“நான் படிச்சு முடிக்கும் வரைக்கும், அவங்க குடும்பம் வரும் நேரம், நான் விடுதிலே இருப்பேன்.. பொறவு நான் இங்க இருக்கும் போது, அவர் குடும்பம் வந்தது இல்லை.. அத பத்தி விசாரிச்சதுக்கு தான் அவர் பசங்க படிப்புக்காக , அவர் வீட்டம்மா அவங்க கூட இருக்காங்கன்னு சொன்னாரு.. பொறவு தான் பிள்ளைங்களுக்கு குழந்தை இல்லைன்னு ஊர்லே உள்ளவுக பேசுவாங்கன்னு வாரதில்லைன்னு சொல்லுவாரு. “
“அவர் இப்போ இருக்காரா ?”
“இல்லை.. அவர் இறந்து பதினைஞ்சு வருஷம் இருக்கும்.. “
“அப்போ நீங்க அவர் வீட்டுக்கு போகலையா?”
“இல்ல... எனக்கு தகவலே தெரியாது.. நாம அப்போதான் வீடு மாறிகிட்டு இருந்த சமயம், நான் வீடு மாறின விலாசம் கொடுக்கும் முன் இந்த விஷயம் நடந்து போச்சு.. இங்க உள்ள நம்ம உறவுக்காரங்க எனக்கு தகவல் கொடுக்க முடியாம விட்டுட்டாங்க.. அந்த ஒரு வருஷம் அவங்க வீட்டில் இருந்து யாரும் கோயிலுக்கு வராததால் எனக்கு யாரையும் பாக்க முடியல.. “
“அப்பா.. நீங்களே சொல்லுங்க.. நம்ம கூட தொடர்பே இல்லாத ஒருத்தங்களுக்காக என் மனசுக்கு பிடிச்ச பொண்ண விட்டுட்டு இன்னொரு பொண்ண நான் கட்டிக்கணும்னு நீங்க நினைக்கிறது சரியான்னு?”
இப்போது செழியன் அம்மாவும்,
“தம்பி சொல்லுறதும் சரியாதான் தோணுதுங்க.. அந்த ஐயா குணத்துக்கு அவர் இருந்து இருந்தாலும் தம்பி ஆசையதான் முடிக்க சொல்லிருப்பாரு..”
செழியன் மனதுக்குள் “அம்மா.. சரியான பாயிண்ட் போட்டு தாக்கிட்டியே.. தெய்வமே.. நீ எங்கியோ போயிட்ட” என்று குத்தாட்டம் போட்டான்.
இப்போது வடிவேலுவும் “மச்சான்.. அண்ணி சொல்றாப்புலே .. அவர் மனசுலேயும் பிள்ளைங்க எண்ணம் பத்தி இருக்கவே தான் ஆண்டவன் மனசு வச்சான்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்கார்.. நாம அத ஆதாரமா வச்சு செழியன் மனசுலே இருக்கிற பொண்ணை கல்யாணம் கட்டி வச்சிடலாம்.”
இவர்கள் இத்தனை தூரம் பேசவும், சிவஞானம் யோசிக்க ஆரம்பித்து இருந்தார். சற்று நேரம் இப்படி அப்படி நடந்து கொண்டு இருக்க, மற்றவர்கள் அமைதியாக இருந்தனர்.
அவர் யோசனையோடு ஒரு இடத்தில் அமரவும், செழியன் மீண்டும் பேச ஆரம்பித்தான்..
“அப்பா.. நான் மலர விரும்புறது உங்களுக்கு சொன்ன மாதிரி, அவகிட்டேயும் சொல்லிட்டேன்.. கிட்டத்தட்ட ஆறு மாசமா அவ என்னை நினைச்சுகிட்டு இருக்கா.. நான் வேற பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டா அவ நிலைமை என்ன? அதோட அந்த ஊட்டி டூர் போயிருக்கும்போது நாங்க அடிபட்ட விஷயம் உங்களுக்கு தெரியும். அதிலே நான் மலரையும், நம்ம செந்தில் பொண்டாட்டி செல்வியையும் ஜீப்பில் உக்காந்து இருக்கத்தான் சொன்னேன்.. நாங்க வர நேரமாகவும், எங்களுக்கு ஏதோ ஆச்சுன்னு பயந்துகிட்டு எங்கள தேடி வந்து அவங்களும் அந்த கும்பல் கிட்டே மாட்டிகிட்டாங்க.. அதோட எனக்கு அடிபடவும் தன்னை பத்தி யோசிக்காம, என்கிட்டே அவங்க பயந்து வரவும் தான், அவங்கள பிடிச்சுட்டான் அவங்கள்ள ஒருத்தன்.. இப்போ சொல்லுங்க இவ்ளோ அன்பு வச்சுருக்க அவள நான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நினைக்கறது தப்பா?”
இப்போது செழியன் அப்பாவின் மனதில் மலரை பற்றின எண்ணம் ஓட ஆரம்பித்தது. இந்த அளவிற்கு அன்பு வச்சு இருக்க அந்த பொண்ணு , வேற ஒருத்தன கட்டிகிட சம்மதிப்பாளா? நாள பின்ன செழியன் கிடைக்கலன்னு விரக்தியிலே எதாவது அந்த பொண்ணு செஞ்சுகிடுமோ? அது பெரிய பாவம் இல்லியா? என்று மனதுக்குள் ஒருவித பயம் ஏற்பட ஆரம்பித்தது.
மெதுவாக வடிவேலுவிடம்
“சரி மச்சான்.. நாம அவங்க வீட்டுக்கு பொண்ணு பார்க்க வரலைன்னு தகவல் சொல்லிடுங்க.. அவங்க வேற யாருக்கும் சொல்லிருக்க மாட்டங்கள்ள?”
“இல்லை.. மச்சான்.. அவங்களும் பையன பார்த்துட்டு தான் சொந்த பந்தங்களுக்கு சொல்லனும்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க.. அத பத்தி விசனபடாதீங்க. அவங்க கிட்டே இன்னும் நேரம் வரலைன்னு ஜோசியக்காரன் சொன்னதா சொல்லிக்கலாம்”
“அது நல்லா இருக்காது மச்சான்.. நாம முடிஞ்ச மட்டும் உண்மையே சொல்லிடலாம்.. நானே நேர்லே வாரேன். பையன் விருப்பம் தெரியாம நான் பேசிட்டேன்.. மன்னிச்சிகிடுங்க அப்படின்னு கேட்டுக்கறேன்.. “
“அப்பா.. அப்படி எல்லாம் உங்க மேலே மொத்தமா பழி போட்டுக்காதீங்க .. பையன் மனசிலே வேற நோக்கம் இருந்து இருக்கு.. இதுவரை கல்யாணம் பத்தி நாங்க எதுவும் பேசாததுனாலே சொல்லாம இருந்துட்டான்.. இன்னைக்கு தான் விவரம் சொன்னான்.. அப்படின்னு சொல்லுங்க.. “
“எதுவா இருந்தா என்னலே.. நாம அவங்களுக்கு ஒரு வருத்தம் கொடுத்துட்டோம் .. நேர்லே போய் நடந்தத சொல்லி நாம ரெண்டு பேரும் மன்னிப்பு கேட்டுகிடலாம்..”
இப்போது செழியன் அம்மா பார்வதி
“ஏன் நாம குடும்பமா போனா என்ன? இத்தனை நாள் அவங்க யாரு என்னனு தெரிஞ்சிக்காம இருந்துட்டோம்.. இனிமேல்பட்டு தெரிஞ்சிகிட்டா விஷேஷங்களுக்கு போக வர இருப்போமே.. கல்யாண விஷயம் பேசாட்டா என்ன? நம்ம சொந்த பந்தமா இருப்போம்”