‘மை காட்..’ என்றான் அவன். அன்று ஆட்டத்தின் பாதியில் இவளை காணவில்லை என இவன் தேடிக்கொண்டிருந்தானே! அப்போது மயங்கி விட்டாளா இவள்?
அப்புறம் நான் ஊருக்கு வந்திட்டு டாக்டர்கிட்டே போய் கேட்டேன் ஹரிஷ். என்னவோ டெஸ்ட் எல்லாம் பண்ணாங்க. நான் ரொம்ப டென்ஷன், இல்ல ரொம்ப சந்தோஷமா ஆனா இந்த மாதிரி ஆகுதாம். அது மாதிரி நேரத்திலே திடீர்னு பிளட் ப்ரெஷர் இறங்கிடுமாம் எனக்கு. எப்பவும் ர்லாக்ஸ்டா இருங்கன்னு சொன்னாங்க. ஏதோ ஒண்ணு ரெண்டு டேப்லெட் கொடுத்தாங்க’ அவள் சொல்லிக்கொண்டே போக அவளையே தவிப்புடன் பார்த்திருந்தான் ஹரிஷ்.
இரண்டு நொடி இடைவெளிக்கு பிறகு ‘சாரி ஹரிஷ்...’ என்றாள் அவள்.
‘எதுக்குடா?’ அவள் முகத்தை கையில் ஏந்திக்கொண்டான்
‘நான் உன் மூடையும் ஸ்பாயில் பண்ணிட்டேன்.’
அதெல்லாம் ஒண்ணுமில்லைடா.’
‘இல்ல எனக்கு என்னமோ ஆச்சு போ.’ என்றாள் அவள். ‘உனக்கு நான் வேண்டாம்’
‘ஹேய்... லூசா நீ... இப்போதானே சத்தியம் பண்ணோம் எது வந்தாலும் பிரிய போறதில்லைன்னு அதுக்குள்ளே இப்படி உளற ஆரம்பிச்சிட்டியா. உனக்கு எதுவும் இல்லை. நான் பார்த்துக்கறேன் உன்னை ரிலாக்ஸ்டா’ என்றபடி அவளை தோளில் சாய்த்துக்கொண்டான் ஹரிஷ்.
கிட்டதட்ட ஒரு வாரம் கடந்திருந்தது. தினமும் ஹரிஷுக்கும், அனுவுக்கும் இரண்டு முறை நடக்கும் தொலைப்பேசி உரையாடல்களுடன் கடந்துக்கொண்டிருந்தன நாட்கள்.
‘இப்போ உடம்புக்கு ஒண்ணுமில்லைதானே. நல்லா இருக்கேதானே’ ஒவ்வொரு முறையும் கேட்டுக்கொண்டேதான் இருந்தான் ஹரிஷ்.
அன்று பெங்களூருக்கு வந்திருந்தான் ஹரிஷ். அங்கே ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் நடந்துக்கொண்டிருந்தது. பணம் புரளும் களம் என்றாலும் வளரும் கிரிக்கெட் வீரர்களுக்கு நல்ல வரமாகவே இருக்கிறது இந்த ஐ.பி.எல்.
அங்கே ரகு வீட்டில் அமர்ந்து டிவியில் இந்த ஏலத்தை பார்த்துக்கொண்டிருந்தான். அவனருகில் வராமல் தவிர்த்து இங்குமங்கும் நடமாடிக்கொண்டிருந்தாலும் அவனது மனநிலை நன்றாக புரியத்தான் செய்தது ஸ்வேதாவுக்கு. ஆனாலும் எதையுமே வெளிக்காட்டிக்கொள்ளவில்லை அவன். ஒரு பெரிய தொகைக்கு பெங்களூரு அணியில் ஹரிஷ் ஏலம் எடுக்கப்பட்டிருக்க
‘வாவ்... தட் இஸ் கிரேட்..’ இவன் கூவிய கூவலில் வீட்டில் இருந்த எல்லாருமே அவனருகில் ஓடி வந்தனர் ஸ்வேதாவை தவிர.
அவன் குரலில் ஒரு ஓரத்தில் ஏக்கம் தொனித்தது போலவே தெரிந்தது ஸ்வேதாவுக்கு. இருந்தாலும் மறுபடியும் சொல்லிக்கொண்டாள் அவள்,
‘வேண்டாம். இந்த பாழப்போன கிரிக்கெட் மட்டும் வேண்டாம்..’
அனுராதவுமே பார்த்துக்கொண்டிருந்தாள்தான் இந்த ஏலத்தை. ஹரிஷ் அதிவேகமாக பல உயரங்களை தொடுகிறான் என்பது அவளுக்கு நன்றாக புரிந்தது. ஒரு பக்கம் மனம் மகிழ்ச்சி கடலில் நீந்திய போதும் வார்த்தையில் வடித்து விட முடியாத ஏதோ ஒரு பயம் அவளது மனதின் மறைவான ஓரத்தில் இருந்துக்கொண்டே இருந்தது.
மூன்று நாட்கள் கடந்திருந்த நிலையில் அன்று காலையில் ஹரிஷிடமிருந்து அழைப்பு அனுராதாவுக்கு.
‘இந்த வீக்கெண்ட் மேடம் ஃப்ரீயா?
‘அதெல்லாம் கிடையாது. நான் ரொம்ப பிஸி’
‘எந்த பிஸியா இருந்தாலும் தூக்கி போட்டுட்டு நீ கிளம்பி கோவை வரப்போறே சொல்லிட்டேன்’ என்றான் அவன் உறுதியாக.
‘கோவைக்கா எதுக்கு ஹரிஷ்?’ அவள் கேட்க
‘வர்ற சனிக்கிழமை ஈவினிங் நம்ம வீட்டிலே ஒரு பார்ட்டி. வோர்ல்ட் கப் வின் பண்ணதுக்கு அப்பா அவர் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் கொடுக்கிறார், நீயும் வர’
‘நான் மட்டுமா? எப்படி ஹரிஷ்? அங்கே எல்லாம் பெரிய மனுஷங்களும் வருவாங்க...’ அவள் கொஞ்சமாய் தயங்க
‘பெரியப்பாவையும் கூட்டிட்டு வாடா. அதோட சேர்த்து நம்ம விஷயத்தையும் பேசி முடிச்சிடுவோம்’ உற்சாகம் பொங்கி வழிந்தது அவன் குரலில்
;உங்க அப்பா என்ன சொல்வாங்க? எனக்கு பயமா இருக்கு.’
‘அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். வர்றது மட்டும்தான் உன் வேலை. நானே உன் பெரியப்பாவுக்கும் பேசிக்கறேன் நீ விடு.’ தைரியமாய் சொன்னான் அவன். அவனெங்கே அறிந்தான் அவன் தந்தையும் அவள் பெரியப்பாவும் சந்தித்தால் அது சில பூகம்பங்களுக்கு வழி வகுக்கலாம் என.
‘ஏன் ஹரிஷ் இவ்வளவு அவசர படறே?’
‘பின்னே அவசர படாம விராட்டுக்கு அனுஷ்கா வந்தா மாதிரி என்னை ஏதாவது ஹீரோயின் வந்து கொத்திட்டு போயிட்டா என்ன செய்யறது. அந்த பயம்தான்’
அடடா... சார்க்கு அப்படி எல்லாம் வேறே நினைப்பு இருக்கா. வந்தா அவ பின்னாடியே போ. நான் ஒண்ணும் கவலை பட்டுக்க மாட்டேன்’ இவள் சொல்ல