அவளை அழைத்துக் கொண்டு மனோஜ் சென்னைக்கு சென்றான்... அவனுடைய நண்பனின் அண்ணன்கள் சென்னையில் இருப்பதாகவும், அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பார்கள் என்றும் கூறி அவளை அழைத்துச் சென்றான்... அவர்களும் இவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறினார்கள்... அவர்களின் இருப்பிடத்தில் இருவரையும் தங்க வைத்தனர்... சாப்பிட்டு தூங்கும்படி சாப்பாடு வாங்கிக் கொடுத்தனர்... சாப்பிட்டு தூங்கியது தான் தெரியும்... எழுந்துப் பார்த்த போது அவள் மும்பை நகரில் இருந்தாள்...
அன்று அந்த இடம் மும்பை என்றுக் கூட அவளுக்குத் தெரியாது... அவளை அழைத்து வந்த மனோஜும் அவளுடன் இல்லை... அவர்களிடம் ஏதாவது கேட்டால், அவளிடம் கோபத்தைக் காட்டினார்கள்... எதற்காக இந்த ஊருக்கு அழைத்து வந்தார்கள்... மனோஜ் எங்கே..?? இவளை அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்...?? இதையெல்லாம் அவள் உணரும் முன்னரே.. அவளை சிவப்பு விளக்குப் பகுதியில் விற்றுவிட்டனர்...
அதன்பிறகு தான் நடந்த விபரீதத்தை அவளால் உணர முடிந்தது... ஆனால் அவளை அங்கிருந்து மீட்பது யார்..?? எதுவும் புரியாமல் அழுதுக் கொண்டே இருந்தாள்... அங்கு அவர்கள் பேசும் மொழி கூட அவளுக்குப் புரியவில்லை... அவளை ஒரு பெண்மணியின் பாதுகாப்பில் விட்டிருந்தனர்...
"நீ தமிழா..?? " அந்த பெண்மணி கேட்டதும்,
"அக்கா.. என்னை காப்பாத்துங்கக்கா.. எனக்கு பயமா இருக்கு... அய்யோ நான் வீட்டுக்குப் போகனும்... எனக்கு இங்க இருக்கவே புடிக்கல... அக்கா ப்ளீஸ் அக்கா.." என்றுக் கெஞ்சினாள்...
"இங்கப்பாரு அழறத முதலில் நிறுத்து... இப்ப அழுது என்ன பிரயோஜனம்... நீ எங்க வந்து மாட்டிக்கிட்டு இருக்க தெரியுமா..??"
"எனக்கு நான் எங்க இருக்கேன்னே தெரியல... நான் சென்னைக்கு தான்க்கா வந்தேன்... சாப்ட்டு தூங்கனது தான் தெரியும்... அப்புறம் நான் இங்க இருக்கேன்..." என்று அழுதுக் கொண்டே பயத்தோடும், பதட்டத்தோடும் கூறினாள்...
"நீ இப்போ பாம்பேல இருக்க... என்று அவள் இருக்கும் இடத்தை பற்றி விரிவாக சொன்னார் அந்த பெண்மணி... அவளோ இன்னும் அதிகமாக அழுதாள்...
"இங்கப்பாரு இனி என்ன செய்ய முடியும்..." என்று சமாதானப்படுத்தினார்...
"என்னோட பேர் யோகேஸ்வரி... எல்லோரும் என்னை யோகின்னு கூப்பிடுவாங்க... எங்க ஊரு திண்டிவனம் பக்கம்... உன்னோட பேர் என்ன..??"
"என்.. என்னோட பேரு தாமரை... தாமரைச் செல்வி..."
"ஆமாம் சென்னைக்கு ஏன் வந்த..?? எப்படி அவங்கக்கிட்ட மாட்டின... உன்னோட ஊர் என்ன..??" என்று கேட்டதற்கு, முழு விவரத்தையும் அழுதுக் கொண்டே கூறினாள்...
"உனக்கு பதினாறு இல்ல பதினேழு வயசு இருக்குமா..?? இப்பவே காதலா..?? என்று பெருமூச்சு விட்டார்...
"என்னோட கஸ்டமர் ஒருத்தர் அடிக்கடி சொல்வாரு... இங்க்லீஷ்ல லவ் ங்கிற ஒரு வார்த்தைக்கு தமிழ்ல நிறைய அர்த்தம் இருக்காம்... அன்பு, பாசம், காதல, நேசம் இதுக்கெல்லாம் லவ்ன்னு தான் சொல்வாங்களாம்...
அம்மா, அப்பா, கூடப்பிறந்தவங்க, ப்ரண்ட்ஸ், ஏன் செல்லப் பிராணி மேல வச்சிருக்கறதுக் கூட காதல் தானாம்... ஆனா இந்த சினிமா, நாடகம், கதை புக் இதுலெல்லாம் தான், ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் நடுவுல இருக்க காதலை மட்டுமே மிகைப்படுத்தி காட்றாங்கன்னு சொல்வாரு... அவருக்கு இந்த காதல் மேலெல்லாம் நம்பிக்கையில்லைன்னு சொல்வாரு... ஆமாம் அந்த பையனை உனக்கு எவ்வளவு நாளா தெரியும்..??"
"எங்.. எங்க ஸ்கூல்ல தான் படிச்சான்... நான் 9th படிக்கிறப்பல இருந்து நாங்க ரெண்டுப்பேரும் காதலிக்கிறோம்.." என்று அவள் சொன்னதற்கு,
"அய்யோ ராமா.." என்று அவர் பெருமூச்சு விட்டார்...
"4வருஷமா காதலிச்சவனுக்காக... உன்னை பதினேழு வருஷமா வளர்த்தவங்களை விட்டுட்டு வந்துட்ட... அப்படி ஒரு காதல் அவன் மேல... அவன் மேல இருக்க காதல் பெருசுன்னா... அப்போ உன்னோட அம்மா, அப்பாவை நீ காதலிக்கவே இல்லையா..?? உன்னை வளர்க்க அவங்க எவ்வளவு கஷ்டப்பட்டுருப்பாங்க... நீ படிச்சு பெரிய ஆளா வரனும்னு எவ்வளவு கனவு கண்டிருப்பாங்க...
எனக்கெல்லாம் பள்ளிக்கூடத்துக்குப் போய் படிக்கனும்னு எவ்வளவு ஆசை தெரியுமா..?? ஆனா எங்க வீட்ல என்னை படிக்கவே வைக்கல... யாரோ ஒருத்தர் உன்னோட பொண்ணை ஸ்கூலுக்கு அனுப்பேன்ப்பான்னு எங்க அப்பாக்கிட்ட கேட்டதுக்கு... அட பொட்டைப் பொண்ணு ஸ்கூலுக்குப் போனா.. 16 வயசுல காதல் கடுதாசி எழுதத்தான் கத்துக்கும்... அதெல்லாம் படிச்சு என்ன கிழிக்கப் போகுதுன்னு சொன்னாரு...
அப்படி பொத்தி பொத்தி வளர்த்து... 17 வயசுல ஒருத்தன் கைல என்னை பிடிச்சு கொடுத்தாரு... என்ன ப்ரயோஜனம்..?? அவன்கிட்ட 3 வருஷம் சொல்ல முடியாத கொடுமையை அனுபவிச்சேன்... அப்புறம் பணத்துக்கு ஆசைப்பட்டு என்னை இங்க வித்துட்டுப் போயிட்டான்... அவனுக்கெல்லாம் நல்ல சாவு வரும்னு நினைக்கிற..?? லாரியிலேயோ இல்லை ட்ரெயின்லேயோ அடிப்பட்டு தான் செத்து போவான்... செத்து போவானென்ன..?? செத்தே போயிருப்பான்...
ஆனா இப்போ அப்படியா..?? நாம கூழோ, கஞ்சியோ குடிச்சா பரவாயில்ல... மூட்டை தூக்கி சம்பாதிச்சாவது பிள்ளைங்கள படிக்க வைக்கனும்னு பெத்தவங்க நினைக்கிறாங்க... அதுவும் பொம்பள பிள்ளைங்களும் படிக்கனும்னு இப்போ எல்லோரும் நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க... ஆனா நீங்க என்னடான்னா.. அதையெல்லாம் எங்க புரிஞ்சிக்கிறீங்க... இப்படி காதல்ன்னு சொல்லி வீட்டை விட்டு ஓடி வந்து... இப்படி ஆபத்துல சிக்கிக்கீறீங்க...
காதலிக்கிறது தப்பில்ல... நமக்கு ஏத்த துணையை நாமலே தேடிக்கிற உரிமை நமக்கிருக்கு... ஆனா அதுக்கும் ஒரு வயசிருக்குல்ல... பாரு அந்த பையன் பிரச்சனைன்னு வரும்போது விட்டுட்டு ஓடிப் போயிட்டான்.. அப்படியே நீ அவனை கல்யாணம் செஞ்சுக்கிட்டாலும்... உன்னை நல்லப்படியா பார்த்துப்பானா..?? இதெல்லாம் தெரிஞ்சிக்கிற பக்குவமோ.. இல்லை வயசோ உனக்கில்லையே..." என்று அவர் பேசியதும்... தான் செய்த தவறை நினைத்து வருந்தி அழுதாள்.