“அர்ஷு. சும்மா சும்மா பழி சொல்லிட்டே இருக்காதே. எங்க போனார் என்ன ஆனார் ஏதாச்சும் தெரியுமா உனக்கு”
கணேஷ் ராம் முதன் முறை உரத்த குரலில் சத்தம் போட்டு பேசவும் வர்ஷினி மட்டுமல்ல எல்லோரும் திகைத்து தான் போயினர்.
அவள் கையை விடுவித்தவன் அவசரமாக வெளியேறினான். சில நொடிகளிலேயே திரும்பினான். உடன் ஓர் புதிய மனிதருடன்.
“யார் இவர்” என்று அனைவரும் நோக்க ராமசந்திரன் அடையலாம் கண்டு கொண்டார்.
அவர் உதடுகள் “சர்வா” என்று மெல்ல முணுமுணுக்கும் முன்னரே வர்ஷினி தன்னியறியாமல் “அப்.....அப்பா” என்று சற்று உரக்க சொன்னது அனைவரின் செவிகளிலும் தெளிவாக ஒலித்தது.
முகம் பார்த்ததில்லை. குரல் கேட்டதில்லை. ஆனாலும் அன்னையின் கருவறையில் இருந்த எட்டுத் திங்கள் காலம் உணர்வால் அறிந்திருந்தாள் அவரை.
அந்த உணர்வு அவளுக்கு உணர்த்தியது அவரை.
“கண்ணம்மா” அது உயிர் குரலாக அவளது செவிகளில் ஒலித்தது.
இத்தனை ஆண்டுகள் அவர் ஒருவரைத் தான் அடியோடு வெறுத்திருந்தாள். அவர் ஒருவரால் தான் நித்தம் கண்ணீர் உகுத்தாள். இன்றும் அவள் கண்களில் அருவியென நீர் வழிந்தது. ஆனால் வெறுப்பினால் அல்ல.
முடியவில்லை அவளால். ஒரு துளி கூட வெறுப்பை விழிகளில் தேக்க இயலவில்லை. கைகள் தாமாக அவரை நோக்கி நீண்டது.
கணேஷ் அவரை மெல்ல நடத்திச் செல்ல அவள் கைகளைப் பற்றிய நொடி அவர் உடைந்தார்.
அங்கே ஓர் உணர்ச்சிகரமான சூழல் நிலவ அனைவரின் கண்களிலும் லேசான நீர் படலம்.
இப்படியே போனால் நான் எப்போ உலகத்தைப் பார்ப்பது என்று அர்ஷு ராமின் செல்வ மகள் எண்ணினாள் போலும்.
“நான் வரப் போகிறேன்” என்று தன் பாணியில் அன்னைக்கு உணர்த்த வலியில் துடித்தாள் வர்ஷினி.
“மாமா நாம வெளியில் இருக்கலாம். அவளுக்கு வலி எடுத்து விட்டது” என்றவன் ராதிகாவை பரிசோதிக்குமாறு கூறினான்.
“ராம் ப்ளீஸ் நீங்க இங்கேயே இருங்க. ராதிகா அக்கா ப்ளீஸ் அவர் இருக்கட்டும்” என்று அவனது கைகளைப் பற்றிக் கொண்டாள்.
சர்வேஷ்வரை ராமசந்திரன் அழைத்துக் கொண்டு மற்றவரோடு வெளியேறினார்.
அடுத்த சில நிமிடங்களில் வர்ஷினியை சமாளிப்பதா கணேஷை சமாளிப்பதா இல்லை குழந்தையை வெளிக் கொணர்வதா என்று ராதிகா தவிக்க “ பாவம் டாக்டர் ஆன்டி, இந்த அம்மா அப்பா பண்ற அலம்பல் தாங்கல” என்று நினைத்தாள் போலும் கணேஷ் வர்ஷினியின் செல்ல மகள்.
அதிகாலை சூரியக்கதிர்கள் மண்ணை முத்தமிடும் வேளை தானும் உலகத்தில் பிரவேசம் செய்தாள்.
வர்ஷினி ஆசைப்பட்டது போலவே குழந்தையை கையில் ஏந்திய ராம் குழந்தையை வர்ஷினியிடம் காண்பித்து அவளது நெற்றியில் முத்தமிட்டான். மகளையும் கணவனையும் மாறி மாறி பார்த்தவள் நிறைவாய் புன்னகைத்தாள்.
முதல் நாள் ஹரிணியிடம் போன் பேசிக் கொண்டே கணேஷ் ராம் அந்த மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் பிரிவை அடைந்திருந்தான்.
“செர்ரி... அர்ஷு அம்மாக்கும் சேம் டயக்நோசிஸ். அப்போ அவங்களை காப்பாற்ற முடியாம போச்சு”
“இஸ் இட். இந்த லேடி நீ ஆபரேட் செய்தியே இவங்க பக்கத்துக்கு ஊரில் ஈஸ்வர் சார் நடத்தும் ஸ்கூல்ல டீச்சர். நாங்க அங்க கேம்ப் போன போது தான் இவங்க ப்ராப்ளம் தெரிஞ்சது”
“அர்ஷு அம்மாக்கும் சீக்கிரமா கண்டுபிடிச்சிருந்தா இந்நேரம் அவங்க உயிரோட இருந்திருப்பாங்க. அவ அப்பாவும் அவளை விட்டு போயிருக்க மாட்டார்”
“யு நோ வாட் ராம். ஈஸ்வர் சார் வைப் அண்ட் அவரோட குழந்தை கூட இதே டயக்நோசிஸ் தான். ஹி லாஸ்ட் தெம். இந்த லேடி பத்தி பேசிட்டு இருந்த போது தான் சொன்னார். இதுல என்ன ஆச்சரியம்னா அவர் வைப் நேம் கூட கௌரி. அர்ஷு மாம்ஸ் நேம் அது தானே”
ஹரிணி சொல்லிக் கொண்டிருக்க அதை முதலில் சாதரணமாக கேட்டுக் கொண்டிருந்தவன் மெல்ல நிமிர்ந்து பார்க்க அந்த குழந்தைகள் வார்ட் முன் “கெளரிக்கும் என் மகளுக்கும் சமர்ப்பணம்” என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.
அவன் அதை உரக்க படிக்க மறுமுனையில் கேட்டுக் கொண்டிருந்த ஹரிணி
“நியோநேடல் வார்ட் போயிட்டியா. அந்த யூனிட் எல்லாமே ஈஸ்வர் சார் தான் ஸ்பான்சர் செய்றார்” என்று கூறினாள்.