பத்து வருடங்களில் ஓர் சிறிய தொழிலதிபராகவும் வளர்ந்து விட்டிருந்தார்.
ஓர் நாள் எதிர்பாரா விதமாக படியில் உருண்டு விழுந்த ஈஸ்வருக்கு முழுவதுமாக நினைவு திரும்பியது.
சொல்லவொண்ணா துயரத்தில் மூழ்கினார்.
பத்து வருடங்கள் கடந்து விட்டிருந்தனவே. கௌரியும் அவரது செல்ல மகளும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லையே.
உடனேயே தமிழகம் நோக்கி விரைந்தார். கௌரியை சேர்ந்திருந்த மருத்துவமனை தற்போது மிகுந்த வளர்ச்சி பெற்று இருந்தது.
அங்கே ரிசப்ஷனில் பத்து வருடங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்ட நோயாளியின் விவரங்களை அவர் கேட்க ரிசப்ஷனில் இருந்தவர் அவரை மெடிகல் ரிகார்ட் செக்ஷனுக்கு அனுப்பி வைத்தார்.
அங்கே கௌரி இறந்து விட்டதற்கான குறிப்பு இருந்தது. குழந்தை பிறந்த குறிப்பும் இருந்தது. ஆனால் குழந்தை என்ன ஆனாள் என்று எந்த விவரமும் தெரியவில்லை.
அச்சமயம் டாக்டர் சிவகுமார் பற்றி கேட்டறிந்தவர் அவரை தேடிக் கொண்டு சென்னை சென்றார்.
அவர் வெளிநாடு சென்றிருப்பதாக தகவல் கிட்டியது.
ஒருவேளை ராமசந்திரனுக்கு விவரம் தெரிந்து குழந்தையை அவர் எடுத்துக் கொண்டு போயிருப்பாரோ என்று ஓர் சந்தேகம் சர்வேஸ்வர் மனதில் உதித்தது.
உடனேயே கௌரி இல்லம் சென்றார்.
“சாரும் அம்மாவும் ஒரு கல்யாணத்திற்கு போயிருக்காங்க. நீங்க சாரை ஆபீஸ்ல போய் பாருங்க” காவலாளி சர்வேஸ்வரை வாசலில் வைத்தே திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார்.
அங்கே பத்து வயது மதிக்கத்தக்க சிறுமி தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள்.
பாய் கட் முடியும், பேன்ட் டி ஷர்ட்டும் அணிந்திருந்த சிறுமி ராமச்சந்திரனின் சாயலில் இருந்தாள்.
வாசலில் யாரோ நிற்பதைப் பார்த்தவள், “ அண்ணா யாரோ வந்திருக்காங்க” என்று குரல் கொடுத்து விட்டு மீண்டும் விளையாடத் தொடங்கினாள்.
வருண் அப்போது தான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருந்தான்.
“உங்களுக்கு யார் வேணும்” சர்வேஸ்வரைப் பார்த்துக் கேட்டான்.
“அந்த பாப்பா” என்று சர்வேஸ்வர் பார்வையை சிறுமி மீதே பதித்திருக்க வருண் கவனமானான்.
“அம்மு நீ உள்ளே போ” என்று வர்ஷினியை பணித்தவன் சர்வேஸ்வரை அங்கிருந்து செல்லுமாறு மிரட்டினான்.
“அந்த பாப்பா” தயக்கமாய் சர்வேஸ்வர் கேட்க “என் தங்கை தான் ஏன்” என்று வருண் அதட்டலாய் கூறவும் சர்வேஸ்வர் மேலும் மனமுடைந்து போனார்.
மீண்டும் அவர் தன்னிருப்பிடம் சென்றார்.
கௌரியின் பெயரிலும் மகளின் பெயரிலும் தர்ம காரியங்களை செய்து கொண்டிருந்தார். ஒரு வேளை மகள் பிழைத்திருந்தால் இந்த புண்ணியம் அவளை நல்ல முறையில் வாழ வைக்கும் என்று நம்பிக்கை கொண்டார்.
பல தருணங்களில் மகள் பிழைத்திருக்கவில்லையோ என்று வேதனை கொண்டிருக்கிறார்.
தான் ஏன் இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று தெரியாமல் தவித்து வந்தவரின் கரங்களை ஆறுதலாய் பற்றிக் கொண்டான் கணேஷ் ராம்.
“மாமா” கணேஷ் அழைக்க ஆச்சரியமாய் பார்த்தார் சர்வேஸ்வர்.
“உங்க மகள் உயிரோடு நலமாய் சந்தோஷமாய் இருக்கிறாள்” கணேஷ் சொல்ல சர்வேஸ்வர் கண்களில் அருவி வழிந்தோடியது.
“நான் உங்கள் மகளின் கணவன்” என்று தன்னை மேலும் அறிமுகம் செய்து கொண்டு சுருக்கமாய் விவரங்களை தெரிவித்தான்.
அந்நேரம் கணேஷ் ராமின் மொபைல் சிணுங்க சுமித்ரா வர்ஷினிக்கு வலி எடுத்து விட்டது என்று கூறி உடனடியாக புறப்படும் படி கூறினார்.
காலையில் ப்ளைட் போனா நேரம் ஆகிடும். எப்படி செல்வது என்று தெரியாமல் தவித்தான் கணேஷ்.
ஹரிணிக்கும் ஹர்ஷாவிற்கும் அவன் தகவல் தெரிவித்தான்.
“கணேஷ் ஆர்.சி மங்களூரில் தான் இருக்கான். அவன்கிட்ட சொல்றேன். ஹி வில் ஹெல்ப் யு” என்றவன் உடனேயே ஆர்.சி க்கு தகவல் சொன்னான்.
காரில் கணேஷ் சர்வேஸ்வரோடு மங்களூர் செல்ல அங்கு சார்டட் விமானம் தயாராக இருந்தது.
விடியும் முன்னரே மருத்துவமனை வந்து சேர்ந்தனர் இருவரும்.
குழந்தைக்கு ஆலம் கரைத்து வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
சிறப்பாக பெயர் சூட்டும் விழா நடைபெற ஈஷா கௌரி என்று சர்வேஸ்வர் கௌரி இருவரின் பெயரையும் சேர்த்து வைத்தாள் வர்ஷினி.