத அனைவரும் அர்ச்சதை தூவ ரிதன்யாவின் கழுத்தில் அந்த பொன்தாலியை மகிழ்ச்சியுடன் மாட்டினான் தேவ். பின்னால் இருந்த ரூபன்யாவோ இருவரையும் அணைத்து தன வாழ்த்துகளை தெரிவித்தாள்.
சடங்குகள் அனைத்தும் முடிந்தவுடன் மணமக்கள் ரிதன்யா – தேவ் இருவரும் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க ஆரம்பித்தனர். மஹாவும் விஜயனும் எல்லோரையும் வரவேற்று புன்சிரிப்புடன் உணவுண்ண அனுப்பினர். அவர்களின் மனதிலோ பெரும் குழப்பங்கள். இப்பொழுது ரிதன்யாவிடம் எதுவும் கேட்க இயலாது. ரூபன்யாவோ வந்திருந்த அவளின் மற்றும் ரியாவின் தோழர்கள் தோழிகள் அனைவரிடமும் மகிழ்ச்சியுடன் உரையாடிக்கொண்டு இருந்தாள்.
நேரம் செல்ல செல்ல மஹாவினால் அவரின் பொறுமையை கட்டுபடுத்த முடியவில்லை. காலையில் நடந்ததை நினைத்துப்பார்த்தார்.
அவரின் மகள்கள் இருவரும் மணப்பெண் அறையில் தங்க இவர்கள் அடுத்த அறையில் தங்கினர். காலையில் இவர்களை சீக்கிரம் தயாராக சொல்ல சென்றவரின் கண்களில் பட்டது அங்கு பதட்டத்துடன் இருந்த மகள் ரூபன்யா மட்டுமே. அதுவும் கையில் ஒரு கடிதத்துடன்.
கடிதத்தின் சாராம்சம் இதுவே.