அதே நேரத்தில் மகனின் வெற்றியை கண் குளிர பார்த்துக்கொண்டிருந்தார் அவனது தந்தை. டி.வி.யில் ஒளிர்ந்த அவளது அவளின் முகம் எங்கேயோ எப்போதோ பார்த்த முகம் போலவே தோன்றியது அவருக்கு.
அதே நேரத்தில் இங்கே டிவியின் முன்னால் அமர்ந்திருந்தனர் அவளது பெரியம்மாவும், அண்ணன் ஷங்கரும். அவள் செய்த கொண்டாட்டங்கள் எல்லாம் பார்த்துக்கொண்டேதான் இருந்தனர் இருவரும்.
ஹரிஷ் நம் குடும்பத்துடன் நெருங்கி விடுவானோ? வார்த்தைகளில் வெளிப்படுத்திவிட முடியாத ஒரு பயமும், அழுத்தமும் கிளம்பியது ஷங்கருக்குள்ளே. உச்சக்கட்ட குழப்பத்துடன் கை இரண்டையும் தேய்த்துக்கொண்டு உள்ளங்கைகளுக்குள் முகத்தை புதைத்துக்கொண்டான் ஷங்கர்.
மகனையே பார்த்திருந்தார் அம்மா. எப்போதுமே அவன் முகம் வாடுவதை அவரால் சகித்துக்கொள்ள முடிந்ததில்லைதான். அதை சரி செய்ய எப்போதுமே, எதுவுமே செய்ய அவர் தயார்தான்.
இங்கே கொண்டாட்டங்கள் நடை பெற்றுக்கொண்டிருக்க அவளை சந்தித்து பேசிவிட துடித்தது இவன் உள்ளம். ஆனால் அது இப்போது முடியாது என அவனுக்கே நன்றாய் புரிந்தது.
அவ்வப்போது நிறையவே கேமரா வெளிச்சங்கள் அவள் மீது பதிந்துக்கொண்டிருக்க,
‘நாம கிளம்பலாம் அனு’ என்றார் பெரியப்பா. இப்போவே ரொம்ப லேட் ஆகிடுச்சு’
‘சரி பெரியப்பா’ எல்லா கலகலப்புகளையும், சலசலப்புகளையும், தாண்டிக்கொண்டு அரங்கத்தை விட்டு வெளியேறினர் இருவரும்.
மறுநாள் காலை விடிவதற்குள்ளாகவே அவளது கைப்பேசி நிறைய குறுஞ்செய்திகள், நிறைய வாழ்த்துக்கள் என நிரம்பி வழிந்தது. கொஞ்சம் பரவசமும், சந்தோஷமும் அவளிடம் சேர்ந்தாலும் நிறையவே பயமும் பிறந்திருந்தது அவளுக்கு..
மதியத்தில் வீடு வந்து சேர்ந்திருந்தனர் பெரியாப்பவும் மகளும். அவர்களை வரவேற்றது பெரியம்மாவின் கோபமான முகம்.
‘இதுக்குதான் நான் மேட்சுக்கு போக வேண்டான்னு சொன்னேன் கேட்டீங்களா?’ பெரியம்மா கர்ஜிக்க அவர்கள் முன்னால் வந்து விழுந்தது ஒரு தினசரி.
அதில் நேற்றைய ஆட்டத்தை பற்றிய விலாவரி செய்திகள் வந்திருக்க இவள் புகைப்படத்துடன் வந்திருந்தது ஒரு சின்ன செய்தி நேற்று ஹரிஷ் பேசியதை விவரித்திருந்தனர் அதில்.
‘சரி போனதுதான் போனீங்க. ஆட்டத்தை பார்த்திட்டு வர வேண்டியதுதானே. அங்கே போய் எல்லார் முன்னாடியும் கூத்தடிச்சிட்டு வந்து நிக்கறா. அதை நீங்களும் பார்த்திட்டே இருந்திருக்கீங்க.. இதிலே அவன் வேறே ஏதேதோ சொல்லி வெச்சிருக்கான். எல்லாம் பேப்பர் வரைக்கும் வந்தாச்சு’
பேப்பரை எடுத்து நிதானமாக படித்தார் பெரியப்பா.
‘தப்பா ஒண்ணும் போடலையே லோசனா’ என்றார் அவர் ‘ஃப்ரெண்டுனு தானே சொன்னான் அவன். இதிலே என்ன இருக்கு?’
‘உங்களுக்கு எதிலேயுமே எதுவுமே இல்லைதான். அடுத்து ரெண்டு பேரையும் சேர்த்து வெச்சு எழுதுவான் பேப்பரிலே நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. இவ நம்ம சொந்த பொண்ணுன்னா அது ஒரு மாதிரி. இவ உங்க அண்ணன் பொண்ணு. சொந்த பொண்ணு இல்லையே அதான் இவ சரியா வளர்க்கலைன்னு நாளைக்கு என் தலைதான் உருளும்’ என்ற பெரியம்மா அனுவின் முகத்தை பார்த்தார்
‘இதுவரைக்கும் பெரியம்மா உனக்கு ஏதாவது குறை வெச்சிருக்கேனா அனு நீ சொல்லு ?’
‘அய்யோ... அதெல்லாம் இல்லை பெரியம்மா. இதுவரைக்கும் எனக்கு எங்க அப்பா அம்மா ஞாபகம் கூட வந்ததில்லை’ என்றாள் சட்டென. அதுதானே உண்மையும் கூட!
‘’அப்போ பெரியம்மா பேர் கேட்டு போகிறா மாதிரி நீ நடந்துக்க மாட்டேன்னு நான் நம்பறேன்’ சொல்லிவிட்டு நகர்ந்தார் அவர். அவள் முகத்தில் மெலிதாய் ஒரு மாற்றம்.
‘சரி விடும்மா... பெரியம்மா குணம் உனக்கு தெரிஞ்சது தானே..’ பெரியப்பா மெல்ல சொல்ல
‘இல்ல பெரியப்பா. பெரியம்மா சொல்றதிலே தப்பொண்ணும் இல்லை’ என்றாள் சற்றே உறுதியான குரலில். சொல்லிவிட்டு தனது அறை நோக்கி நடந்தாள் அனு.
தான்தான் மேட்ச் நடந்த போது கொஞ்சம் அதிகப்படியாக நடந்துக்கொண்டோம் என தோன்றியது அவளுக்கு. ‘அவன் உயரம் என்ன? என் உயரம் என்ன? கொஞ்சம் என்னை மறந்து ஆடி விட்டேன்தான் அங்கே’ தனக்குள்ளே சொல்லிக்கொண்டு நடந்தாள் அனுராதா.
அவள் ஊருக்கு வந்த பின்னர் அவனுடைய எண்ணிலிருந்து அவளுக்கு சில அழைப்புகள் வர எதையுமே ஏற்கவில்லை அவள்.
‘புரிந்துக்கொள்வான் அவன். புரிந்துக்கொள்ள வேண்டுமவன்’ சொல்லிக்கொண்டாள் அனுராதா
நான்கு நாட்கள் கடந்திருந்தன.
மும்பையிலிருந்து விமானத்தில் சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்தனர் ரகுவும் ஹரிஷும். ஒரு ஆசை அவன் மனதில்! சென்னை விமான நிலையத்தில் அவனை வரவேற்க அப்பா வருவாரோ. என்றொரு ஆசை!