தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 43 - தேவி
சிவஞானம் சொல்லி முடிக்கவும் கேட்டுக் கொண்டு இருந்த மற்றவர் மனதில் நமசிவாயம் ஐயாவை பற்றின எண்ணங்களே ஓடிக் கொண்டு இருந்தன. இன்றைக்கு சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் இந்த மாதிரி சிந்தனை என்பது அபூர்வமே. அவர் தன்னை ஒரு கொள்கை வீரனாகவோ, இந்த ஊர் தன்னை மதிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லாமல் இயல்பாக அந்த எண்ணம் அவருக்கு இருந்தது நிச்சயம் பாராட்டப் பட வேண்டிய விஷயமே..
இப்போது செழியன் அம்மா பார்வதிக்கும் , இவர்களின் உறவினர் வடிவேலுவிற்கும் என்ன சொல்ல என்று தெரியவில்லை.. செழியன் அப்பா வரையில் அவரின் எண்ணம் சரியே.. அதை செழியன் நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசையும் தவறில்லை.
இப்போது இவர்கள் என்ன செய்ய என்பதை போல் செழியனை பார்க்க,
செழியன் இப்போது கொஞ்சம் தெம்பாக இருந்தான். இத்தனை நாள் அவர் எண்ணம் பற்றி யோசிக்கும் போது, என்ன விதமான பதில் சொல்வது, எப்படி அவரை சமாதனம் செய்வது என்று கொஞ்சம் கலக்கமாகவே இருக்கும்.
இப்போது அவர் கூறிய விஷயத்தில், அவனுக்கு சாதகமான விஷயங்கள் சில இருந்தது. அதை வைத்து அவரிடம் பேச வேண்டியதுதான் என்று முடிவு செய்து கொண்டான்.
“அப்பா .. அந்த ஐயாவை பத்தி நீங்க சொல்ல கேக்கும்போது ரொம்ப ஆச்சரியமா இருக்கு. அதே சமயம் பெருமையாவும் இருக்கு. “ என்று ஆரம்பித்து, தன் விஷயத்திற்கு வர முயன்றான்
அதற்குள் இடையில் “அதானலே தான் அந்த குடும்பத்து பொண்ண நீ கட்டிகிடனும்ன்னு ஆசை படுதேன்.. “ என்று அவர் பிடியை வலியுறுத்தினார்.
“அப்பா... நீங்க சொல்லுறது சரிதான்.. ஆனா எனக்கு ஒன்னு சொல்லுங்க.. நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டது இந்த ரெண்டு குடும்பத்து ஆளுங்களுக்கும் தெரியுமா? அவங்க ஒப்புதலோடு நீங்க வாக்கு கொடுத்தீங்களா? இன்னும் சொல்லப் போனா நீங்களும் பெரியவரும் உங்க மனசுலே உள்ள ஆசைய சொல்லிக்கிட்டீங்க அவ்ளோதான்.”
“என்னை பொறுத்தவரை அது வாக்குக்கு சமானம் தான்.. அதோடு மூணாம் மனுஷனான நானே அவர் சொல்லுக்கு கட்டுபடனும்னு நினைக்கும்போது, அவர் வீட்டில் உள்ளவங்க அவர் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்க மாட்டாங்களா?”
“அவர் வீட்டில் சொல்லிருக்காரா அப்படின்னு உங்களுக்கு தெரியுமா?”
“அத தானே வடிவேலு மச்சான் கிட்டே பேச சொல்லிருக்கேன்..”
இப்போது வடிவேலு இடையில் புகுந்து
‘இல்லை மச்சான்.. நான் பேசினது நம்ம செழியன் தம்பிக்கு அவங்க பொண்ண கட்டிக் கொடுப்பீங்களான்னு கேட்டேன்.. உம்ம பத்தியும், செழியன் பத்தியும் விசாரிச்சாங்க. நான் சொன்னது அவங்களுக்கு திருப்தியா பட்டு சரின்னு சொன்னாக.. அதோட அவுங்கள எப்படி தெரியும்ன்னு கேட்டதுக்கு, நமசிவாயம் ஐயாவ தெரியும்ன்னு பேச்சுவாக்கில் நீங்க சொல்லவும், அப்போ ரெண்டு குடும்பமும் சம்பந்தம் பேசலாமேன்னு கேட்டேன்.. நீங்க என்மூலமா அவங்கள அணுக சொன்னதா சொன்னேன்.. பொறவுதான் சரினாங்க..”
“அவர் சொன்னது உங்களுக்கு விளங்குதாபா ..? அவங்க உங்க வாக்குக்காக இந்த சம்பந்தம் பேச நினைக்கல.. சாதாரணமா அவங்க பொண்ணுக்கு வரன் பாக்குற மாதிரி தான் நினைச்சிருக்காங்க.. இதுலேர்ந்து அந்த ஐயா நம்மள பத்தி அவங்க வீட்டாருக்கு எதுவும் சொல்லலன்னு தோணுது.. “
“அவர் அப்படிப்பட்டவர் இல்லை செழியா .. அவர் குணத்துக்கு இப்படி நடக்க வாய்ப்பே இல்லை.”
“சரிப்பா .. எனக்கு ஒன்னு சொல்லுங்க.. நீங்க ரெண்டு பேரும் அந்த ஆத்திலே விழுந்த சம்பவத்துக்கு பொறவு சந்திச்சு இருக்கீங்களா?”
“இல்லை..யா.. அந்த சம்பவம் நடந்த ரெண்டு மாசத்திலே எனக்கு இந்த பலசரக்கு கடை நடத்த வாய்ப்பு வந்துச்சு.. அப்போ தான் உங்க அம்மாக்கு நீ வயத்திலே ஜனிச்ச நேரம்.. எதேச்சையா ஐயா ஒருநா ஊருக்கு வந்தப்போ , நல்ல விஷயத்த சொல்லிட்டு, இந்த கடை விலைக்கு வரத பத்தி சொன்னேன்.. அவரு உடனே.. “சிவம்.. நல்ல வாய்ப்புயா.. பிற்காலத்திலே நல்ல முன்னேற்றம் கொடுக்குற தொழில்.. உன் வம்சம் விருத்தியாகும் நேரம்.. நீயும் தழைச்சு வா.. “ அப்படின்னு ஆசீர்வாதம் செய்தார்.. அவர் சொன்னது எனக்கு பெரும் நம்பிக்கை கொடுத்துச்சு, நான் திருச்சி வந்து கடைய ஆரம்பிச்சுட்டேன்.. நீ பொறக்கும் வரை உங்க அம்மா , உன் ஆச்சி வீட்டிலே இருந்துட்டு, பொறவு என்னோட இங்கன வந்துட்டா.. அதுக்கு பொறவு நான் அவர பார்க்கவேயில்லை..”
“அவர் பத்தி இங்க யாருக்கும் தெரியாதா?”
“அவர் இந்த ஊர்க்காரர் தான் இருந்தாலும் அவர் ரொம்ப முன்னே பொழப்புக்காக தென்காசி, குற்றாலம் , திருநெல்வேலின்னு போய்ட்டாங்க.. இந்த ஊருக்கு வருஷம் ஒருவாட்டி தான் அவங்க குடும்பம் வருவாங்க.. அவர் மட்டும் ரெண்டு, மூணு மாசத்துக்கு ஒருதரம் வந்து போவாரு”
“அவங்க குடும்பத்த நீங்க பார்த்தது இல்லையா?”