தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 38 - தேவி
ஆச்சியின் சொல் கேட்டு மலர் திகைத்து நின்று இருக்க, அவள் தந்தை வேலனோ
“அம்மா.. இப்போ என்னத்துக்கு இந்த பேச்சு? முதல்லே புள்ள உடம்ப கவனிப்போம்..”
“என்ன பேசுதலே.. ? நடந்தத கேட்டதும் அப்படியே என் அடிவயிறு கலங்கிச்சு.. புள்ள மறு உசுரு எடுத்து வந்துருக்கு... இன்னும் இப்படியே விட்டா.. ஒவ்வொரு வினையா இழுத்துட்டு வந்துட்டு இருப்பா உன் மவ.. அவள நல்லாபடியா கல்யாணம் பண்ணி கொடுத்தா நிம்மதியா இருக்கும் “
“ஆச்சி... ஏன் நான் கல்யாணம் பண்ணி போனா மாத்திரம் , இந்த மாதிரி எல்லாம் நடக்காதா என்ன? “
“வாயிலேயே போடுவேன்.. நான் உன்னை ஊருக்கே அனுப்ப மாட்டேன்னு உன்கிட்டயும் உங்கப்பன் கிட்டேயும் சொன்னேன்.. அடம் பிடிச்சு கிளம்பி போயிட்டு வம்ப வாங்கிட்டு வந்துருக்க? “
“இப்போ என்ன வந்துது..? லேசா அடிபட்டு இருக்கு அவ்வளவுதானே.. இது நடக்கனும்னு இருந்தா எப்படியும் நடக்கும்.. வீட்டுக்குள்ளே இருந்தா மட்டும் நடக்காம இருக்குமா ?”
“மேலே மேலே பேசிட்டு போகாத பேச்சி... நான் சொன்னது சொன்னதுதான்.. வள்ளி.. அவள உள்ளார கூட்டிகிட்டு போ.. “
“வா.. மலர்.. முதலில் சாப்பிட்டு உறங்கி எழு.. பொறவு எல்லாம் பேசலாம்..”
அம்மாவை முறைத்து விட்டு வேகமாக தன் அறைக்கு சென்று விட்டாள். அவள் இன்று இரவு வருவதால், அவளுக்கு பிடித்த டிபன் செய்து இருந்த வள்ளி, அவள் பின்னாடியே அதை எடுத்துக் கொண்டு அவள் அறைக்கு சென்றார்.
கோவத்தில் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்து இருந்தவளை பார்த்து,
“மலர்.. கோவப்படாதம்மா. உங்க ஆச்சிக்கு உன் மேலே உசுரு... உன் மேலே ஒரு கீறல் விழுந்தா கூட துடிப்பாக.. இப்படின்னா அவங்களுக்கு எப்படி இருக்கும் சொல்லு?”
“அதுக்கும் கல்யாணத்திற்கும் என்ன சம்பந்தம்..? “
“இல்லடா.. நீ படிக்கும் வரைக்கும் அவுக பேசாம தான் இருந்தாக.. இப்போ நீ படிச்சு முடிச்சதும் அவங்களுக்கு உன் கல்யாணம் தான் நினைப்பா இருக்கு.. அவங்கள நாங்க கொஞ்சம் பிடிச்சு வச்சா, நீ இப்படி வம்பு இழுத்து வந்துருக்க .. என்ன செய்ய?”
“சரி.. .இப்போ உடனே இத பேசணுமா? கொஞ்ச நாள் போகட்டும்.. அப்புறம் பார்த்துக்கலாம்.. ஆச்சி கிட்ட சொல்லி வையுங்க.. நான் பாக்கிற நேரம் எல்லாம் பேசிட்டு இருந்தா இங்கிருந்து கிளம்பி ஏதாவது ஹாஸ்டல்ல போய் இருந்துக்குவேன் பார்த்துக்கோங்க..” என மிரட்ட,
அவளை சமாதானபடுத்தும் விதமாக “சரி.. சரி.. விடுடா.. இப்போ சாப்பிட்டு தூங்கு.. மருந்து எதுவும் போட்டு இருக்கியா? இல்ல. வா டாக்டர் கிட்டே ஒரு எட்டு போய் வரலாம்..”
“அது எல்லாம் வேணாம்மா.. அங்கேயே.. ஆர்மி ஹாஸ்பிடலில் காமிச்சுத்தான் வந்தேன்.. வேணுங்கற மருந்து கொடுத்து இருக்காங்க.. “
“சரிடா.. இந்தா உனக்கு பிடிச்ச அடை, வெல்லம், அவியல் எல்லாம் வச்சு இருக்கேன்.. சாப்பிட்டு தூங்கு.. காலையில் பேசிக்கலாம்..”
மலருக்கும் லேசான காய்ச்சலோடு, பயணம் செய்த அசதியும் சேர, வழக்கமாக செழியனிடம் இருந்து வரும் குட் நைட் மெசேஜ்க்கு கூட காத்திருக்காமல் சாப்பிட்டு தூங்க ஆரம்பித்து விட்டாள்.
அங்கே வீட்டிற்கு சென்ற செழியனுக்கு நிலைமை அதற்கு மேல்.. அவன் வீட்டில் நடந்ததை முதலில் சொல்லவில்லை.
ஆனால் காம்பில் விசாரணைக்காக செழியன் தன்னுடைய விவரங்கள் எல்லாம் கொடுத்து இருக்க, அதை சரி பார்க்க இவர்கள் ஏரியா போலீஸ் ஸ்டேஷன்க்கு தகவல் வந்து இருந்தது. செழியன் ஊரிலிருந்து திரும்புவதற்குள் , இங்கே விசாரணை முடித்து ஆர்மி கேம்பிற்கு தகவல் சொல்லி இருந்தனர்.
செழியனின் அப்பா வந்து இருந்த போலீசிடம் என்ன விசாரணை என்ற விவரங்கள் கேட்க, அவருக்கு தெரிந்த விவரம் எல்லாம் சொல்ல, வீட்டில் அவன் அம்மா, அப்பா இருவரும் மிகுந்த டென்ஷன் ஆகி விட்டார்கள்..
செழியன் ப்ரின்சிபாலோடு மலரின் வீட்டிற்கு சென்று இருந்த நேரத்தில் அவன் அப்பா, செந்திலிடம் ஒரு விசாரணை கமிஷனே நடத்தி முடிக்க , செழியன் மீது கடும் கோபத்தில் இருந்தார்.
செந்தில் வேறு நண்பனின் வீர பிரதாபங்களை அப்படியே பிட்டு பிட்டு வைத்து இருந்தான். செழியன் அப்பா தன் மகனுக்கு பாராட்டு பத்திரம் வாசிப்பார் என செந்தில் நினைக்க, அவரோ அவனுக்கு தர்ம அடி கொடுக்கும் நிலையில் இருந்தார்.
செழியன் வீட்டிற்கு வரும்போது அவன் கை வலிக்க ஆரம்பித்து இருக்க, அதை காட்டாமல் மறைத்து இருந்தான்.
உள்ளே வரும்போதே அவன் அப்பா
“ஏன்தா பார்வதி .. ஆரத்தி கரைச்சு கொண்டாரலையா? உம்புள்ள வீர சாகசம் எல்லாம் செஞ்சுட்டு வந்து இருக்காப்புலே”
அவர் குரலை வைத்தே.. தன் மேல் கோபத்தில் இருக்கிறார் என்று புரிந்து கொண்டான். ஆனால் காரணம் தான் தெரியவில்லை. அவனுக்கு தெரிந்தவரை அந்த தீவிரவாதிகளை பிடித்துக் கொடுத்த விஷயம் எல்லாம் பெரிய விஷயம் இல்லை. இந்த வயதிலும் அவர் அங்கிருந்தால் அவரே செய்யக்கூடியவர். பின் எதற்கு இந்த கோபம் என்று புரியாமல்