கார்கியும் கதிரும் தன்னை அடக்க பெரும்பாடு படுவதை உணர்ந்து கொஞ்சம் நிதானம் ஆகினான் பிரபஞ்சன். அவன் துள்ளுவதை நிறுத்திய நொடி அந்த பெண் பேசத் தொடங்கினாள்.
“என்ன அவ்வளவுதானா உங்க பெர்ஃபார்மன்ஸ்? இன்னும் நிறைய எதிர்ப்பார்த்தேனே.. என்னடா என்னை கல்யாணத்துல இருந்து கடத்திட்டு வந்துட்டு நான் கண்முழிச்சதும் நடிக்கிறீங்களா? யாருடா நீங்க? எதுக்குடா என்னை கடத்துனீங்க?” என்றவள் தனது புடவையும் நகையும் ஒரு பக்கம் இருப்பதை பார்த்து
“என்னடா பண்ணீங்க? யாருடா நீங்க மூணுபேரும்?” என அவர்களை பேச விடாமல் கேள்விகளை அடுக்கினாள்.
“முதல்ல நீ யாருனு சொல்லு” என்று கார்முகிலன் பேச முயற்சிக்க,பிரபா குறுக்கிட்டான்.
“இவ யாரா இருந்தா நமக்கு என்னடா? இது பாரு நீ பீச்ல மயங்கி கிடந்த, ஒரு உயிரை காப்பத்தனுமேனு உன்னை கூட்டிட்டு வந்தோம். உன் நகை புடவை எல்லாம் அங்க இருக்கு. வேணும்னா உனக்கு ஹெல்ப் பண்ண லேடி டாக்டருக்கு ஃபோன் பண்ணி தரோம் பேசு..பேசிட்டு கிளம்பு” என்று ஃபோனை எடுக்க அவனை நம்பாத பார்வையொன்றை வீசினாள் அவள். அவன் பேச்சு அவளுக்கு கோபத்தை வரவழைக்க கத்த தொடங்கினாள் அந்த பெண்.
“டேய் மாஸ்க் போட்டிருந்தால் எனக்கு அடையாளம் தெரியாதா? கல்யாண மண்டபத்துல இருந்து இப்படி தூக்கிட்டு வந்துட்டீங்களேடா.. மனசாட்சியே இல்லையா உங்களுக்கு? என் அப்பா, அம்மா,தங்கச்சி எவ்வளவு அவமானப்பட்டு இருப்பாங்க? ச்ச! என் வாழ்க்கையையே நாசம் பண்ணிட்டீங்களே !”
“உயிரை காப்பாத்த நினைச்சீங்களா? இந்த நிலைமையில் என்னை தள்ளுனதுக்கு கொன்னுருக்கலாமே.. மிடல் க்ளாஸ் குடும்பமா இருந்தாலும் நல்ல சம்பந்தம் அமைஞ்ச சந்தோஷத்துல எங்கப்பா எவ்வளவு கடன் வாங்கி இந்த கல்யாணத்தை நடத்த ஏற்பாடு பண்ணாரு தெரியுமாடா? பீச்சுல மயங்கி கிடந்தேனாம்..கல்யாண மண்டபத்துல இருந்து நான் பறந்து வந்தேனா? சும்மா விடமாட்டேன்டா.. போலீஸ் விசாரிக்கட்டும் நீங்க யாருனு” என்றவள் அருகிலிருந்த கதிரின் கைப்பேசியை எடுக்க முயல கடைசி நொடியில் அதை லாவகமாய் எடுத்திருந்தான் கார்முகிலன்.
என்னத்தான் பெரியவர்கள் என சொல்லிகொள்ள அந்த வீட்டில் யாரும் இல்லாமல் போனாலும் பிரபா, கதிர், கார்கி மூவருக்குமே சமுதாயத்தில் நல்லபெயர் இருந்தது. இன்று யாரோ ஒரு பெண்ணால் அது களங்கமாகிவிட்டால்? ஒருவேளை இவள் உண்மையிலேயே கட்த்தப்பட்டவளாக இருந்தால்? அந்த பழி அவர்களின் மீது விழுந்தால்? உண்மையை நிரூபிப்பது அசாத்தியம் இல்லைத்தான். எனினும் இத்தனை அவஸ்தைகள் அவசியமற்றதாகத் தோன்றியது அவனுக்கு. கையில் இருந்த பூச்சாடியை மூவரின் பக்கமாக அவள் ஆவேசமாக எரிய ஒரு வழியாக அது தங்கள் மீது படாமல்பார்த்துக் கொண்டனர்.
மிகுந்த குழப்பத்திலும்,கோபத்திலும் பயத்திலும் இருந்தவளுக்கு அவர்களை தாக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியது. அதே எண்ணத்தில் கட்டிலில் இருந்து எழுந்தவள், காலை உந்த முடியாமல் வலியில் முகத்தில் சுருக்கிக் கொண்டு, “அம்மா” என்று அலறினாள். அவள் அலறியதில் மூவருமே பதறிட ஒருநொடி தான்தான் தவறாக அவர்களை சந்தேகிக்கிறோமோ என்று கேள்வி எழுந்ததுஅவளுக்குள். அதெல்லாம் ஒரு நொடிதான். மறுநொடியே வலியில் கத்த தொடங்கினாள்.
“என்னடா பண்ணீங்க? தப்பிச்சு ஓடகூடாதுனு என் காலை ஒடைச்சிட்டீங்களா?” அவள் ஆற்றாமையில் உளரமூவருக்குமே தலையில் அடித்துக் கொள்ள வேண்டும்போல இருந்தது.
“பிரபா, நீ இங்க நிக்க வேணாம்.. ருத்ராவுக்கு ஃபோன் பண்ணு போ.. கதிர் அந்த பொண்ணுக்கு தண்ணிகொண்டு வா” என இருவரிடமும் பேசிவிட்டு,அவளின் முன் அமர்ந்தான் கார்முகிலன்.
“இது பாரும்மா..என் பேரு கார்முகிலன். உனக்கு ஹெல்ப் பண்ணனும்னு நினைச்சுதான் உன்னை காப்பாத்தினோம். ஓர் உயிரோட மதிப்பு தெரியாத ஆளில்லை நாங்க. உன் பேரு என்ன? உன் அப்பா அம்மா எங்க இருக்காங்கனு சொல்லு? நாங்களே அவங்ககிட்ட நடந்ததை சொல்லி புரிய வைக்கிறோம்..” என்று அவன் தணிந்த குரலில் பேசிட ஏதோ ஒன்று அவளைக் கட்டிப் போட்டது. மனதில் இன்னமும் நம்பிக்கை துளிர்விடவில்லை. எனினும் என்ன செய்வது? அனைவரையும் நம்பி வாழ்வது ஆபத்து! யாரையுமே நம்பாமல் வாழ்வது பேராபத்து! பேராபத்தை விட ஆபத்தே மேல் என தோன்றியது அவளுக்கு. மனதில் பட்டதை நேரடியாகவே சொன்னாள் அவள்.
“நான் உங்கள நம்பல.. ஆனா எனக்கு வேற வழி இருக்கானு தெரியல” என்று சொல்லும்போதே அதுவரை உதிர்ந்திடாத கண்ணீர்த்துளி விழிகளில் வழிந்தது.
“ என் பேரு லீலா. இன்னைக்கு எனக்கு கல்யாணம்” என்றவள் கேவலை அடக்கமுயற்சித்தாள்.
“மத்தபடி எதையும் நான் சொல்ல மாட்டேன்.. உங்க மேல நம்பிக்கை வரமால் சொல்ல மாட்டேன்” என்றாள்.
“லீலா, ருத்ரா வந்திடுவா..நீ அவகிட்ட பேசினா உனக்கு கண்டிப்பா நம்பிக்கை வரும்”
“ஏன் அவளும் உங்க ப்ளானில் ஒருத்தியா?”
“ப்ச்ச்..நீ இவ்வளவு சந்தேகப்பட்டா உனக்கு எப்படி தீர்வு கிடைக்கும்?”
“அதான் என் வாழ்க்கையையே தீத்துட்டீங்களே”