தொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 09 - வத்ஸலா
இதமான குளிர் காற்று இருவரையும் தழுவிக்கொண்டிருக்க, கடல் அலைகள் சத்தமில்லாமல் விளையாடிக்கொண்டிருக்க பரவிகிடந்த இருளினூடே நெகிழ்ச்சியில் மின்னின அவன் கண்கள்.
‘தேங்க் யூ அனும்மா....’ சொன்னவனின் பிடி சற்றே இறுகியதுதான். அவள் கரம் அவன் கைக்குள் இருந்தது. விழிகளால் உரிமையுடன் பருகினான் அவள் முகத்தை. அவனது அருகமையில் லயித்திருந்தாள் அவளும். கடந்த சில நாட்களுக்குள் நடந்த எதையுமே நம்ப முடியாதவளாகத்தான் நின்றிருந்தாள் அவள்.
‘குட் மார்னிங் ஹரிஷ்...’ ஒவ்வொரு நாள் காலையிலும் கல்லூரிக்குள் நுழைந்தவுடன் அவன் முகம் தேடி ஓடி வந்து சொல்வாள்.
திமிர் பிடித்தவன் ‘ம்...’ என்பான் அவள் முகம் பாராமல். ஒரு சில நாட்கள் மனமுவந்து ‘குட் மார்னிங்’ என்பான். அதுவும் வேறு பக்கம் பார்த்துக்கொண்டு. அதுவே இவளுக்குள் பூ மழையை பொழிய வைக்கும்தான்.
‘அப்போதெல்லாம் முகம் திருப்பி போனவன் இப்போது.......’ அவள் யோசிக்க
‘மன்னிசுக்கோ அனும்மா ...’ அப்படியே அவள் மனம் படித்தவனாக சொன்னான் அவன். ‘அப்போவெல்லாம் தெரியலை எனக்கு.. அடி உதவுறா மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டங்கன்னு சொல்வாங்க தெரியுமா? அது கரெக்ட். அடிச்சானுங்க. எந்த தப்பும் செய்யாதப்போ போலீஸ்லே கட்டி வெச்சு மூணு நாள் அடிச்சானுங்க’
‘அய்யோ.. ஏன்? எப்போ? மூணு நாளா... அய்யோ... எப்போ ஹரிஷ். ரொம்ப வலிச்சதா?’ பதறி கேட்டவளின் விரல்கள் அவன் கன்னம் கைகள் என பரபரவென வருடியது. ஏதோ அந்த வலியை இப்போது அவள் அனுபவித்துக்கொண்டிருப்பதை போன்றதொரு ஒரு பாவம் அவளிடத்தில்.
‘அது ஆச்சு கொஞ்ச வருஷம். மானம் போச்சு, மரியாதை போச்சு, படிப்பு போச்சு ஆனா வாங்கின ஒவ்வொரு அடியிலேயும் உன் ஞாபகம் மட்டும் வந்தது. உன்னோட உண்மையான அன்பு புரிஞ்சது. அதுக்கு அப்புறம் உன்னை தேடி வரணும்னு நான் நிறைய தடவை நினைச்சு இருக்கேன். ஆனா வாழ்க்கையிலே ஒரு நிலைக்கு வராம கல்யாணம் அது இதுன்னு யோசிக்கவும் முடியலை. தீர்கமான சுவாசம் எழுந்தது அவனிடத்தில். ‘இப்போ ஜெயிச்சிட்டேன் வோர்ல்ட் கப்போட சேர்த்து உன்னையும்’ அவள் நெற்றி முட்டி புன்னகைத்தான் ஹரிஷ்.
‘என்னவாயிற்று? ஏன் போலீசில் மாட்டிக்கொண்டான் என அவள் கேட்டிருக்க வேண்டும்தானே? கேட்டிருந்தால் கதை வேறு திசை திரும்பி இருக்குமோ என்னவோ? கேட்கவில்லை அவள். ஏனோ கேட்க தோன்றவில்லை.
ஆஹான்... என்னை ஜெயிச்சிட்டியா? யார் சொன்னங்க அதெல்லாம் ஒண்ணுமில்லை’ பழிப்பு காட்டினாள் அவனுக்கு.
‘அஹான்,,, பத்து நிமிஷமா என் கைக்குள்ளே இருக்கியே பொண்ணே. இதுக்கு மேலே என்ன ஜெயிக்கணும்? அவன் கண் சிமிட்ட
‘ஹேய்.... விடு என்னை... நான் வீட்டுக்கு போகணும்...’ சட்டென அவள் அவனை விட்டு விலக முற்பட
‘வீட்டுக்கா? நாம இருக்கிறது அந்தமான்லே. உன் வீடு சென்னையிலே இருக்கு.’ சிரித்தவனின் இதழ்கள் அவள் கன்னம் நோக்கி வர மென்கரம் கொண்டு பொத்தினாள் அவன் இதழ்களை .
‘வாய்ப்பே இல்லை. அன்னைக்கு ஹாஸ்பிட்டல்லே நான் உன்னை பார்த்தா பாவமா இருக்குன்னு நான் இப்படி பண்ணப்போ என்ன சீன் போட்டே? உன்னை கல்யாணம் பண்ணாலும் சரி இந்த ஜென்மத்திலே இது மட்டும் நான் விடவே மாட்டேன்’
‘அப்படியா? அதையும் பார்ப்போமா?’ என்றபடி அவன் இன்னுமாக நெருங்க
‘பிஹேவ் யுவர்செல்ஃப். கொஞ்சமாவது வெட்கம் இருக்கா உனக்கு? எனக்கு உன் மேலே கொஞ்சம் கூட இன்ட்ரெஸ்ட் இல்லை.’ கஷ்டப்பட்டு குரலில் கோபத்தை கொண்டு வந்து சொல்லிவிட்டு அவனை விலக்கி தள்ளிவிட்டு அவள் அந்த இருட்டுக்குள் ஓட
‘ஹேய்... இருட்டா இருக்கு பார்த்து அனும்மா..’ அவள் அவன் பின்னாலேயே ஓட கடலலைகள் எதையோ உணர்ந்ததை போல் மௌனமாய் அசைந்துக்கொண்டிருக்க மூச்சிரைக்க ஓடியவளின் பின்னால் அவன் நெருங்கி வர
‘முடிஞ்சா என்னை பிடி முதல்லே..’ கலகலவென சிரித்தபடி அந்த கடற்கரையில் இன்னும் வேகமாக ஓடினாள் அவள். அவளவன் அவளுக்கென வந்து விட்ட நிறைவில், கண்மண் தெரியாத சந்தோஷத்தில் திக்குமுக்காடி போயிருந்தாள் அவள்.
‘இந்த பெண்ணிற்கு இருட்டில் ஏனிந்த விளையாட்டு? என்றுதான் தோன்றியது அவனுக்கு. ஏதோ ஒரு விபரீதம் நடக்கப்போகிறதோ?’ மனம் எதையோ உணர்த்த
சற்றே வேகமாக ஓடி இரண்டே பாய்ச்சலில் அவளை பிடித்திருந்தான் ஹரிஷ்.
‘உன் மாமன் கிரிக்கெட்டர்டி. என்கிட்டேயே விளையாட்டு காட்டறியா நீ?’ அவன் சொல்ல கலகல சிரிப்பும், வேகமாக எழும் மேல் மூச்சும், படபடப்புமாக அவன் கைகளுக்குள் வந்தாள் அவள். இப்போது மறுபடியும் அவன் இதழ்கள் அவள் அருகில் வர
‘மு..டி........யா.......து..’ என்று சிரித்தபடியே அவனை விலக்கி தள்ளி நிறுத்தினாள் அனுராதா.
இப்போது மூச்சின் அழுத்தம் இன்னமும் அதிகரிக்க கால்கள் வலுவிழப்பது போல் தோன்ற அவன் சட்டையை பிடித்துக்கொண்டாள் அவள்.