ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருந்தது.. மதர் இப்போது ஊரில் இல்லை.. அவர் இருக்கும் அந்த அமைப்பின் முக்கிய சந்திப்புக்காக வெளிநாடு சென்றிருந்தார்.. அவர் திரும்பி வர ஒரு மாத காலம் ஆகும் என்று சர்ச்சில் தகவல் கூறினர். கங்காவும் அவள் பிரச்சனையை பற்றி கூறியதற்கு, இதுபோல் பெரிய உதவிக்கெல்லாம் மதர் தான் வர வேண்டும் என்று கூறிவிட்டனர்.மதர் வந்தால் எப்படியும் பணத்திற்கு ஏற்பாடு செய்துவிடுவார்கள், ஆனால் அதுவரை அறுவை சிகிச்சை செய்யாமல் இருந்தால், யமுனாவிற்கு ஏதாவது ஆபத்து நேர்ந்துவிடுமோ! என்று கங்கா பயந்தாள்.
அதுப்பற்றி மருத்துவரிடம் கேட்ட போது, இரண்டு மாதம் வரை என்றாலும் பரவாயில்லை. ஆனால் அதற்கு மேல் தாமதிப்பது ஆபத்தாகிவிடும் என்று எச்சரித்தார். அதுவரை யமுனா பள்ளிக்கும் செல்லலாம், ஆனால் மிகவும் அவள் தன்னை சிரமப்படுத்திக் கொள்ள கூடாது.. தவறாமல் மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும்.. உடன் படிக்கும் மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் அவள் உடல்நிலையை குறித்து சொல்லிவிடும்படி அறிவுறுத்தினார். தன்னை எதுவும் தொல்லை செய்யாமல் கங்காவே எல்லாம் பார்த்துக் கொண்டால் சரி என்பது போல் கனகாவும் மெத்தனமாக இருந்தார்.
இப்போது நடப்பது பிப்ரவரி மாதம், மார்ச் மாதம் பாதிக்குள் மதர் வந்துவிடுவார்கள்.. அதற்குள் யமுனாவும் பனிரெண்டாம் பொது தேர்வும் எழுதிவிடுவாள். அவள் இயல்பிலேயே நன்றாக படிப்பதால், சிரமப்படவும் தேவையிருக்காது.. மதர் வந்து பணத்துக்கு ஏற்பாடு செய்துக் கொடுத்தால், யமுனாவிற்கு நன்றாக அறுவை சிகிச்சையும் முடிந்துவிடும்.. அதன்பின் தான் இவளது பரிட்சைகள் ஆரம்பிக்கும், அதையும் நன்றாக எழுதி டிகிரி வாங்கி வேலைக்கு சென்றுவிட்டால், யமுனா கொஞ்சம் தேறியதும் அவளையும் கல்லூரியில் சேர்த்து விட்டால் போதும், இருப்பதை வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டிவிடலாம் என்று கங்கா கற்பனைக் கோட்டை கட்ட, இந்த ஒரு மாதத்திற்குள் அவள் வாழ்க்கையே திசை மாறிப் போகப் போகிறது என்பதை அவள் அறியாள்.
DR எஸ்டேட் பங்களா பரபரப்போடு காணப்பட்டது, அடிக்கடி அந்த எஸ்டேட்டிற்கு வருகை தருவது அண்ணாமலை தான், அவருக்கு எதுவும் சிறிய குறை கூட தெரியக் கூடாது, அதனால் அனைவரும் கவனமாக வேலை செய்தனர். இதில் வாணி தான் அண்ணாமலையோடு வரும் துஷ்யந்திற்காக காத்திருந்தார்.
துஷ்யந்தின் தாத்தா காலத்திலேயே இந்த எஸ்டேட்டை வாங்கிவிட்டனர். இதில் இரண்டு பிள்ளைகளும் பிறந்து அவர்கள் பெயரில் வியாபாரம் ஆரம்பித்த போது தான், இதற்கு DR எஸ்டேட் என்று துஷ்யந்தின் தந்தை பெயர் சூட்டினர். இந்த எஸ்டேட் வாங்கிய காலத்திலிருந்தே வாணியின் கணவனுடைய குடும்பம் தான் இந்த எஸ்டேட்டை கவனித்து வருகிறார்கள். வாணியின் கண்வன் தான் முன்பு இந்த எஸ்டேட்டின் மேனேஜர், பெரிய படிப்பு இல்லையென்றாலும் நிர்வாக திறமை இருந்தது. அதனால் அவர் தான் இந்த எஸ்டேட்டை பார்த்துக் கொண்டார். அதேபோல் எஸ்டேட் பங்களாவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு வாணியின் மாமனார் மாமியாருடையது.
வாணியின் கல்யாணத்தை முன் நின்று நடத்தியதே கோமதியும் அவர் கணவரும் தான், செல்வாவிற்கு மூன்று வயது இருக்கும் போதுதான் குடும்பத்தோடு அனைவரும் குன்னூர்க்கு வந்திருந்தனர். அதிலிருந்து வருடாவருடம் விடுமுறைக்கு இங்கு வர ஆரம்பித்தனர். மழலை பேச்சோடு துறுதுறுவென இருக்கும் செல்வா அனைவரையும் கவர்ந்தாலும், அமைதியாக ஒதுங்கியிருக்கும் துஷ்யந்த் தான் வாணியை ஈர்த்தான்.துஷ்யந்திற்கு என்ன வேண்டுமென்று கேட்டு வாணி தான் அவனை அங்கிருக்கும் வரை பார்த்துக் கொள்வார். துஷ்யந்தும் ஆரம்பத்தில் வாணியிடம் ஒதுக்கம் காட்டினாலும், பின் அடுத்தடுத்து வரும்போது, தன் குடும்பத்தாரிடம் எப்படி பேசுவானோ அதே போல் வாணியிடமும் நடந்துக் கொள்வான்.
வாணியின் கணவர் ஒரு விஷக் காய்ச்சலால் திருமணமாகி சில வருடங்களிலேயே இறந்து போக, அடுத்தடுத்து மகனின் பிரிவால் வாணியின் மாமனார் மாமியாரும் இறந்து போயினர். வாணிக்கு உறவு ஒரு தங்கையும் ஒன்றுவிட்ட தம்பியும் தான், கணவனை இழந்த வாணியை துஷ்யந்த் குடும்பம் கைவிடவில்லை. எஸ்டேட் பங்களாவை பாதுகாக்கும் பொறுப்பை வாணியிடமே ஒப்படைத்திருந்தனர்.
படிப்பின் காரணமாக துஷ்யந்தின் குடும்பம் குன்னூருக்கு வருவது குறைந்து ஒருக்கட்டத்தில் நின்றும் போனது.. எஸ்டேட் பொறுப்பையும் அண்ணாமலை தன் கையில் எடுத்துக் கொண்டார். அதன்பொருட்டு அடிக்கடி அவர் குன்னூர் வருவார். ஆனால் அது ஒரு காரணம் தான், அவர் குன்னூருக்கு வருவதே அங்கே வைத்து சில கட்ட பஞ்சாயத்தை முடிப்பது தான், அதற்காகவே தன் மாமாவிடம் அண்ணாமலை இந்த எஸ்டேட் பொறுப்பை கேட்டு வாங்கியிருந்தார். அண்ணாமலை ஒரு குறிப்பிட்ட ஜாதி கட்சியில் தான் சேர்ந்திருந்தார். அவருக்கு ஜாதிப்பற்று அதிகம், கட்சியில் இருந்து அவர் முழுதாக விலகியிருக்கவில்லை. தங்கள் ஜாதிக் குறித்து வரும் பிரச்சனையை இங்கு வந்துதான் முடித்து வைப்பார். வீட்டை பொறுத்த வரை அவர் கட்சியை விட்டு விலகிவிட்டதாக தான் அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் அது உண்மையில்லை.
அண்ணாமலை அடிக்கடி இங்கு வந்து போகும்போது அவருக்கு ஒத்து ஊதி அங்கே வேலை செய்த மேனேஜர் அண்ணாமலைக்கு பிடித்தமானவனாக மாறிவிட்டான். குன்னூருக்கு வந்தால், சில கட்டப்பஞ்சாயத்து செய்வது, மேனேஜரோடு சேர்ந்து மது அருந்துவது என்று அவரின் பொழுது போகும்.. அங்கே உள்ள தொழிலாளர்களிடமும் தயவு தாட்சன்யம் காட்ட மாட்டார். துஷ்யந்து அப்பா இருந்தவரையாவது அண்ணாமலைக்கு கணக்கு வழக்கு பார்க்க தெரியாது என்று எப்போதாவது இங்கு வருவார். அவர் இறந்ததும் குன்னூர் எஸ்டேட்டில் அண்ணாமலை ராஜ்ஜியம் நடந்தது. அவர் இல்லாத சமயத்தில் அந்த மேனேஜர் அவன் அதிகாரத்தை காட்டுவான். ஆனால் வாணி துஷ்யந்து பெற்றோருக்கு மிகவும் வேண்டியவள் என்பதால், அவரிடம் யாரும் அதிகமாக வைத்துக் கொள்ள மாட்டார்கள்.. அண்ணாமலை உட்பட, அதேபோல் வாணியும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார்.
வெளி ஆட்களுக்கு தான் அண்ணாமலை மோசமானவர், ஆனால் தன் குடும்பத்தின் மீது அவர் அதிகமாகவே பாசம் வைத்திருக்கிறார். சொத்தையெல்லாம் இழந்து நடுத்தெருவுக்கு வர இருந்தவரை துஷ்யந்தின் அப்பா கூட்டி வந்து சில பொறுப்புகளையும் அவரிடம் ஒப்படைத்ததால் அண்ணாமலைக்கு எப்போதும் அக்கா குடும்பத்தின் மீது அக்கறையும் பாசமும் உண்டு. அந்த பாசத்தில் தான் துஷ்யந்தை குணப்படுத்தி விட வேண்டிய அவசியத்திற்காக அவனை இங்கு கூட்டிக் கொண்டு வர முடிவெடுத்தார்.
வாணியும் சிறு வயதில் பார்த்த துஷ்யந்தை காண ஆவலோடு காத்திருந்தார். தன்னை துஷ்யந்த் தம்பி மறக்காமல் இருக்குமா? என்று நினைத்தப்படி அவர் இருக்க, அவனோ அவனையே அறியாத நிலையில் தான் இங்கு வரப் போகிறான் என்பது அப்போது வாணிக்கு தெரியாது.
தோழமைகளே இந்த முறை சிறியதாக தான் அத்தியாயம் கொடுக்க முடிந்தது.. அடுத்த அத்தியாயம் பெரிதாக கொடுக்க முயற்சிக்கிறேன். நன்றி.
தடைப் படாத என் சுவாசத்திற்காக...
என் ஜீவன் காத்திருக்கிறது...!!
{kunena_discuss:1078}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.