தொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 08 - வத்ஸலா
அங்கே திடீரென தோன்றியது சலசலப்பு. .
‘ஹேய்... கிரிக்கெட்டர் ஹரிஷ்...’ அங்கே சில குரல்கள். சடசடவென ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது அங்கே.
சந்தோஷ அலைகள் அவளுக்குள் அடித்து ஓய ஜிவ்வென்று ஏறிய ரத்த ஓட்டத்தின் வேகத்தில் கொஞ்சம் படபடத்து கையிலிருந்த அந்த சாக்லேட்டுடன் அவனிடம் ஓட தவித்த பாதங்களை தரையில் அழுந்த பதிய வைத்தபடி நின்றாள் அனுராதா.
இரண்டு பக்கமும் பாதுகாவலர்கள் போல் இரண்டு பேர், அவன் அருகில் வந்தவர்களை விலக்கிக்கொண்டே நடந்து வர, அவளுக்கு சற்றே அருகில் வந்திருந்தான் அவன். அவனருகில் நின்றிருந்தார் அவர்! அவர் தோற்றத்தை பார்த்தவுடன் அவர்தான் அவனது அப்பாவாக இருக்க வேண்டுமென புரிந்தது அவளுக்கு.
அவன் நடந்து வந்த விதம் அதிலிருந்த கம்பீரம் இவற்றை பார்த்தவளுக்கு தன்னையும் அறியாமல் புன்னகை எழுந்ததுதான். அவனை பார்க்க ஒரு அரசனை போலத்தான் தோன்றியது அவளுக்கு. அவனை அப்படி பார்க்க வேண்டுமென்பதுதானே அவளது நீண்ட நாள் ஆசை.
அவனது கையெழுத்துக்காக இரண்டு மூன்று பேர் அவனருகில் ஓடி வர, நின்றான் ஹரிஷ் அவன் கையெழுத்து போடுவதையே பார்த்திருந்தார் பெற்றவர். அவர் விழிகளில் பெருமை மின்னிகொண்டிருன்தது.
அங்கே இருந்தவர்களுக்கு கையெழுத்து இட்டுக்கொண்டே அவசரம் இல்லாமல் வெகு நிதானமாக விழிகளை நிமிர்த்தி அவள் பக்கம் பார்த்தான் ஹரிஷ். அவள் அங்கே நின்றதை அவன் முன்பே கவனித்திருக்க வேண்டுமென்று தோன்றியது அவளுக்கு.
அடுத்த நொடி இவளது புன்னகை இன்னமும் பெரிதாக, ஏதோ ஒரு யோசனையில் ஊறிப்போய், சற்றே இறுகி எல்லா பாவங்களையும் துடைத்து விட்ட பார்வை அவனிடத்தில். இதை சத்தியமாய் அவள் எதிர்பார்க்கவில்லை.
அவளை பார்த்ததும் மகிழ்ந்து மலர்வான் என்றே நினைத்திருந்தாள் அவள். அவள் புன்னகை மெல்ல தேய, மாறாத யோசனையுடன் கையெழுத்தை போட்டு விட்டு பார்வையை திருப்பிக்கொண்டு தலையை இடம் வலமாக அசைத்துக்கொண்டே நகர்ந்தான் அவன்.
அதற்குள் அவனது அப்பா ஏதோ சொல்ல அழகான சிரிப்புடன் ஏதோ சொல்லிக்கொண்டு நடந்தான் அவன்
சட்டென ஏதோ ஒன்று கைவிட்டு போனதொரு உணர்வு. ‘என்னவாயிற்று இவனுக்கு?’
நம்ம கிரிக்கெட் டீமுக்கு இன்னைக்கு நைட் சென்னை ராஜ்பவன்லே டின்னராம். நாளைக்கு காலையிலே முதலமைச்சர் நம்ம ஸ்டேட் ப்ளேயர்ஸ்க்கு அவார்ட்ஸ் கொடுக்கிறாராம். அதுக்குதான் போறாங்க போல.’தகவல் சொன்னாள் தோழி அப்படியே நின்று விட்டவளை கலைத்தாள் உடன் வேலை பார்க்கும் தோழி.
‘என்னாச்சு உங்க ஆளு போன திசையையே பார்த்திட்டு நிக்குற?’
‘என் ஆளா? யாரு சொன்னது? சற்றே தெளிந்து சாக்லேட்டை கைப்பைக்குள் போட்டபடியே கேட்டாள் அனுராதா.
‘அதான் ஊரே சொல்லுதே.’ என்றாள் தோழி. ‘.
‘ஆமாம்.... அவர் என்னை பார்த்து ஸ்மைல் கூட பண்ணலை.’ மனதில் இருந்த ஆதங்கம் வார்த்தையில் வந்தே விட்டது.
‘அது எப்படி பப்ளிக் பிளேஸ்லே உன்னை பார்த்து தெரிஞ்ச மாதிரி காட்டிக்க முடியுமா? அதுவும் கூட அவங்க அப்பா வேறே இருந்தார். என்றாள் தோழி சட்டென. ‘ஒரு வேளை அதுதான் உண்மையாக இருக்குமோ? யோசித்தபடியே விமான நிலையம் உள்நோக்கி நடந்தாள் அனுராதா.
அங்கே செக் இன் முடிந்து விமானத்தில் ஏறுவதற்கு தயாரக நின்றிருந்தான் ஹரிஷ். ‘ பார்க்க போவதில்லை அவனை. அந்த பக்கமும் திரும்ப போவதில்லை நான்’ என்னதான் தனக்குள்ளே சொல்லிக்கொண்டாலும் விழிகள் அவன் பக்கம் போகத்தான் செய்தது.
அவளையேதான் பார்த்திருந்தான் அவன். இப்போது மெதுமெதுவாய் விரிந்தன அவன் இதழ்கள். புருவங்களை ஏற்றி இறக்கி கண் சிமிட்டினான் ஹரிஷ் ‘ரொம்ப பயந்துட்டியா என்பது போல.’
ரகசியமாய் பழிப்பு காட்டி திரும்பிகொண்டாள் அவள். ‘என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறான் அவன்?’
அடுத்த சில நிமிடங்களில் விமானத்தில் ஏறி சென்னை நோக்கி பறந்துக்கொண்டிருந்தான் ஹரிஷ். மனம் ஒரு நிலையில் இல்லைதான். ஏதேதோ நினைவலைகள் அவனை சுற்றிக்கொண்டிருந்தன. ஒரு ஆழ்ந்த சுவாசத்துடன் கண்களை மூடி பின்னால் சாய்ந்துக்கொண்டான் ஹரிஷ்.
‘அ...ம்....மா... அ....ம்.....மா....... வலிக்குது......’
எப்போது உறங்கிப்போனானோ? கனவில் அந்த நினைவுகளுடன் கூடிய அந்த குழப்பமான காட்சிகள் வந்து போக திடுக்கென விழித்துக்கொண்டான் ஹரிஷ். சென்னை நோக்கி பறந்துக்கொண்டிருந்தது விமானம்.
அதே நேரத்தில் அங்கே ரகுவின் வீட்டில்
உணவு மேஜையில் அமர்ந்திருந்தனர் அனைவரும். ஸ்வேதா அனைவருக்கும் பரிமாறிக்கொண்டிருந்தாள். பொதுவாக அவனருகில் அமர்ந்து சாப்பிடுவதை கூட தவிர்த்து விடுவாள்தான் ஸ்வேதா.