சிறுகதை - உனக்காகவே நான் - K.சௌந்தர்
அந்த அலுவலகமே அன்று அழகுப் பெண்களின் அணிவகுப்பில் அதிர்ந்துபோய் இருந்தது . ஆம் அன்று ரிஷப்ஷனிஸ்ட் பணிக்கான நேர்காணல் நடந்துகொண்டிருந்தது. எல்லோரும் சென்ற பிறகு சற்றே சோம்பல் முறித்தவண்ணம் எழுந்து அறைக்கு வெளியே வந்தான் ஆகாஷ். அந்த கம்பெனியின் எம்டி. அவன் வருவதற்கே காத்திருந்தது போல அந்த மூலையில் அமர்ந்திருந்த முக்காடிட்ட உருவம் மெல்ல எழுந்து அவனை நெருங்கிச் சென்றது.
"ஆகாஷ் ...என்னை தெரியுதா?"
எதிரில் நிற்கும் உருவத்தைப் பார்த்து தன் நினைவுப் பெட்டகத்தில் அந்த உருவத்தின் பதிவை பலமுறைத் தேடி சோர்ந்து போனான் ஆகாஷ்.
'யாராயிருக்கும்?'
"என்னை நிஜமாவே உங்களுக்கு ஞாபகம் இல்லையா? பரவாயில்லை. நா கொடுத்து வச்சது அவ்வளோதான் ன்னு நெனைச்சுக்கறேன்" என்றாள் அவள்.
இந்த அழகான குரல் நிச்சயமாக அவளுடையதுதான். ஆனால் உருவம் கொஞ்சம்கூட பொருந்தவில்லையே. கோடி சந்திரன் பிரகாசிப்பது போன்ற அந்த முகம் எங்கே? தீய்ந்து கருகிப் போன இந்த முகம் எங்கே? ஒருவேளை அப்படியும் இருக்குமோ? அவளுக்குத்தான் ஏதேனும் விபத்தில் முகம் இப்படி ஆகியிருக்குமோ...?
தயங்கியபடி "நீ...நீங்க நிலாவதனி தானே?" என்றான்.
அவன் கேட்டதுதான் தாமதம், முகத்தை கைகளால் மூடிக்கொண்டு கதறி அழ ஆரம்பித்தாள் அவள். " இனிமே அந்த பெயருக்கு நா தகுதியில்லை. கரிக்கட்டைவதனின்னு என்னைக் கூப்பிடுங்க ஆகாஷ் , உங்களை உதறித் தள்ளிட்டு திமிரா நடந்துக்கிட்ட எனக்கு இந்த தண்டனைப் போதாது" என்றாள் நிலாவதனி.
“அழாதீங்க நிலா. பழசையெல்லாம் நினைச்சு வருத்தப் படறதுல ஒரு பயனும் இல்லை. நீங்க மொதல்ல உள்ளே வாங்க” என்றபடி ஆபீஸ் ரூமுக்குள் நுழைந்தான் ஆகாஷ்.
அவன் ‘ங்க’ போட்டு பேசுவது மிகவும் அந்நியமாகப் பட்டது அவளுக்கு. ஒரு அடி விலகியே நிற்பதுபோல இருந்தது. இதில் அவள் வருத்தப் படுவதில் எந்த நியாயமும் இல்லை. அவனை விலக்கி நிறுத்தியதே அவள்தானே.
“உக்காருங்க நிலா”. அவன் பேச்சில் சட்டென நினைவு திரும்பிய அவள் அப்போதுதான் அந்த அறையில் ஒரு பெண்ணும் அமர்ந்திருப்பதை பார்த்து தயங்கினாள்.
அவளது தயக்கத்தை உணர்த்து போல "இவ என் மாமா பொண்ணு மேகா. இந்த பிஸினெஸ்ல பார்ட்னர் . இப்போ எங்க கூட தான் இருக்கா" என்றான்.
மேகா அவளை சற்று அருவருப்புடன் பார்த்தபடி "ஆகாஷ், நாம நம்ம கம்பெனிக்கு ரிஷப்ஷனிஸ்ட் தானே தேடுறோம். இவுங்க எப்படி அதுக்கு சரிப்படுவாங்க?, திருப்பி அனுப்பிடுங்க " என்றாள் மெல்லிய குரலில். ஆனாலும் அது நிலாவின் காதுகளில் தெளிவாகவே விழுந்தது. அவள் கண்களிலிருந்து இரண்டு சொட்டு கண்ணீர் கன்னங்களில் உருண்டது. அதை கவனித்த ஆகாஷ் “ஓ ஷட் அப் மேகா. ரிஷப்ஷனிஸ்ட் வேலை இல்லைன்னா வேற ஏதாவது வேலை கொடுக்கலாம், இப்போ உனக்கு வேலையிருந்தா கிளம்பு, நா அப்புறமா போனில் பேசறேன் " . என்றான்.
மேகா கோபத்துடன் வெளியேறிய பிறகு அவளை நோக்கி "வெரி சாரிங்க நிலா. அவள் இப்போதான் காலேஜ் முடிச்சிருக்கா. அதனால கொஞ்சம் துடுக்கு அதிகம். நீங்க எதுவும் நினைச்சிக்காதீங்க."என்றான்.
"அதனால என்ன ஆகாஷ். நா ஒரு காலத்தில் இருந்த மாதிரி இப்போ அவுங்க இருக்காங்க. பணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து தேவையானதை வேண்டாம்னு ஒதுக்கி இப்போ ஒரு நடைபிணமா வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். என் நிலைமை யாருக்கும் வரவேண்டாம்" என்றபடி மறுபடியும் விசும்ப ஆரம்பித்தாள் நிலா.
அவள் அழுவதை ஒரு கையாலாகாத தனத்துடன் பார்த்திருந்துவிட்டு "ஓகே சொல்லுங்க நிலா , உங்களுக்கு நான் என்ன உதவி செய்யமுடியும்? நாங்க கொடுத்த விளம்பரம் பார்த்துட்டுட்டுதான் நீங்க வந்ததா தெரியுது. உங்களுக்கு வேலை தேவைப்படுதா? உங்க புகுந்த இடம் ஒரு மல்டி மில்லியனர்ஸ் ன்னு கேள்விப்பட்டேன்" என்றான்
அவள் சற்று நேரம் யோசித்து பிறகு பேச ஆரம்பித்தாள். “நீங்க கேள்விப்பட்டது சரிதான் ஆகாஷ். சைதன்யனை நான் பணத்துக்காகத் தானே மணந்தேன். அவரும் என்னை என் அழகுக்காகத் தான் மணந்திருக்கிறார். திருமணம் ஆன அடுத்த மாதமே ஒரு எலக்ட்ரிக் ஷாக்கில் என் முகம் கரிக்கட்டையானது. என் உயிர் போயிருந்தால் நல்லாயிருந்திருக்கும். ஆனால் நான் பண்ண தப்புகளை உணர நா உயிர் வாழணும்னு கடவுள் நெனைச்சாரோ என்னவோ. நா பிழைச்சுகிட்டேன். ஆனால் என் கணவருக்கு என்னுடன் வாழ விருப்பமில்லை. டைவர்ட்ஸ் கேட்டார். கொடுக்க மறுத்ததால் பலவித சித்திரவதைகள். கடைசியில் வேறுவழியில்லாமல் சம்மதித்தேன். ஆனால் அவர் கொடுக்க முன்வந்த பணம் தேவையில்லை ன்னு மறுத்துட்டேன். விதி என்னை இன்னும் சோதித்தது. அவரைப் பிரிந்து வந்தபிறகுதான் நான் கர்பமாயிருப்பது தெரிந்தது. எனக்கிருக்கும் ஒரே உறவை கலைக்க விரும்பவில்லை. ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதை நல்லபடியாக வளர்க்கத்தான் வேலை தேடி அலைகிறேன். என் கோர சொரூபத்தை பார்த்து யாருமே எனக்கு வேலை கொடுக்க தயங்குகின்றனர்.