தொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 09 - மீரா ராம்
“ஃபென்டாஸ்டிக்….”
விக்கி கூற, அங்கிருந்த அனைவரின் பாராட்டுதல் கைதட்டலாய் ஒலித்திட, சுரேஷ் வந்து கௌஷிக்கை அணைத்துக்கொண்டார் வேகமாய்…
“பிரமாதமா வந்திருக்கு கௌஷிக்… இன்னும் 6 மந்த்க்கு நம்ம ப்ரண்ட் தான் டாப்… சூப்பர் கௌஷிக்…”
அவருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை… பிரச்சினைகளின் மத்தியில் முடியுமா முடியாதா என்ற சூழ்நிலையில் இருந்திட்ட விளம்பரம், இன்று பார்த்த ஒரு நொடியிலயே மனதைப் பறித்திட வைக்க, அவரால் அந்த சந்தோஷத்திலிருந்து வெளிவர முடியவில்லை எளிதாய்….
தீபனுக்கோ அந்த விளம்பரம் கற்பனையானது என்று தோன்றிடவேயில்லை… கண் முன்னே நிகழ்ந்திட்ட காட்சியாய் அது அவனுக்கு தெரிந்திட, அவனது உதட்டில் புன்னகைப் பூக்கள் மலர்ந்திட்டது…
கௌஷிக்-சாரு இருவரின் முகமெங்கும் மலர்ந்து விகசித்திட, இருவருக்குமே திரையிலிருந்து கண்களைப் பிரித்தெடுக்க முடியவில்லை….
அந்த மோன நிலையிலிருந்து இருவருமே வெளிவர விரும்பாது இருந்திட, அங்கிருந்தவர்கள் அதற்கு விட்டால் தானே….
“சாரு அக்கா… உங்களுக்கு இனி நிறைய ஆஃபர் வரும் பாருங்க… என்ன அழகா நடிச்சிருக்கீங்க தெரியுமா?... செமக்கா…”
சாருவின் கைப்பிடித்து குலுக்கி விக்கி கூறிட, அவள் விழிகளோ, “அது நடிப்பல்ல…” என்றது இமைகளை அசைத்தபடி…
“கௌஷிக் சார்… நிஜமாவே உங்களை ஸ்க்ரீனில் பார்க்குறப்போ உங்களை பார்த்த மாதிரி இல்லை… பிசினெஸ் மேன்க்குள்ள இப்படி ஒரு ரொமான்டிக் ஹேண்ட்சம் ஹீரோ ஒளிஞ்சிருக்கார்னு இத்தனை நாள் யாருக்கும் தெரியாம போயிடுச்சே…”
விக்கி புன்னகையும் குதூகலமும் ஒரு சேர கூற, கௌஷிக்கின் விழிகளோ சாருவிட்த்தில் வந்து நின்றது…
“கொஞ்ச நாளா எனக்கே நான் புதுசா தான் தெரியுறேன்…” என அவன் மனமானது உள்ளிருந்து குரல் கொடுக்க, எங்கே அதனை அவள் தெரிந்து கொள்வாளோ என்ற உணர்வுடன் அவன் சட்டென விழிகளை அவளிடமிருந்து அகற்றிக்கொள்ள,
சாருவும் அந்த மோன நிலையிலிருந்து வெளிப்பட்டு வெளிவர, விக்கியும் தீபனும் சீரியஸாக பேசிக்கொண்டிருப்பது தெரிந்து அவர்களிடம் என்ன ஏது என்று வினவினாள்…
“சொன்னா தப்பா எடுத்துக்கமாட்டீங்களே…” என விக்கி சொல்லிக்கொண்டிருக்கும்போதே,
சுரேஷ் வந்து சாருவினை பாராட்டி புகழ்ந்துவிட்டு கௌஷிக்கினையும் அழைத்துக்கொண்டு சென்றிட, தீபனும், சாருவும் கூட அங்கிருந்து கிளம்பினர்…
இரண்டு நாளுக்குப் பிறகு,
கௌஷிக் தனதறையில் அமர்ந்து லேப்டாப்பில் மூழ்கிக்கொண்டிருந்த வேளை, கல்யாணியின் குரல் கேட்டிட, ஹாலுக்கு விரைந்தான்…
“அம்மா….”
அழைத்துக்கொண்டே வந்தவன், சுரேஷ் அங்கிருப்பதை பார்த்துவிட்டு “வாங்க சார்…” என வரவேற்றுவிட்டு அவரிடம் பேச ஆரம்பித்த வேளை,
“கௌஷிக்… என்ன இப்படி இருக்கீங்க?...” என கேட்டவரின் குரலில் ஒரு ஆர்வம் தென்பட்டது வெகுவாய்…
அதனை கவனித்தவன், “என்ன சார்… ரொம்ப எக்சைட்மென்டா இருக்குறீங்க?... எனி ஹேப்பி நியூஸ்?...” என புன்னகையுடனே கேட்டிட,
“அந்த ஹேப்பினெஸ்க்கு காரணமே நீ தான்னு அவர் சொல்லிட்டிருக்குறார்… நீ என்னடான்னா அது எதுவுமே தெரியாத மாதிரி கேட்குறீயே கண்ணா?...”
கல்யாணி டீயை கொண்டு வந்து இருவரிடமும் கொடுத்தவாறு மகனிடம் கேட்டிட, அவன் புரியாமல் தாயை பார்த்திட்டான் அவர் கொடுத்த டீயை வாங்கி பருகியவாறு…
“கௌஷிக்குக்கு இன்னும் புரியலை கல்யாணிம்மா… அதான் தம்பி இப்படி இருக்குறார்…”
“அப்படி தான் போல சார்….” கல்யாணியும் பேசிக்கொண்டு மகனருகில் அமர,
“என்னம்மா?... அப்படி என்ன விஷயம்?...” என குரல் மாறாமல் உதட்டிலிருந்த புன்சிரிப்புடன் அவன் கேட்டிட,
கல்யாணியும் சுரேஷும் ஒருசேர சிரித்தனர்…
தாயின் முகத்தில் இருந்த அந்த கொள்ளை கொண்டிடும் புன்னகையை பார்த்து ரசித்தவனாய்,
“அம்மா…. சொல்லுங்கம்மா…”
சிறுபிள்ளையாய் கேட்டு அவன் காத்திருக்க,
அவன் வினாவிற்கான விடையை அவனிடத்தில் தெரிவிக்க இருவருமே காத்திருந்த நேரத்தில், நான் இருந்திடுகையில் நீங்கள் இருவரும் என்ன சொல்வது என்ற தொனியில் விதியும் அங்கே ஒரு திட்டத்தை அரங்கேற்ற காத்திருந்தது…
ஆம்… அவன் கேட்ட விடையை அவனிடத்திலேயே சேர்ப்பிக்க காத்திருந்ததை அறிந்திடாது அவனும் அங்கே இன்முகமாக இருந்திட, விதியும் புன்னகைத்துக்கொண்டிருந்தது தன் விளையாட்டை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்வதை எண்ணி…