20. சர்வதோபத்ர... வியூகம்...!!! - வசுமதி
வாடைக்காற்று முகத்தில் பட்டு தியாவின் கார்கூந்தளுடன் விளையாடிக்கொண்டிருந்தது.. அவளின் மனதைப் போலவே அவளது எதிரில் தெரியும் கடலும் கொந்தளித்துக்கொண்டிருன்தது..
எதுவோ தன்னிடம் பேசவேண்டும் கேட்கவேண்டும் என கடற்கரைக்கு அழைத்து வந்தவளது அமைதி கண்டு வேணுவின் மனதில் சுணக்கத்தோடு ஒரு தயக்கம்..அவளது அமைதி கலையும் வரை அவரும் கடலை வெறிக்கத் துவங்கினார்..
தியா சென்னை வந்து நான்கு தினங்கள் கடந்து விட்டது..
தனது தாய் தந்தை வாழ்ந்த அதே வீட்டில் இன்னும் தனது சித்தப்பா இருக்கிறார் என்பதறிந்து அங்கு வந்தவள் அவரைக் கண்டதும் அவரை அனைத்துக் கொண்டு ஓ வென்று கதறியழுதாலேயன்றி வார்த்தைகளை வெளியே விடவில்லை..
கடந்து போன மூன்று நாட்களும் தியா கையில் எடுத்துக்கொண்டது மௌனம் மௌனம் மௌனம் மட்டுமே..
வேணுவிற்கு அவளது அமைதி கவலையை அளித்தாலும் அவள் தன்னை தேடி வந்ததே போதுமானதாக இருந்ததால் அவளைத் தொந்தரவு செய்யாமல் அவரும் அமைதி காத்தார்..
நான்காம் நாள் விடியலில் எழுந்த தியா நேராக வேணுவிடம் வந்து,”நான் உங்ககூட கொஞ்சம் பேசணும் சித்தப்பா..வெளியே போகலாமா..??”,என்று கேட்டாள்..
அதன் பொருட்டே இப்பொழுது அவர்கள் கடற்கரையில்..
கதிரவன் கடலுடன் சேரும் வரையில் அமைதியை கைவிடாதவள் ஆதவன் கண்ணைவிட்டு கடலில் முக்குளித்ததும் வேணுவிடம் திரும்பி,”என்ன மன்னிச்சிருங்கப்பா..உங்களை நான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன்..”,என்றாள் கண்களில் கண்ணீருடன்..
அவளது தலையை வருடிக்கொடுத்தவர்,”எனக்கு உன் மேல கோவம் எதுவும் இல்லடா குட்டி..”,என்றார் வாஞ்சையாக..
இதை கேட்டு மேலும் நீர் கோர்த்துக்கொண்டது தியாவிற்கு..
அவளது கன்னங்களில் வழிந்த நீரைத் துடைத்தவர் தீர்க்கமாக அவளைப் பார்த்து,”இங்க பாருங்க தங்கம்..எனக்கு உங்க மேல எந்த வருத்தமும் இல்லை..நீங்க ரொம்ப ஸ்டாரங் கேர்ள் தானே..அழக்கூடாது..”என்றார் குழந்தைக்கு சொல்வது போல்..
“ம்..ம்..நான் அழல..”,என்று தனது கண்ணீரை புறங்கையால் துடைதுக்கொண்டவள்,”சித்தப்பா அப்பாவும் அம்மாவும் உயிரோட தான் இருக்காங்க..”,என்றாள் கண்களில் சிரிப்புடனும் கோபத்துடனும்..
அவள் சொன்னதை நம்ப இயலாமல் திகைப்பாக அவளை பார்த்தபடி நின்றார் வேணு..
“ஆமா சித்தப்பா அவங்க உயிரோட தான் இருக்காங்க..ஆனால் எங்கன்னு தெரியலை..”,என்றாள் தியா அவரை உலுக்கி..
“என்ன பாப்பா சொல்ற..?? கேக்க எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா..?? உனக்கெப்படி தெரியும்..??”,என்று கேள்விகனைகளைத் தொடுத்தார்..அவரது கண்களிலும் நீர்..தாய் தந்தையாய் தன்னை வளரத்த தமையன் உயிருடன் எனக் கேட்டவுடன் மகிழ்ச்சி ஊற்று நெஞ்சினில்..
“எப்படித் தெரியும்னு கேக்காதீங்க சித்தப்பா..அவங்க விபத்துக்கு அப்பா கூட வேலை செஞ்ச ராமகிருஷ்ண ஆச்சார்யா தான் காரணம்..”
“என்னடா சொல்ற..?? அவரா..??”,சற்று அதிர்ச்சியாக..
“ஆமா சித்தப்பா..அவரே தான்..ஆனால் எதுக்காக அவர் இப்படி பன்னுனாருன்னு தான் தெரியலை..”
சற்று நேரம் எதையோ சிந்தித்தவர் நினைவு வந்தார் போல்,”குட்டிமா அந்த விபத்தில் ஆச்சார்யாவோட தம்பிங்க குடும்பத்தில் இருப்பவர்களும் இறந்துவிட்டனர்..தெரியுமா உனக்கு..??”,என்று கேட்டார்..
“தெரியும் சித்தப்பா..எனக்கு என்னவோ அவங்களும் உயிருடன் இருப்பார்களோன்னு தோனுது..”,என்றாள்..
“எதை வெச்சு அப்படி சொல்லற பாப்பு..??”
“அப்பா அம்மாவோட விபத்துக்கு முன்னாடி ஊட்டிக்கு நம்ம போறப்போ வழியில் ஒருத்தரை சந்திச்சோமே..?? ஞாபகம் இருக்கா சித்தப்பா உங்களுக்கு..??”
சற்று யோசித்தவர்,”ஆமாம்..அவசரமாக அண்ணனை பார்க்கனும்னு வந்தாரே..??அவரையா சொல்ற..??”,என்று கேட்டார்..
“எஸ் அவரே தான்..அவர் ஆச்சார்யாவின் தம்பிகளில் ஒருவர்..”
“.................”
“அவர் அப்பாவை பார்க்க வந்த அன்னைக்கி அண்ணன் ஏதோ தப்பா பண்ற மாதிரி இருக்குன்னும் நம்மளை பத்திரமா இருக்கும்படி எச்சரித்தார் அப்பாக்கிட்ட..அப்பாவும் அம்மாவும் உயிருடன் இருக்கும் பட்சத்தில் அவர்கள் குடும்பமும் உயிருடன் தான் இருக்கவேண்டும்..”,என்றாள் தீர்க்கமாக..
“உனக்கு இதெல்லாம் எப்போ டா தெரியும்..??அதாவது அண்ணாவும் அண்ணியும் உயிருடன் இருப்பது..??”
“ஒரு வாரத்திற்கு முன்..ஒரு நாள் நடு ராத்திரி உங்களுக்கு போன் செய்தேன் அல்லவா அன்று..”,என்றாள்..