2017 போட்டி சிறுகதை 93 - காதலடி நீ எனக்கு!!! - அம்ரித சாகரி
This is entry #93 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை – காதல் / திருமண வாழ்க்கை அல்லது நட்பு
எழுத்தாளர் - அம்ரித சாகரி
வணக்கம்
இது என்னுடைய அடுத்த படைப்பு.
மனித வாழ்க்கையில் தன் மேல் சந்தேகம் பிறர் மேல் சந்தேகம், என்று பல விசயங்களில் சந்தேகம். நிறைய மக்கள் நிறைவான வாழ்வு வாழ்வதில்லை. அப்படி வாழ்ந்தாலும் இருப்பதைக்கொண்டு திருப்தி அடைவது இல்லை. சந்தேகத்திற்கு அப்பாற்ப்பட்ட வாழ்க்கை வாழும் நால்வரை பற்றிய கதை இது. இதை தலைப்பு சார்ந்த கதையாக எழுதவேண்டும் என்றே நினைத்தேன் ஆனால் கரு சார்ந்த கதையாக மாற்றி விட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துகளை கூறுங்கள். பிழை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.
அன்புடன்
அம்ரித சாகரி
சென்னை
மனது நிலை கொள்ளாமல் தவித்தது ஆதிக்கு. ஆத்திரம், வெறுப்பு, பதட்டம், கவலை, மனதின் காயம் எல்லாம் அவனின் கண்ணீராக உருமாறியது. அவனின் வேகத்திற்கு கைகளில் கார் பறந்தது. தன்னிடம் இருக்கும் சாவியை வைத்து வீடு திறந்து உள்ளே வந்த பிறகும் அவனின் ஆத்திரம் மட்டும் குறையவில்லை. லேப்டாப் பேகை அப்படியே சோபாவில் வீசினான். பேகின் வார் பட்டு டீபாய் மேல் இருந்த பூச்சாடி கீழே விழுந்தது. (நல்ல வேலை அது கண்ணாடி இல்லை) தொப்பென்று அவனும் சோபாவில் அமர்ந்தான்.
பழைய விசயங்களை நினைக்க நினைக்க ஆதியினால் தன்னை கட்டுபடுத்தவே முடியவில்லை. சரியாக 7 ஆண்டுகளுக்கு பிறகு அவளைக் கண்டுள்ளான். அதுவும் இன்னொருவனின் மனைவியாக.
‘எனக்கு துரோகம் செய்ய எப்படி அவளுக்கு மனது வந்தது’. அப்படியே எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தானோ தெரியாது.
முகத்தினை அழுத்தி துடைத்தவனது வலப்பக்க சுவரில் தென்பட்ட தனது மனைவி உஷாவின் புகைபடத்தில் அமைதி கொண்டான்.
கையில் இருந்த கடிகாரத்தில் மணி மூன்று என்று காட்டியது. இவ்வளவு சீக்கிரம் வந்தும் இப்படி அமர்ந்திருப்பது உஷாவின் கேள்விக்கு ஆளாக நேரிடும் என்று எழுந்து அப்படியே பிரெஷ் அப் ஆகி விட்டு அவள் வருவதற்குள் எதாவது சமைக்க வேண்டும் என்று முடிவு செய்து உள்ளே படுக்கை அறைக்கு சென்றான்.
நினைத்த மாதிரியே தயார் ஆகி உஷாவிற்கு பிடித்த ஆலு சப்பாத்தி மற்றும் ரைத்தாவையும் செய்து முடித்தான். மீண்டும் மணியை பார்த்தான் மணி நான்கு பதினைந்து என்று காட்டியது. ஐந்து மணிக்கு காலேஜ் முடிந்து உஷாவும் வந்து விடுவாள்.
சரி அதுவரைக்கும் தன் வேலையை பார்க்கலாம் என்று லேப்டாப்பை திறந்து வேலையை ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் அதில் வெற்றியும் கண்டான்.
மணி 5.15
உஷாவும் வந்துவிட்டாள். வந்தவளின் கண்களில் பட்டது கீழே இருந்த பூச்சாடியும் சீக்கிரம் வீட்டிற்கு வந்திருக்கும் தன கணவனும் தான். ‘ஐயா இன்னிக்கு மூட் அவுட் போல’ என்று நினைத்தவள்.
‘ஹேய் ஆதி என்ன எனக்கு முன்னாடியே வந்துட்டிங்க. இப்படியே தினமும் வந்துருங்க. எனக்கு சந்தோசமா இருக்கும். போதாக்குறைக்கு காலேஜ்ல எங்கள சரியா டிரில் வாங்குறாங்க’ என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டே அவளும் முகம் கழுவி விட்டு வந்தாள்.
ஆதியோ ‘காலேஜ் அசிஸ்டன்ட் ப்ரோபஸர் பேசுற பேச்சைபாரு, லேட்டா வந்தா திட்றது, சீக்கிரம் வந்தா கொஞ்சுறது’ என்று அவளை வழக்கம் போல் கிண்டல் செய்யாமல் அமைதியாக இருந்தான்.
என்னவாயிற்று ஆதிக்கு என்று எண்ணியவள், ‘சரி வாங்க சாப்டலாம்’ என்று அவன் செய்த சப்பாத்தியையும் ரைதாவையும் தட்டில் எடுத்து வைத்து அவனிடம் தந்தாள். அவளை சாப்பிடும் பொழுது எப்பொழுதும் சீண்டும் ஆதி இன்று அமைதியாகவே உண்டான்.
‘என்னாச்சு ஆதி, ரொம்ப அமைதியா இருக்கீங்க? ஆபீஸ்ல ஏதும் பிரச்சனையா?’ என்று கேட்டாள் உஷா. அதற்கும் அமைதியையே பதிலாக தந்த ஆதி தனது மற்றும் அவளுடைய தட்டையும் சேர்த்துக் கொண்டுபோய் கழுவி விட்டு வந்தான். உஷாவிற்கு ஏதும் புரியவில்லை. அவளும் கை கழுவி விட்டு வந்தபோது ஆதி பால்கனியில் இருந்த மூங்கில் ஊஞ்சலில் அமர்ந்து வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தான்.
அவன் அருகில் சென்று அவனின் தலைமுடியை செல்லமாக கலைத்து விட்டவள். ‘என்னாச்சு? ஏன் இப்டி அமைதியா இருக்கீங்க?’ என்று மறுபடியும் கேட்டாள்.
ஆதியோ கீழே ஷட்டில் விளையாடும் குழந்தைகளின் மீது பார்வை பதித்து ‘நான் இன்னைக்கு எங்க ஆபீஸ்ல மாயாவை பார்த்தேன்’ என்றான்.
‘மாயாவையா? எப்டி அங்க?’ என்று அவளின் அதிர்ந்த குழப்பமான கேள்விக்கு, ‘எங்க ஆபீஸ் லண்டன்ல இருக்குள்ள, அதோட எம். டி. பரத் சாரோட மனைவியா பார்த்தேன். இன்னிக்கு தான் அவர் இந்த ஆபீஸிற்கு வந்தார். இது நாள் வரைக்கும் லண்டன்லயே இருந்தாரு கூடவே அவங்க 3 வயசு ட்வின்ஸ் பசங்களையும்’ உஷாவிற்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.
மேலும் ஆதி தொடர்ந்தான் ‘மறுபடியும் கன்சீவா இருக்கா 6 மந்த்ஸ் போல’
‘ஒஹ்.. நீங்க ஏதும் கோபப்பட்டிங்களா ஆதிப்பா’, என்று உஷா கேட்க ‘இல்லை’ என்பதுபோல தலையாட்டியவன் ‘அவளை யாரென்றே தெரியாத மாதிரியே இருந்துட்டேன்’ என்று முடித்தான்.
“அப்ப மாயா?” என்று கேள்விக்குறியுடன் பார்த்த உஷாவிற்கு ஆதியின் மௌனமே பதிலாக கிடைத்தது.