தொடர்கதை - வெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 02 - புவனேஸ்வரி
மித்ரனே,
திக்கித் திக்கி நீ பேசும் ஆங்கிலம்,
மற்றவருக்கு கேலியாக,
நான் உனை அரவணைக்கும் வேலியாக,
நம்மிடையே தோற்றது மொழி,
வென்றது நட்பு!
பிரபஞ்சன், கார்முகிலன், கதிரவனை மூவரைத் தவிர “சுயோதசேனா இல்லத்தில்” யாரும் கால் வைத்ததில்லை. வீட்டு வேலைக்கு பணியாட்கள், காவலர்கள் என யாரையுமே நியமிக்க கூடாது என்பதில் மூவருமே கவனமாகவும் கண்டிப்பாகவும் இருப்பார்கள். அப்படியே யாரையாவது சந்திக்கும் நிர்பந்தம் வந்தால், அவுட்ஹவுசில் சந்தித்து அப்படியே அனுப்பி விடுவார்கள்.
அவர்களை பொருத்தவரை அது மட்டுமே அவர்களுக்கான உலகம். அந்த உலகத்தில் யாருக்குமே இடம் இல்லை என்பதில் மூவருமே பிடிவாதமாக இருந்தனர். இவர்களின் பிணைப்பை அறிந்தவர்களோ, “நட்புன்னா இப்படித்தான் இருக்கனும்”; “ப்பா என்ன ஒரு நட்பு” என நல்ல விதமாகவும் சிலர், “அவனுங்க அந்த மாதிரி போல”; “ரொம்ப திமிர் பிடிச்ச பசங்க”; எனவும் தத்தம் எண்ணங்களைச் சொல்வார்கள். அந்த வார்த்தைகள் எந்த விதத்திலும் அவர்களை பாதித்ததாக தெரியவில்லை. அதற்கான காரணங்களையும் அநாவசியமாக யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை. முதன்முறையாக பெண்ணொருத்தி இந்த விதிகளை மீறி நுழைந்திருக்கிறாள். அதுவும் மூர்ச்சையாக நிலையில். இனி என்னென்ன நடக்குமோ? பார்ப்போம்!
கட்டிலில் இன்னும் மயக்கத்திலேயே இருந்தவளை மூவரும் கொஞ்சம் கவலையுடன் பார்த்தார்கள். எப்படியும் அவளுக்கு தங்களை விட வயது கம்மியாகத்தான் இருக்கும். “யாரிவள்?” என்ற கேள்வி மூவரின் மனதிலுமே முளைத்திருந்தது.
அவள் கன்னத்தில் லேசாக தட்டி எழுப்பிவிட முயற்சித்து கொண்டிருந்தான் கதிரவன்.
“முடியலடா.. மூச்சு இருக்கு.. ஆனா கண்ணு முழிக்க மாட்டுறா.. நெத்தியில ரத்தம் லேசா வந்து காய்ஞ்சே போச்சு. வேற எங்க அடி பட்டுருக்கு தெரியல.. இப்போ என்ன பண்ணலாம் மச்சி?” மற்ற இருவரையும் பார்த்து வினவினான் அவன்.
“இவ ட்ரேஸ்உம் நகையும் பார்த்தா ஏதோ ஃபங்க்ஷங்கு போகுற கெட்டப் மாதிரியே இருக்கு” என்று யோசனையாக கார்முகிலன் சொல்ல,
“அவ யாருனு அவளே சொல்லட்டும் முதல்ல ஹெல்ப் பண்ணனும்.. அவளுக்கு ட்ரேஸ் மாத்தனும் ஆனா நாம பண்ண முடியாது.. கதிர் நீ அவளுடைய நகையை எல்லாம் கழட்டி ஓரமா வை. கார்கி, ருத்ராவுக்கு ஃபோன் பண்ணி வர சொல்லு..நான் போயி நம்மகிட்ட இருக்குற ஹேர் ட்ரையர்ஸ் எடுத்துட்டு வரேன். ருத்ரா வர்ற வரைக்கும் ஹேர்ட்ரையர்ஸ் யூஸ் பண்ணி சமாளிப்போம்” என்று வேலைகளை ஏவிக்கொண்டே, அந்த அறையின் ஜன்னலை திறந்துவிட்டான் பிரபஞ்சன்.
ருத்ராவின் பெயரைக் கேட்டதுமே கதிரவனின் முகம் அதிருப்தியைக் காட்டியது.
“பிரபா, ருத்ராவை எதுக்கு கூப்பிடனும்.. மகரந்தனை கூப்பிடலாம்..” என்றான் அவசரமாக.
“டேய் லூசு, இவ பொண்ணுடா… ருத்ரா லேடி டாக்டர் சோ ஈசியா இருக்கும். மகரந்தன் டாக்டராகவே இருந்தாலும், இந்த பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணுறதுக்கு அவர் ஃபுல் காபெரேஷன் பண்ண மாட்டாரு. அது மட்டுமில்லை, யாருனு தெரியாத பொண்ணுனு சொன்னா உடனே போலிஸ்ட்ட சொல்லுங்க..அது இதுன்னு அட்வைஸ் மழை வரும்.. ருத்ரா நமக்கு தெரிஞ்ச பொண்ணு..” என்று நீண்ட விளக்கத்தை கொடுத்து பிரபாவின் மெச்சுதலான பார்வையை பெற்றுக் கொண்டான் கார்கி.
“பரவாயில்லை மச்சான், உனக்கு மேல்மாடி மொத்தமா காலி, அப்பப்போ அப்பளம், வடம் காயப்போடலாம்னு நினைச்சேன்.. பட் ப்ரேன் இருக்குனு ப்ரூப் பண்ணுறியே” என்று சிரித்த பிரபா இன்னமும் தெளியாமல் இருக்கும் கதிரவனின் முகத்தைப் பார்த்தான்.
“ஏன்டா அவ வந்தால் உனக்கு என்ன பிரச்சனை? ஏற்கனவே உன் பெர்த்டேக்கு வரேன்னு சொன்னவளை வரவே விடக்கூடாதுனு அடம்பிடிச்ச நீ.. நாங்களும் சரினு சமாளிச்சிட்டோம்.. இப்போ ஒரு ஆபத்துக்குத்தானே கூப்பிடுறோம்? இப்போ என்ன பிரச்சனை உனக்கு?” துளைக்கும் பார்வையாலே நண்பனை பிரபா பார்க்க கதிர் உடனேயே சுதாரித்தான்.
“எனக்கென்ன பிரச்சனை..நீ போயி ஹேர்ட்ரையர்ஸ் கொண்டு வா” என்றவன் அந்த பெண்ணின் பாதங்களை பற்றி அனல் பறக்க தேய்த்துவிட தொடங்கினான்.
“சரியான அழுத்தக்காரன்.. பார்க்கிறேன்டா இன்னும் எத்தனை நாள் நீ சாமியார் வேஷம் போடுறன்னு” என்று மனதிற்குள் கருவியவாறு அங்கிருந்து நகர்ந்தான் பிரபஞ்சன்.
நீ சூரியன் நான் வெண்ணிலா
உன் ஒளியால் தானே வாழ்கிறேன்..
நீ சூரியன் நான் தாமரை
நீ வந்தால் தானே மலர்கிறேன்..
நீ சூரியன் நான் வான்முகில்
நீ நடந்திடும் பாதை ஆகிறேன்..
நீ சூரியன் நான் ஆழ்கடல்
என் மடியில் உன்னை ஏந்தினேன்..
தவமின்றி கிடைத்த வரமே ..