‘தி மோஸ்ட் டிபெண்டபிள் பிளேயர் இன் அவர் டீம்.’ வந்திருந்தவர்களில் பலர் அவனது விளையாட்டு திறனை புகழ்ந்த விதத்தில் அவன் தனக்காக எதை எல்லாம் இழக்க முடிவெடுத்திருக்கிறான் என புரியாமல் இல்லை ஸ்வேதாவுக்கு.
அதே நேரத்தில் அவனை ஒரு கிரிக்கெட் வீரன் என மனதார ஏற்றுக்கொள்ள, மனதார ரசிக்க அவளால் ஏனோ இயலவே இல்லை.
அவள் அருகில் நின்றவனின் கையை பிடித்து லேசாக இழுத்தாள் ஸ்வேதா ‘நீங்க இதுக்கு அப்புறம் கிரிக்கெட் விட்டுடுவீங்கதானே?’
திரும்பினான் ரகு. கொஞ்சம் கூட கசப்பு கலக்காத புன்னகையுடன் சொன்னான் அவன் ‘கண்டிப்பா விட்டுடுவேன்’
ஆளுனரின் சம்பிரதாய பேச்சுக்கள் பாரட்டுக்கள் முடிந்து இரவு உணவு ஆரம்பித்திருக்க அப்போது அப்பாவும் மகனும் அமர்ந்திருந்த மேஜைக்கு மனைவியை அழைத்துக்கொண்டு வந்தான் ரகு.
‘நாங்களும் இங்கே உட்கார்ந்துக்கலாமா?’ அவன் கேட்க
‘வாடா வந்து உட்காரு..’ மகிழ்ச்சியுடன் புன்னகைதான் ஹரிஷ். அவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்ததில் நிறையவே திருப்தி ஹரிஷினிடத்தில்.
சில நொடிகள் கடக்க ரகு ஹரிஷின் தந்தையுடன் பேசிக்கொண்டிருக்க
‘அன்னைக்கு நீங்க வீட்டுக்கு வந்தப்போ எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை எனக்கு. அதுதான் உங்களை மீட் பண்ண முடியலை ‘ வார்த்தைகளில் சேர்த்துக்கொண்ட நிஜமான மன்னிப்பின் பாவத்துடன் ஹரிஷை பார்த்து சொன்னாள் ஸ்வேதா.
‘தட்ஸ் ஒகே சிஸ்டர். அதுதான் இன்னைக்கு பார்க்கிறோமே..’ என்றான் நட்பான புன்னகையுடன்.
சில நிமிடங்கள் சாதாரன பேச்சுக்களுடன் கடக்க தட்டில் வேறு உணவுகளை எடுத்துக்கொண்டு வர ஸ்வேதா எழுந்து செல்ல அக்காவென ஒளிர்ந்தது அவளது கைப்பேசி திரை. அதில் தெள்ளத்தெளிவாக தெரிந்தது அந்த முகம். அவளது அக்கா கீதாவின் புகைப்படம்.
வெகு இயல்பாகத்தான் அதன் மீது விழுந்தது ஹரிஷின் பார்வை. அதே நேரத்தில் அதே புள்ளியை தொட்டது அவனது அப்பாவின் பார்வையும். அப்பட்டமாய் ஒரு முக மாற்றம் அவரிடத்தில்.
ஸ்வேதா, மேஜைக்கு வந்து அமர்ந்தவள் அக்காவுடன் அளவளாவ துவங்க விருட்டென நிமிர்ந்து அவள் முகம் பார்த்தார் அப்பா.
‘இவள் கீதாவின் தங்கையா?’
கீதா பற்றிய நினைவுகளால் அவருக்குள் கனல் தகித்துக்கொண்டிருக்கும் என ஹரிஷுக்கு புரியாமல் இல்லை.
‘எக்ஸ்கியூஸ் மீ ‘ எழுந்துவிட்டார் அப்பா. மெல்ல நகர்ந்தார் அங்கிருந்து.
மறுமுனையில் அவளா? நினைக்கும் போதே அவன் மனதிற்குள்ளும் ஒரு பாரம் பரவுவதை தவிர்க்க முடியவில்லை அவனால். மெல்ல இயல்புக்கு வந்து அங்கிருந்து எழுந்தான் ஹரிஷ்.
‘எக்ஸ்கியூஸ் மீ ரகு. இப்போ வந்திடறேன்..’ அங்கிருந்து விடைபெற்று இல்லை விடுபட்டு அகன்றான். ஏனோ உள்ளம் தீப்பிழம்பாய் தகித்தது. சற்றே நிதானத்துக்கு வந்து ஏதோ ஒரு குளிர்பானத்தை சுவைத்தபடியே மற்றவர்களுடன் கலந்து பேசத்துவங்கினான் ஹரிஷ்.
சில நிமிடங்கள் இப்படியே கடக்க
இதோ முடிந்துவிட்டது ஞாயிற்றுகிழமை. கை கடிகாரத்தை பார்த்துக்கொண்டான் ஹரிஷ். விட்டால் காலையிலேயே என்னிடம் சாக்லேட்டுடன் ஓடி வந்திருக்கும்தான் என் தேவதை. அவள் நினைவில் மெல்ல புன்னகைத்துக்கொண்டான் ஹரிஷ்.
இரவு வீட்டுக்கு வந்திருந்தாள் அனுராதா.
கூடத்தில் பெரியம்மா உட்பட அனைவரும் அமர்ந்திருக்க தொலைக்காட்சி செய்திகளில் ஆளுனர் விருந்தை காண்பித்துக்கொண்டிருந்தார்கள். சொல்லிவைத்ததை போல் டி.வி திரையில் அவன் முகம். விழிகள் விரிய டி.வி திரையையே பார்த்திருந்தாள் இவள். அவளை படித்துக்கொண்டிருந்த ஷங்கரின் முக பாவத்தை அவள் கவனிக்கவில்லை.
விடிந்திருந்தது திங்கட்கிழமை. வழக்கம் போல் வேலைக்கு கிளம்பிக்கொண்டு இருந்தாள் அனுராதா.
‘ஹரிஷுக்கு பதில் சொல்லிட்டியாமா?’ இது பெரியப்பா.
‘இல்ல பெரியப்பா’
‘பாவம்மா பையன். சீக்கிரம் சொல்லிடு..’ சிரித்தார் அவர்.
‘சரி பெரியப்பா’ தலை அசைத்தாள் இவள். நிறைய யோசித்து ஒரு முடிவுக்கு வந்து கைப்பேசியில் தொகுத்தாள் குறுஞ்செய்தியை. ‘வான்ட் டு மீட் யூ டுடே...;
அவனுக்கு அதை அனுப்பி ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரங்கள் கடந்த பிறகும் பதிலில்லை அவனிடமிருந்து. கைப்பேசியின் ஒவ்வொரு சிணுங்கலிலும் அவன்தான் அவன்தான் என எத்தனை முறை ஏமாறுவதாம்?
‘முதலமைச்சர் விழாவில் இருப்பானாக இருக்கும். பதில் அனுப்ப நேரமில்லையாக இருக்கும்.’ தன்னைத்தானே அவள் சமாதான படுத்திக்கொண்டாலும் மனம் ஆறவில்லைதான்.
மாலை ஐந்து மணி.
சென்னை விமான நிலையத்தில் டெல்லியிலிருந்து வந்து இறங்கி இருந்தான் அவன். நம் விவேக் ஸ்ரீனிவாசன். காலை முதலே விமானத்தில் பறந்துக்கொண்டிருந்தாலும் கொஞ்சம் கூட சோர்வில்லாத தோற்றத்துடன் அவன்.