‘சரி போகட்டும் எங்க அப்பாவாசேன்னு நானா வந்து பேசிட்டு இருக்கேன். ரொம்பவெல்லாம் டைம் கொடுக்க மாட்டேன். முப்பது செகண்ட் பார்ப்பேன். இல்லைன்னா கிளம்பி போயிடுவேன். அப்புறம் ரெண்டு வருஷம் உங்களோட பேச மாட்டேன்.’ அவன் சொல்ல
ம்ஹூம் எந்த மாற்றமும் இல்லை அவரிடத்தில்! ஒரு பெருமூச்சு எழுந்தது அவனிடத்தில். கொஞ்சமாய் தளர்வு வந்தது அவன் குரலில்
‘ஜெயிக்கட்டும். சொந்தக்காலிலே நின்னு ஜெயிச்சிட்டு வந்து என்கிட்டே பேசட்டும். அவன் என்ன வந்து பேசறது??? அப்போ நானே அவனை கட்டி அணைச்சு சந்தோஷமா பேசறேன்..’ அப்படின்னு நீங்கதானே சொன்னீங்க. இதோ ஜெயிச்சிட்டு வந்திருக்கேன். என்கிட்டே பேச மாட்டீங்களா?
எந்த பதிலும் இல்லை அவரிடத்திலிருந்து.
‘அப்பா...’ அவன் தாளமாட்டாமல் அழைக்க அவர் உடல் முழுவதும் அதிர்ந்த உணர்வு. அடுத்த நொடி சட்டென எழுந்து ஓடி வந்தார் அவனிடத்தில்.
‘எத்தனை நாளாச்சுடா கண்ணா நீ என்னை அப்பான்னு கூப்பிட்டு..’ ஹரீஷை மார்போடு அணைத்துக்கொண்டார் சுவாமிநாதன்.
‘ஜெயிச்சிட்டேன்பா..’ என்றான் அவர் அணைப்பில் கட்டுடுண்டவனாக.
அவனை நிமிர்த்தி முகம் பார்த்தார் அப்பா ‘ரொம்ப பெருமையா இருக்குடா கண்ணா. ரொம்ப சந்தோஷமா இருக்கு’ என்றார் அவர்
‘ஆமாம் அது என்னடா அது? நான் எப்பவும் எங்க அப்பாவுக்கு நல்ல பிள்ளையா இருந்ததே இல்லைன்னு சொல்லிட்ட எல்லார் முன்னாடியும்? அது எப்படி அப்படி சொல்வே நீ? செல்லமாய் இரண்டு அடி அடித்தார் அவன் முதுகில்.
‘அடிங்கபா. இன்னும் நல்லா அடிங்க..’ அவன் சொல்ல
‘நீ எப்பவும் எனக்கு நல்ல பையன்தான்டா. அருமையான பையன். நடுவிலே ஏதோ டைம் சரியில்லை. இப்படி எல்லாம் நடந்து போச்சு. இப்போ எல்லாம் சரியா போச்சு’ கண்ணீர் மல்க சொல்லிவிட்டு அவனை அணைத்துக்கொண்டார் மறுபடியும்.
‘பயமா இருந்ததுடா அப்பாவுக்கு. எங்கே உன்னை பார்த்ததும் எல்லார் முன்னாடியும் அப்பா அழுதிடுவேனோன்னு பயமா இருந்தது. அதனாலேதான் ஏர்போர்ட் வரலை’ என்றார் அவர் குரல் தழுதழுக்க.
அவர் தோளில் சாய்ந்திருந்தவனின் கண்ணில் இப்போது கண்ணீர் துளிகள். ‘இனி எந்த நிலையிலும் அப்பாவுக்கு தன்னால் ஒரு தலை குனிவு வந்து விடக்கூடாது’ இன்னொரு முறை சொல்லிக்கொண்டான் உறுதியாக.
இரண்டு நாட்கள் கடந்திருந்தன
‘இப்போதும் அவனுடைய அழைப்புகள் அவளால் ஏற்க படவில்லை. ஒரு வேளை அன்று எல்லார் முன்னிலையிலும் அவளை தோழி என்று சொன்னதில் ஏதேனும் பிரச்சனை முளைத்திருக்குமோ?’ யோசனையில் விழுந்தான் அவன்.
சில மணி நேரங்கள் கடந்திருந்தன
அந்த மாலை நேரத்தில் அங்கே அனுராதாவின் வீட்டில் சமையலறையில் இருந்தாள் அவள். சுடச்சுட பூரி பொறித்துக்கொண்டிருந்தாள்.
‘சொல்லு ஸ்வேதா. ரகு வந்து ரெண்டு நாளாச்சு. நீ அவன்கிட்டே பேசினியா என்ன?’ அவசரமாக வெளியில் கிளம்பிக்கொண்டே தனது தங்கையுடன் பேசிக்கொண்டிருந்தாள் அனுவின் அண்ணி கீதா.
பேசிக்கொண்டே சமையலறைக்குள் எட்டிப்பார்த்து ‘நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வந்திடறேன் அனு. வீட்டிலே வேறே யாரும் இல்லை. கதவை சாத்திகோ’ என்றாள் கீதா.
‘பெரியம்மா.. வர நேரம்தான். நீங்க கதவை சும்மா சாத்தி வெச்சிட்டு போங்க..’ சொல்லிவிட்டு தனது வேலையில் மும்முரமானாள் அனுராதா.
கதவை சாத்திக்கொண்டு நகர்ந்தாள் கீதா. அவள் அந்த நேரத்தில் அங்கே இருந்திருந்தால் கதை வேறு திசையில் திரும்பி இருக்குமோ? அனுவுக்கும் ஹரிஷுக்கும் திருமணம் என்ற பேச்சே கிளம்பி இருக்காதோ? விதி வேண்டுமென்றே அவளை அந்த நேரத்தில் கிளப்பி அனுப்பி விட்டதோ?
சில நிமிடங்கள் கடந்திருக்க அழைப்பு மணியின் சத்தம் கேட்டது அனுவுக்கு.
‘கதவு திறந்துதான் இருக்கு பெரியம்மா உள்ளே வாங்க’ வந்தது பெரியம்மா என நினைத்துக்கொண்டு குரல் கொடுத்தாள் அனுராதா. மெல்ல கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தான் ஹரிஷ். கேட்டது அவள் குரல்தான் என புரிந்தது ஹரிஷுக்கு.
‘அவள் ஏன் என்னை தவிர்க்கிறாள்?’ அந்த கேள்விக்கு அவனுக்கு இன்னமும் விடை கிடைத்த பாடில்லை. நேராக அவளை வீட்டில் சென்று பார்த்துவிட்டால் என்ன என்று ஒரு எண்ணம் அவனை குடைந்துக்கொண்டே இருந்தது.
‘ஆம்!!! எந்த பிரச்சினையையுமே நேரடியாக சந்தித்து முடிப்பதுதான் சரி’ தோன்றியவுடன் இதோ வந்து நிற்கிறான் அவள் வீட்டுக்குள்.
ஹாலில் யாரும் இருப்பதாக தெரியவில்லை. கூடத்தை ஒட்டிய சமையலறையிலிருந்து வரும் வாசனையே அவள் பூரி செய்துக்கொண்டிருக்கிறாள் என்று புரிய வைத்தது அவனுக்கு.
‘ரொம்ப பசிக்குது. எக்ஸாம் வேறே எழுதணும் எனக்கு ரெண்டு பூரி கிடைக்குமா? என்றான் சற்றே சத்தமாக.
தொடரும்......
{kunena_discuss:1147}