கீழே அப்பா அப்பொழுது தான் டைனிங் செக்ஷனில் இருந்து கையில் ஒரு கப் காபியுடன் வந்து கொண்டிருந்தார்.
“என்ன உத்ரா இன்னும் குளித்து தயார் ஆகவில்லையா? என அப்பா பால்கி கேட்க...
“அப்பா, அக்கா....... என கத்த துவங்கிய உத்ராவை.....
“கத்தாதே” என அடக்கினார் அம்மா....
அப்பாவின் அருகே சென்று விஷயத்தை கூற, அப்பாவிற்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
மண்டபம் முழுவது தேடியும் அக்காவை காணவில்லை. அவளது கை பேசியை அழைத்த பொழுது, அவர்கள் படுத்திருந்த அறையில் அது அலறியது. அதிகம் சினிமா பார்தத்தின் பலன், அதன் மூலம் அறிந்து கொள்வார்கள் என அதை எடுத்து செல்லவில்லை. அவளது துணிகள் இருந்த பெட்டியும் காணவில்லை. அதற்குள் இருந்த அவளது நகைகளும் தான்.
சொல்லாமல் சென்ற அக்காவிற்கு கிடைத்த திட்டை விட, அவள் சென்றது அறியாமல் தூங்கிய உத்ராவிற்கு தான் அதிகமான திட்டு கிடைத்தது. தேடியதில் அம்மாவின் பெட்டி மேல் இருந்த அவளது கடிதம் கூறியது, அவளுக்கு பிடித்தவனோடு சென்று திருமணம் செய்து கொள்ள இருப்பதகாவும், அவளை தேட வேண்டாம் என்றும் அதில் இருந்தது.
அத்துடன் அவளை தேடும் படலம் ஒரு முடிவுக்கு வந்தது, அடுத்து என்ன செய்வது என்ற கேள்வியுடன்.
அத்தை வசு தான் புலம்பினார். எங்க அபிமன்யு வாழ்க்கையை நானே கெடுத்து விட்டேனே என்று. பூமிஜா என்னிடமாவது சொல்லி இருக்கலாம், இப்போ எப்படி என் அக்கா முகத்தில் முழிப்பேன் என்று வயலின் இல்லாமலே சோக கீதம் வாசித்தார்.
அதற்குள் மாப்பிள்ளை வீட்டாருக்கும் விஷயம் தெரிந்து வசுவின் அக்கா கோமதியும், அவள் கணவர் விக்ரமனும் அங்கு வந்து சேர்ந்தனர். விக்ரமன் மிகவும் தெளிவானவர். அதிகம் பதட்டபடாமல்,
“போலீசில் ஒரு கம்ப்ளைன்ட் எதற்கும் கொடுத்து வைப்பது நல்லது. அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம். அடுத்து என்ன செய்வது என யோசிப்பது நல்லது. இன்னும் சிறிது நேரத்தில் விருந்தினர் அனைவரும் வர ஆரம்பித்து விடுவார்கள். இப்போ என்ன செய்யலாம்? என விக்ரமன் கேட்க...
“என்னை மன்னித்து விடுங்கள் விக்ரம்.” என பால்கி கேட்க
“இதில் மன்னிப்பு கேட்க எதுவும் இல்லை பால்கி, நாம் என்ன முன்ன பின்ன அறியாதவர்களா? என்ன பூமிஜாவிடம் அவளது விருப்பத்தை சரியாக கேட்டு அறிந்து இருக்கலாம். நாங்களாவது அவளிடம் கேட்டிருக்கலாம்.” என வருந்தினார் விக்ரம்.
இவ்வளவு கலோபரதிலும் அபிமன்யு அறையை விட்டு வெளியே வரவே இல்லை. அவனது பெரியப்பா மகள் த்ரிஷா தான் அவனது அறைக்கு சென்று தம்பியிடம் விபரத்தை கூறி வெளியில் நடக்கும் கூத்தை விளக்கிக் கொண்டு இருந்தார். அதன் பின்பும் அவன் வெளியே வந்து என்ன நடக்கிறது என அறிந்து கொள்ளும் ஆவல் சிறிதும் இல்லாமல் தனது மடி கணினியில் எதோ வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டான்.
“என்ன அபி, நான் இவ்வளவு சொல்றேன், நீ ஒன்றுமே நடக்காதது போல் இருக்க? என தனது ஆதங்கத்தை வெளிபடுத்தினாள் த்ரிஷா.
“இதில் நான் செய்ய என்ன இருக்கு அக்கா?, வீட்டிற்க்கு கிளம்ப பாக் வேணா செய்யலாம். அதற்கும் கொஞ்சம் நேரம் ஆகும் என்பதால் நான் என் வேலையை பார்கிறேன் அவ்வளவு தான்.” என்று இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் நடந்து கொண்டான்.
த்ரிஷா தான் வெளியே வந்து விபரத்தை தனது சித்தப்பாவான விக்ரமிடம் கூறினாள்.
விக்ரமிற்கு தான் சற்று குற்றவுனர்வாகி விட்டது. இவ்வளவு நல்ல பையனுக்கு, கல்யாணம் நின்று விட்டது என்ற கெட்ட பெயர் வந்து விடுமே என்ற கவலை வந்தது.
வருத்தத்தில் இருந்த பால்கியிடம் சென்ற விக்ரம், “நம்மிடம் இப்பொழுது இரண்டு வழிகள் தான் உள்ளது. ஒன்று கல்யாணம் நின்று விட்டது என்ற அறிவிப்போடு வருத்ததுடன் இங்கிருந்து கிளம்பிச் செல்வது. இரண்டாவது இங்கேயே வேறு பெண்ணை பார்த்து என் பையனுக்கு திருமணம் முடித்து மகிழ்ச்சியாக கிளம்பிச் செல்வது. நான் சந்தோஷமாக் கிளம்பவே விரும்புகிறேன். அதே போல் நீங்களும் கிளம்பவே விரும்புகிறேன். நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்கு புரிகிறதா பால்கி” என்று கேட்டார்.
மகள் சொல்லாமல் சென்றதில் மன உளைச்சலில் இருந்தவருக்கு, விக்ரமின் வார்த்தைகள் பாலைவன சோலையாக தெரிந்தது.
“உங்களுக்கு ரொம்ப பெரிய மனது விக்ரம். நீங்க உங்க உயர்ந்த உள்ளதை காண்பித்து விட்டிர்கள். இதற்கு உங்களுக்கு உடனே பதில் சொல்வதற்கு முன் என் இரண்டாவது பெண்ணை கேட்டு சொல்கிறேன். முன்பு செய்த தவறை இப்பொழுதும் நான் செய்ய விரும்பவில்லை” என கூறி விக்ரமை அனைத்துக் கொண்டார்.
கூட்டத்தின் நடுவே நின்று இதை கேட்டுக் கொண்டிருந்த உத்ராவிற்கு தான் வானில் பறப்பது போன்று இருந்தது. அக்காவுடனான திருமணம் நின்றதே பழம் நழுவி பாலில் விழுந்தது போல் இருந்தது. இப்பொழுது அபிமன்யுவுடன் தனக்கே திருமணம் என்பது அந்த பழமே நழுவி வாயிலேயே விழுந்தது போல் ஆயிற்று. ஆனால் நடுவில் ஒரு ஸ்பூனாக அபிமன்யுவின் சம்மதம் ஒன்று உள்ளதே. அதற்குள் ஊரில் உள்ள அணைத்து தெய்வங்களையும் வேண்டிக் கொண்டாள் உத்ரா, அவன் சம்மதம் சொல்ல வேண்டும் என்று.