"கலெக்ட்ரா?அவரையா அன்னிக்கு டிராப் பண்ணிட்டு வந்த?"
"ம்..."-உதயக்குமார்,அசோக்கை குறித்து அறியாதது இல்லை.அவன் எப்படிப்பட்டவன்,அவன் நேர்மை எப்படி,பணியிடத்தில் அவன் நடந்துக் கொள்ளும் விதம் யாவற்றையும் அறிவார்!!
"எவ்வளவு நாளா?"
"நான்கு மாதமா!"
"உங்க அம்மா இதற்கு சம்மதிப்பான்னு எனக்கு நம்பிக்கை இல்லை!"
"அப்பா!"
"நிஜமாம்மா!அவருக்கு யாருமில்லை தெரியும்ல!அதுவுமில்லாம,இந்தக் காதல் எல்லாம் அவளுக்கு பிடிக்காது!"
-சட்டென கண்கள் கலங்கின சிவன்யாவிற்கு!!
"அப்பா!நான் அவரை விரும்புறேன்பா!அவர் கூட இருந்தா சந்தோஷமா இருப்பேன்!"
"நான் மட்டும் இதில் முடிவு எடுக்க முடியாதும்மா!மீனாவுடைய சம்மதமும் அவசியம்!என்னைவிட,அவளுக்கு தான் உன் மேலே உரிமை அதிகம்!"
"அப்போ எனக்கு என் வாழ்க்கையில உரிமையில்லையாப்பா?"-ஸ்ருதி இறங்கியது அவள் குரலில்.
"கண்ணா!நான் சொல்ல வருவதை..."-அவர் பேசி முடிப்பதற்குள் தன் தந்தையின் நெஞ்சத்தில் தஞ்சம் புகுந்தாள் சிவன்யா.
"எனக்கு அசோக் வேணும்பா!அவரை வைத்த இடத்துல வேற யாரையும் என்னால வைக்க முடியாது!ப்ளீஸ்பா!புரிந்துக்கோங்க!"-தன் தந்தையிடத்தில் மன்றாடினாள் அவள்.தவமிருந்து பெற்ற கன்னிகை,மனம் கொண்டவனையே மணாளனாக வேண்டி,தந்தையிடத்தில் மன்றாடுகிறாள்!!எந்தத் தந்தைக்கும் வர கூடாத தர்ம சங்கடமான நிலை!!
"சரி...சரி...அழாதே!அப்பா இருக்கேன்!"-தன் புதல்வியின் கேசத்தை கோதினார் உதயக்குமார்.
தன் தந்தையின் அருகாமையை துறந்தவள்,அதே கண்ணீருடன் தனது அறைக்கு ஓடி மறைந்தாள்.
அடுத்த நாளின் ஆதவ உதயம்,அவளுக்கு மட்டும் அஸ்தமனமாய் தெரிந்தது.தந்தைக்கு மட்டுமே தெரிந்த உண்மை,தாய்க்கும் தெரியுமென்றால்,அனைத்தும் கை மீறிப் போய்விடும்!!இத்தனை ஆண்டுகளாய் எவரிடமும் அடிப்பணியாத மனதினை அடக்கி ஆண்டுக் கொண்டிருக்கிறான் ஒருவன்!காரணமில்லாமலா இருக்கும்??ஏன் சிந்திக்க மறுக்கின்றனர்?ஏன் என் எண்ணத்தை ஏற்க மறுக்கின்றனர்??சிந்தித்தப்படி சமையலறைக்குள் நுழைந்தாள் அவள்.
"என்னடி?பசிக்குதா?"
"ம்??ம்ஹூம்...!தண்ணீர் குடிக்க வந்தேன்மா!"
"ம்...அந்தப் பையன் வேணாம்னு சொல்லிட்டான்னு கவலைப்படுறீயா?"-ஆறுதலாய் கேட்டார் மீனாட்சி.எப்படி புரிய வைப்பாள் மனதின் எண்ணங்களை தாயிடத்தில்??அச்சம் தடுத்தது!!
"மா!நான் உங்கக்கிட்ட ஒரு முக்கியமான...."என்று ஆரம்பித்தவளை,
"மீனா!"-என்று ஒலித்த அவள் தந்தையின் குரல் தடுத்தது.
"என்னங்க!"
"இதைப் பாரு!"-என்று எதையோ காட்டினார் அவர்.அதைக் கண்டவரின் விழிகளில் எண்ணற்ற கேள்விகள்!!
"எப்படி இருக்கான் பையன்?நம்ம பொண்ணுக்காக தான்!பாஸ்கர் இப்போ தான் கொடுத்துட்டுப் போனான்!"-அவர் மொழிகளை கேட்டவரின் முகம் நந்தவனமாய் மலர,உடைந்து சுக்கலானது சிவன்யாவின் மனம்.!!தந்தையிடமிருந்து எதிர்நோக்கா மாற்றமிது!அவரும் எனை புரிந்திருக்கவில்லையா?கண்ணீர் திரண்டது கண்களில்!!ஒரு இயலாமையுடன் தந்தையை கண்டாள் அவள்.அவள் பார்வையில் அப்படியொரு ஏமாற்றம்!!மௌனமாக தனது அறையை நோக்கி நடந்தாள்,தாயின் குரலையும் மதியாதவளாய்!!!
தாழ்ப்பாள் உயர்ந்து கதவை பூட்டிக்கொள்ள,கண்ணீர் சற்றே சப்தத்துடன் வெளிவந்தது.
"கடவுளே!நான் என்ன பண்ணுவேன்?அப்பாக் கூட இப்படி பண்ணிட்டாரே!நான் தர்மா அம்மாக்கு கொடுத்த சத்தியத்தை எப்படி மீறுவேன்?முடியாது...!என்னால அசோக் இல்லாம வாழ முடியாது!அவங்களுடைய எந்த முடிவையும் கேட்கும் தைரியம் எனக்கில்லை!!"-அழுது புலம்பினாள் அவள்.
தனது இல்லத்தில் தாயின் முன்னிருந்த தீபத்தினை ஏற்ற முனைந்தான் அசோக்.
"சிவன்யா விஷயத்துல உங்க முடிவு என்னன்னு இன்னும் எனக்கு புரியலைம்மா!மனசுல ஒரு பயம் இருக்கத்தான் செய்யுது!என்ன இருந்தாலும் அவ ஒரு பொண்ணும்மா!ஒருவேளை,அவங்க வீட்டில் எங்க விருப்பத்தை ஏற்கலைன்னா,நான் கடைசிவரை அவங்க நினைவுகளிலே வாழ்ந்துடுவேன்.எனக்கு அது புதிதல்ல!அவங்க நிலையை நினைத்தால் தான் பயமா இருக்கு!அவங்க ரொம்ப நல்லவங்கம்மா!ஒரு சின்ன ஏமாற்றத்தை கூட தாங்கிக்க முடியாத மென்மையான மனம் அவங்களுக்கு!காலம் கடக்கும் முன்னாடி எதாவது முடிவெடுங்கம்மா!"-என்று வேண்டியப்படி,தீபத்தை அவன் ஏற்ற முனைய,அது காற்றில் அணைந்துப் போனது.என்றுமே நிகழ்ந்திராத இந்நிகழ்வு,அன்று அவன் மனதில் பெருங்கலக்கத்தை உண்டாக்கியது.மீண்டும் முனைந்தான்.மீண்டும் அதே நிலை தான்.