அமேலியா - 37 - சிவாஜிதாசன்
கோர தாண்டவம் ஆடிய இயற்கை அன்னை கோபம் தணிந்து ஓய்வெடுக்க தொடங்கியதால், உலகம் மீண்டும் அமைதியை நோக்கி திரும்பியது. புயலால் நிலைகுலைந்து போன மக்கள் வெளியில் தலைகாட்ட தொடங்கினர். உயிர் சேதங்களையும் பொருட் சேதங்களையும் தொலைக்காட்சி, வானொலி செய்தி வாசிப்பாளர்கள் பட்டியலிட்டுக்கொண்டிருந்தனர். ஏராளமான மக்கள் வீடிழந்து அகதிகளாயினர்.
"மீண்டும் இயல்பு நிலை திரும்ப சில வாரங்கள் பிடிக்கும். அமெரிக்க அரசாங்கம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறது. தற்காலிக சிரமங்களை பொறுத்துக்கொள்ளுங்கள்" என பத்திரிகையாளர்கள் சூழ்ந்திருக்க அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உரையாற்றினார்.
தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த வெள்ள நீரை வெளியேற்றும் முயற்சியில் மாநகராட்சி ஊழியர்களும் மக்களும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். தனியார் தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு தேவையான உணவு, போர்வை, மருந்து போன்றவற்றை வழங்கிக்கொண்டிருந்தார்கள்.
கடல் அலையின் ஓசையை காதில் வாங்கியபடி சிலையென நின்று எதைப் பற்றியோ சிந்தித்துக்கொண்டிருந்தான் ஜான். அவன் மனம் நிம்மதியிழந்து வாழ்க்கையை வெறுத்தது. எங்கு சென்றாலும் விதியின் கண்களில் இருந்து தப்பித்துவிட முடியாது என்ற எதார்த்தத்தை எண்ணிப் பார்த்தான் ஜான்.
தன் வாழ்வின் நிம்மதிக்காக வாங்கிய அந்த கடற்கரை வீடு புயல்காற்றால் சேதமடைந்ததை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் கனவே நொறுங்கி விழுந்தது போன்ற உணர்வை அடைந்தான் ஜான். மீண்டும் கடல் அலை ஓசையில் தன் கவனத்தை செலுத்தினான்.
ஷூட்டிங் ஆட்கள் தாங்கள் கொண்டு வந்த பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் மேஜையை டர் டர் என்று இழுக்கும் சப்தம் ஜானின் எரிச்சலை மேலும் அதிகரித்தது. அமைதியாக சிதிலமடைந்த வீட்டினை சுற்றிப் பார்த்தான். அவன் ஆசை ஆசையாக பார்த்து பார்த்து செய்த வீட்டின் அலங்காரங்கள் அலங்கோலமாக காட்சி தந்தது.
ஷூட்டிங் நடத்த முடியாத டென்ஷனில் டைரக்டர் விஷ்வா பார்த்தவர்களை எல்லாம் திட்டிக்கொண்டிருந்தார். அவர் பொறுமை இழந்ததற்கான அடையாளமாக வாயில் சிகரெட் தொங்கிக்கொண்டிருந்தது.
ஜானின் கண்கள் ஜெஸிகாவை தேடின. தேவையற்றோர் எல்லாம் ஜானின் பார்வையில் விழுந்தார்களே தவிர ஜெஸிகாவை மட்டும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஷூட்டிங் இனி நடைபெறாது என தெரிந்ததும் சில பணியாளர்கள் காலையிலேயே அங்கிருந்து புறப்பட்டு சென்றதாக சிலர் பேசிக்கொண்டிருந்தது ஜானின் காதில் விழுந்தது. அவர்களோடு ஜெஸிகாவும் சென்றிருப்பாள் என ஊகித்தான்.
இந்த உலகிலேயே மிகவும் வித்தியாசமான உயிரினம் மனித இனம் தான். அதிலும் அவர்கள் கொண்டிருக்கும் மனங்கள் இன்னும் வித்தியாசமானவை. இரக்கம், வஞ்சம், துரோகம், ஆசை, பாசம், காதல், வெறி என ஏகப்பட்ட குணாதிசயங்கள். அதில் எந்த குணாதிசயங்களை கொண்டிருக்கிறாள் ஜெஸிகா என ஜான் சிந்தித்தான்
கிடைக்காது, நடக்காது என தெரிந்தும் அதையே விரும்பும் மனதை கடவுள் கொடுத்தது எதற்காக? உண்மையில் கடவுள் நல்லவரா கெட்டவரா? எந்த நோக்கத்திற்காக அவர் மனிதர்களை படைத்தார்? மனிதர்களால் அவருக்கு ஏதேனும் பயனிருக்கிறதா?
நீதி, நேர்மை, சகிப்புத்தன்மை, பக்தி என நல்ல கருத்துக்களையே கூறும் கடவுள் எதற்காக நேர்மையற்றவர்களையும் கொலைகாரர்களையம் படைத்தார்? என்றோ எப்பொழுதோ கடவுள் தோன்றி மனிதர்களிடம் வாழ்ந்து அவர் பாவங்களை போக்கி இன்புறும் வாழ்க்கையை கொடுத்த கடவுள் இந்த இருபதாம் நூற்றாண்டில் ஏன் தோன்றவில்லை? தான் சார்ந்த கிறிஸ்துவ மதம் மட்டுமில்லாமல் வேறு எந்த மதத்து கடவுளும் இப்பொழுது தோன்றி போதனைகளை ஏன் வழங்கவில்லை?
இப்படி பல பல தத்துவ கேள்விகளை தனக்குள்ளாகவே கேட்டுக் கொண்டான் ஜான். திடீரென்று தனக்குள்ளாகவே சிரித்தவன், வெறுப்பு வந்தா தத்துவங்கள் எத்தனை வருது என தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.
ஷூட்டிங் ஆட்கள் செல்லவேண்டிய வேன் புயல்மழையால் பழுதானதால் மெக்கானிக் சரிபார்த்துக்கொண்டிருந்தார். "கிளம்புற வேளையில இது வேறயா" என வேலையாட்கள் நொந்துகொண்டார்கள். நீண்ட நேரத்திற்கு பின் வண்டி ஸ்டார்ட் ஆனது. அதில் வேலையாட்கள் கிளம்பி சென்றனர். டைரக்டரும் இன்ன பிற தொழிலாளர்களும் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தனர்.
"சார், நாம வேற வீட்டை பார்த்து ஷூட்டிங் நடத்தலாமா?" என டைரக்டரிடம் விவாதித்துக்கொண்டிருந்தார் ஒருவர்.
"நோ நோ, இந்த வீட்டை மறுபடியும் சீரமைச்சு இங்கயே தான் ஷூட்டிங் நடத்துறோம்" என்றார் டைரக்டர்.
"நேரம் விரயமாகிறது மட்டும் இல்லாம பணமும் விரயமாகுதுன்னு தயாரிப்பாளர் கோபப்படுறார்"