வானத்தில் பறக்கும் போது முகத்தில் மிளிரும் அதே மகிழ்ச்சி இப்போதும். இன்னமும் அவனால் நம்ப முடியவில்லைதான் அதை. நடந்தது எல்லாம் கனவா? இல்லை நிஜமா? புரியவில்லை அவனுக்கு.
அப்பா அவனுக்கென அடையாளம் காட்டிய பெண் நிஜமாகவே கண் முன்னே வந்து நிற்பாள் என கண்டிப்பாய் நினைக்கவில்லை அவன். ஒரு முறை தனது கையை அவனே பார்த்துக்கொண்டான்.
ஒரு கையில் காபி கோப்பை. மறுகையில் இவன் கரம். வா என்னோடு என்ற உரிமையுடன் அவனை தரதரவென இழுத்துக்கொண்டு எங்கே நடந்தாள் அவள்? புரியவில்லை. அவள் காதோரம் ஊஞ்சலாடிக்கொண்டிருந்த அந்த பெரிய தொங்கட்டான்கள் இன்னமும் அவன் கண் முன்னே வந்து வந்து போய்க்கொண்டிருந்தது.
தலையை குலுக்கிக்கொண்டு தனக்குத்தானே சிரித்துக்கொண்டான் விவேக்.
அதே நேரத்தில் அங்கே நின்றிருந்தாள் அனுராதா. அங்கிருத்து அந்தமான் தலைநகர் போர்ட் ப்ளேர்க்கு அடுத்த விமானம். ஹரிஷ் திடுமென வந்து நிற்பானோ என எதிர்பார்த்து ஏமாந்தாகி விட்டது. இனி அவனை இன்று பார்ப்பதற்கு வழியில்லை என்று தோன்றியது அவளுக்கு.
‘ஏதோ ஒன்று சரியில்லை. வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வந்த ஹரிஷ் இவனில்லை.’ கூவிக்கொண்டே இருந்தது அவள் மனம்.
அப்போது ‘ஹாய்... அனு....’ அவள் பின்னாலிருந்து கேட்டது அந்த குரல்
திடுக்கிட்டு திரும்பியவள் புன்னகைத்தாள். ‘ஹாய் கேப்டன்..’ அங்கே நின்றிருந்தான் விவேக் ஸ்ரீனிவாசன்.
‘அப்புறம்... நல்லா இருக்கீங்களா?’
‘ரொம்ப நல்லா இருக்கேன் கேப்டன்..’
‘ஆஹான்..... எனக்கு என்னமோ அப்படி தோணலையே’ என்றான் அவள் கண்களை ஊடுருவிய படியே.
‘இல்ல கேப்டன். நல்லாதான் இருக்கேன்..’
‘அப்படியா? இருக்கட்டும். ஸோ... போர்ட் ப்ளேர் போக ரெடி இல்லையா? குட்’ சொல்லிவிட்டு புன்சிரிப்புடன் நகர்ந்தான் விவேக்.
‘திஸ் இஸ் யுவர் கேப்டன் விவேக் ஸ்ரீனிவாசன் வெல்கமிங் யு ஆன் போர்ட் ‘ உற்சாகத்தில் திளைத்தது அவன் தொனி ‘ப்ளீஸ் டைடென் யுவர் சீட் பெல்ட்ஸ். வி ஆர் ரெடி டு மூவ் ‘
கடைசியில் அனுராதா கைப்பேசியை அணைக்கும் வரை அவனிடமிருந்து பதிலில்லை.
‘என்னாச்சு ஹரிஷ்?’ வாய்விட்டு கேட்டுக்கொண்டாள் தோற்றுப்போன குரலில்
எப்போதும் போல் விமானத்தின் பாதுகாப்பு விவரங்களை பயணிகளுக்கு விளக்கிகொண்டிருந்தாள் அனுராதா சீறிக்கிளம்பி கடல் மேலே பறக்க ஆரம்பித்தது விமானம்.
ஒரு வேளை விமானத்தில் இருப்பானோ அவன்? சின்னதாய் ஒரு நப்பாசை. தாடி ஒட்டிக்கொண்டு வந்திருப்பானோ? கண்ணாடியும், தொப்பியுமாய் அமர்ந்திருப்பானோ? பல முகங்களில் அவனை தேடி தோற்றாகிவிட்டது. இருப்பினும் கண்கள் அவனுக்காக அலைபாய்ந்துக்கொண்டே இருந்தன.
தரை இறங்கியது விமானம். அன்றிரவு அங்கேயே தங்கவேண்டும் அனுராதா. கடற்கரையை ஒட்டியே அவர்கள் தங்கும் ஹோட்டல். இருள் சூழ்ந்துக்கிடந்தது வெளியே. . இந்த நிமிடம் வரை பதிலே வரவில்லை. அவனிடமிருந்து. ஜன்னலின் வழியே நிலவொளியில் மின்னிய கடலையே வெறித்துக்கொண்டிருந்தாள்
ஏதோ ஒரு உந்துதலில் அறையை விட்டு வெளியே வந்து கடலை நோக்கி நடந்தாள் அவள். சிறிது நேரம் காலாற நடந்தால் மனம் நிலைகொள்ளும் என்று தோன்றியது. சுற்றிலும் ஆள் நடமாட்டம் இல்லைதான். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நடந்தாள். சில நிமிடங்களில் கடலருகே வந்து நின்றாள்
கையில் இருந்த அந்த சாக்லேட் அவளை பார்த்து சிரித்தது. ‘பைத்தியம். நீதான் பைத்தியம். அவனை பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறாய்’
‘இருக்கட்டும்! நான் நானகவே இருந்துவிட்டு போகிறேன். அவனுக்கு என்னை பிடிக்காவிட்டாலும் எனக்கு அவனை பிடிக்கும்’ அவள் சொல்லி முடிக்க அவள் இதயம் நின்றே போனது. யாரோ அவளை இழுத்து தனது கைச்சிறையில் அடக்கி..
அவள் திமிறி விலக முற்படுவதற்குள் அவள் காதுகளுக்குள் ஒலித்தது அந்த குரல் ‘சாக்லேட் ப்ளீஸ்!’
வந்திருப்பது ஹரிஷ் என்பதை அவள் புரிந்து சகஜ நிலைக்கு வரவே சில நொடிகள் பிடித்தன. இதுவரை கண்களில் சேராத கண்ணீர் இப்போது சேர்ந்துக்கொண்டது.
‘ஒண்ணும் வேண்டாம் போ..’
‘ப்ளேன்லே அவ்வளவு தேடினே என்னை. இப்போ போங்கிற. இனி உன்னைவிட்டு எங்கேயும் போறா மாதிரி இல்லை. நீ இப்போ எனக்கு சாக்லேட் கொடு’ என்றான் ஹரிஷ்.
‘அப்படி என்றால் விமானத்தில் என்னுடன்தான் வந்தானா அவன்? ‘திருடன்’ கண்களில் கோபத்தை தேக்கிக்கொண்டு அவனை விலக்க முற்பட்டாள். ‘விடு என்னை யாரவது பார்க்க போறாங்க.