தொடர்கதை - என் அருகில் நீ இருந்தும்!!! - 01 - பூஜா பாண்டியன்
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
தூக்கம் வராமல் விநாயகர் துதியை மனதிற்குள் பாடிக் கொண்டு இருந்தாள் உத்ரா பால்கி.
விடிந்தால் அக்கா பூமிஜாவிற்க்கும், சித்தார்த் அபிமன்யுவிற்கும் திருமணம். சந்தோஷமாக இருந்திருக்க வேண்டிய இரவு, ஆனால் உத்ராவிற்கோ உறங்கா இரவானது.
சிறு வயது முதலே உத்ராவின் ஹீரோ, அபிமன்யு தான். மாமா குமாரின் திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்த பொழுது, அத்தை வசுவின் கை பிடித்து வந்த சிறு வயது அபிமன்யுவை பார்த்து ஏனோ பிடித்து போனது உத்ராவிற்கு. அத்தையின் அக்கா மகன் தான் அபிமன்யு.
வளர, வளர அபிமன்யுவை பிடிக்க அத்தை வசுவும் ஒரு காரணம். எப்பொழுது அவர்கள் வீட்டிற்க்கு சென்றாலும், அவனை பற்றி பெருமையாக பேசிக் கொண்டே இருப்பார். எங்க அபிமன்யு கிளாசில் முதல் ரேங்க் வாங்கி இருக்கான், விளையாட்டில் பரிசு வாங்கி இருக்கான், கவிதை பிரமாதமாக எழுதுவான். அவன் இப்படி, அப்படி என்று பெரிதாக அவன் புகழ் பாடிக் கொண்டே இருப்பார்.
அபிமன்யு பி.டெக் அண்ணா பல்கலை கழகத்தில் முடித்து, எம்.எஸ் பிட்ஸ் பிலானியில், படித்து முடித்து, அமெரிக்காவில் வேலை கிடைத்து, சென்ற பொழுது, வீட்டில் இருந்த அனைவருக்கும் அவனை பிடித்தது. மூன்றே வருடத்தில் சொந்த வீடு, கார் என்று வாங்கியது, மட்டுமல்லாது வேளையில் பதவி உயர்வும் வாங்கினான்.
அதன் பலன் அப்பா பால கிருஷ்ணனுக்கும் அவனை பிடித்து தனது மருமகனாக்கி கொள்ளும் எண்ணமும் வந்தது. அம்மா சுனைனாவும் அதற்கு ஒத்து ஊதினார்.
வீட்டில் மூத்தவள், அக்கா பூமிஜா இருந்ததால் அவளுக்கு என்று, முடிவெடுத்து பக்கத்தில் இருந்த பூமிஜாவிடம் கேட்காமல், அமெரிக்காவில் இருந்த அபிமன்யுவிடம் சம்மதம் கேட்டு, அவனும் அங்கிருந்தே சரி என்று சொல்ல, அவர்கள் திருமணம் இனிதே முடிவாகி, இதோ விடிந்தால் திருமணம் என்னும் நிலைக்கு வந்து உள்ளது.
அபிமன்யுவும் நேற்று தான் அமெரிக்காவில் இருந்து வந்து இறங்கி இருந்தான்.
அப்பா பால கிருஷ்ணனும், அன்பானவர் தான், அவர் பேச்சை மற்றவர் கேட்கும் வரை. அம்மா சுனைனா, பதி பக்தி அதிகம் உள்ளவர் என்பதால், இருவரும் ஆதர்சன தம்பதிகள் தான்.
அக்கா பூமிஜாவும், அதிகம் பேசாதவள் என்பதால், அவளுக்கும் சேர்த்தே அப்பாவே முடிவெடுப்பார். திருமண விஷயத்திலும் அது தான் நடந்தது. அக்காவும் ஒன்றும் பெரிதாக மறுப்பு தெரிவிக்கவில்லை. அதனால் அவளுக்கும் அபிம்னயுவை பிடித்து தான் இருந்தது. அபிமன்யுவை யாருக்கு தான் பிடிக்காது.
அக்காவையே கேட்காத பொழுது, உத்ராவிடம் யார் கேட்க போகிறார்கள். கேட்டாலும், உத்ராவால் என்ன தான் சொல்லி இருக்க முடியும். எனக்கு அபிமன்யுவை பிடிக்கும் எனக்கே திருமணம் செய்து வையுங்கள் என்றா. அவன் அக்காவிற்கு சரி சொன்னதில் இருந்தே தெரிகிறதே, அவனுக்கும் அக்காவை தான் பிடிக்கும் என்று.
அப்பா பால்கி, (பாலகிருஷ்ணனின் சுருக்கம்) ஆடம்பர பிரியர். ஆனால் கொஞ்சம் சிக்கனமாகவும் இருக்க ஆசை படுபவர். வீடு வரை நிச்சயம் முடிந்து விட்டதால், முந்தைய நாள் ரிஷப்ஷன் வைக்காமல் காலையில் திருமணம், மாலை வரவேற்பு என்று ஒரு நாளுக்கு மட்டும் ஊரிலேயே பெரிய மண்டபமாக பதிவு செய்து இருந்தார்.
அதனால் அபிமன்யுவும் முந்தைய நாள் தான் அமெரிக்காவில் இருந்து வந்து இருந்தான். அவனுக்கும் அதிக நாள் விடுமுறை எடுக்க முடியாதலால், திருமணதிற்கு பின், திருமண பதிவு வேலை இருப்பதால் சரியாக முந்தைய தினமே வந்து இறங்கி இருந்தான். இன்னும் உத்ரா அவனை பார்க்க கூட இல்லை.
அக்கா பூமிஜாவும், காலையில் இருந்து சந்தோஷமாக தான் வளைய வந்து கொண்டு இருந்தாள்.
ஒரு வழியாக எல்லாவற்றையும் நினைத்து தூக்கம் துலைத்து, விடியற்காலை மூன்று மணியளவில் சோர்ந்து போய் கண் அசந்தாள் உத்ரா பால்கி. காலை ஐந்து மணிக்கு அம்மா வந்து எழுப்பும் வரை.
“உத்ரா, பூமிஜா எங்கே? என அம்மா கேட்க...
தூக்க கலக்கத்தில், அருகில் இருந்த தலையனையை அம்மாவிற்கு காண்பித்தாள் உத்ரா...
“பூமிஜா எங்கே? பியுடிஷியன் வருமுன் குளித்து ரெடியா இருக்க சொன்னேனா, இல்லையா”.
“அப்போ குளியல் அறையில் இருப்பா அம்மா. அங்க பாருங்க. நான் இன்னும் ஒரு ஐந்து நிமிடம் தூங்கறேன் ப்ளீஸ்.”
“அடி வாங்க போற உத்ரா, நானே டென்ஷனில் இருக்கேன். நீ என்னடானா, இன்னும் ஐந்து நிமிடம் தூங்கறேன்னு சொல்ற.”
“உனக்கு என்னம்மா இப்போ டென்ஷன்.” கண்ணை கசிகியவாறே எழுந்து அமர்ந்தாள் உத்ரா.
“பூமிஜாவை காணவில்லை. இப்போ தான் குளியல் அறையில் பார்த்தேன். அங்கேயும் இல்லை.” சுனைனா சற்று பதட்டமானார்.
காலை ஒன்பது மணி முகூர்த்தம் என்பதால் இரவே மண்டபத்தில் வந்து தங்கி இருந்தனர்.
அம்மாவின் பதற்றம் சிறிது உத்ராவையும் தொற்றிக் கொண்டது. அவளும் அம்மாவுடன் சேர்ந்து தேட ஆரம்பித்தாள்.