“ஆச்சி.. நீ சொல்றது எனக்கு புரியுது.. ஆனா இது எல்லாம் நீ முன்னாடியே சொல்லி இருக்கணும்..” என
“அது எப்படி கண்ணு சொல்ல முடியும்.. நீ படிச்சுகிட்டு இருக்க, உன் மனசுலே அத பத்தி பேசி பயமோ, இல்லை ஆசையோ வளர்க்க கூடாதுல்ல”
“இத சொல்ற நீ.. எனக்கு இதிலே விருப்பம் இருக்கான்னு மட்டும் யோசிக்க மாட்டேன்கிறியே”
“உன் விருப்பத்த விட, உங்க தாத்தா ஆசை தான் எனக்கு முக்கியம்”
“உயிரோட இருக்கிற என் ஆசை விட, தாத்தா ஆசை முக்கியமா உனக்கு?”
“உன் தாத்தா இருந்து அவர் கிட்டே நீ பேசி, உன் ஆசை நிறைவேத்தி இருந்தா நான் குறுக்க நிக்க மாட்டேன். ஆனா அவர் இல்லனப்போ அவர் ஆசை தான் முக்கியம். “
“சரி .. உன் வழிக்கே வாரேன்.. இப்போ தாத்தா உயிரை காப்பதினவர்ன்னு தானே அவங்க வீட்டுக்கு பொண்ணு கொடுக்க இஷ்டபடுறீங்க.. அதே சமயம் என்னை ஒருத்தர் காப்பத்தி இருக்கார்னா என்ன செய்வீங்க?” என
இப்போது மலர் குடும்பத்தில் அனைவரும் பதறினர். ஆச்சி அவள அருகில் இழுத்து,
“பேச்சி என்ன சொல்லுத?”
மலர் ஊட்டி சென்று இருந்தபோது, அந்த காட்டில் நடந்த சம்பவங்களை கூற, இப்போது இரு குடும்பமும் திகைத்து நின்றது. செழியன் இந்த அளவு விவரம் வீட்டில் சொல்லவில்லை ஆதலால், அவர்களும் திடுக்கிட்டு இருந்தனர்,
செழியன் மட்டும் மனதில் “அட.. மை விழி டார்லிங் அசதிட்டாளே.. சரியான நேரத்தில் இந்த விஷயத்த உடைச்சி, இப்போ செண்டிமெண்ட் சீன் அட்டகசாம நடத்திட்டு இருக்கா.. நிச்சயம் இந்த சீன்லே பாட்டி கிளீன் போல்ட் தான்.. “ என்று குத்தாட்டம் போட்டவன்,
பிறகு “ஆனா நம்ம மலருக்கு அப்போ அப்போ மூளை காத்து வாங்க போயிடுதே.. எங்க அப்பாவ பேச விட்டா இருபது நிமிஷத்துக்கு முன்னாடியே எங்களுக்கு நிச்சயமே நடந்து இருக்குமே.. “ என்று தனக்குள் கேலி செய்து கொண்டான்.
மலர் சொல்வதை கேட்ட அவள் வீட்டினர் இப்போது வாயடைத்து நின்றனர். வடிவு ஆச்சி கண்கள் கலங்கி, தன் பேத்தியை அணைத்து நின்றனர்.
சற்று நேரம் கழித்து மலர் மீண்டும் பேசினாள்.
“ஆச்சி.. நான் அவர் என் உயிரை காப்பதினார்னு மட்டும் சொல்லலை.. அதுக்கு முன்னாடியே எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப பிடிச்சு இருந்தது.. அது ஏன், எதுக்குன்னு எல்லாம் தெரியாது.. இவர் என் வாழ்க்கையில் வந்தா நல்லா இருக்கும்ன்னு தோணிச்சு.. இப்போ நான் இந்த விஷயத்த சொன்னது கூட , நீ தாத்தா பத்தி மட்டுமே யோசிக்கறியே அப்படின்னு தான்..”
பாட்டி சற்று நேரம் பேசாது இருந்தவர், பிறகு “சரி மலர்.. உன் விருப்பத்திற்கு நான் சம்மதிக்கறேன்” என எல்லோரும் சந்தோஷத்தில் கூச்சலிட்டனர்.
அதுவரை பேசாமல் இருந்த செழியன் அப்பா,
“அம்மா.. ரொம்ப சந்தோஷம்.. என் பையனுக்கு உங்க வீட்டு பொண்ணு கொடுக்க சம்மதிச்ச்சதுக்கு.. ஆனால் ரொம்ப நேரமா ஒரு விஷயம் உங்ககிட்ட சொல்லனும்ன்னு காத்துகிட்டு இருக்கேன்.. மொதலில் உங்க ரெண்டு பையன்களும் பேசிட்டு இருக்கும்போது சந்தேகமா இருந்தது.. நீங்க சொன்னதை கேட்டதும் உறுதி ஆயிடுச்சு.. நீங்க உங்க வீட்டு ஐயாவிற்கு கொடுத்த வாக்கு பத்தி கவலைப்பட வேண்டாம். நானும் விசனப்பட்டுட்டு இருந்தேன்.. ஐயாவிற்கு கொடுத்த வாக்கு நிறைவேத்த முடியலையேன்னு.. ஆனா அவர் தெய்வமா இருந்து நாம நினைச்சத நடத்திக் கொடுத்துட்டார்..” என
“என்ன சொல்றீங்க தம்பி ?” என்றார் ஆச்சி..
“நமசிவாயம் ஐயா வளர்த்து விட்ட அந்த பையன் நான்தான்.. “ என இப்போது எல்லோரும் திகைப்பின் உச்சியின் இருந்தார்கள்.
மலரின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி அவளை இன்னும் அழகூட்டியது.. அவளையே கவனித்துக் கொண்டு இருந்த செழியன் முகமும் பிரகாசமாகியது.
பெரியவர்கள் எல்லாம் திகைத்து நிற்க, இருப்பதில் சின்னவளான கயல் “வாவ்..” அப்படி என்று குதித்தாள்.
அவளின் கத்தலில் சுயநினைவுக்கு வந்தவர்கள்,
“ஐயா.. அந்த முருகன் தான் இவங்களுக்குன்னு முடிச்சு போட்டு இருக்கான் போலே.. இல்லாட்டா இந்த அதிசயம் எங்கியாவது நடக்குமா.? குமாரா ... உனக்கு வந்து பூஜை போடுறேன்... “ என்று வேண்ட, அங்கே மகிழ்ச்சி.. நிலவியது..
அப்போது வடிவேலு
“பொறவு என்ன? நாம பேசின மாதிரி இப்போவே உப்பு தாம்பூலம் மாத்திகிடலாம்” என
செழியன் “மாமா.. என்னை சரியா புரிஞ்சிகிட்டவங்க நீங்க ஒருத்தர்தான்.. இல்லாட்டா இன்னும் எவ்ளோ நேரம் இவங்க விக்ரமன் பட சீன் ஒட்டிருப்பாங்களோ” என
கயல் “ஹலோ அத்தான்.. எங்க அக்கா இவ்ளோ நேரம் பிழிய பிழிய வசனம் பேசினதில் தான் உங்க கல்யாணம் முடிவாச்சு .. நியாபகம் வச்சுக்கோங்க..” என
“யாரு.. ? அரை மணி நேரம் முன்னாடியே நான் கண்டுபிடிச்சுட்டேன்.. அவகிட்டே ஜாடை காமிச்சா, அவ காலேஜ்லே பாடம் எடுக்கிற மாதிரி சுத்தி முத்தி பாக்காம, பாட்டியவே பார்ததுட்டு இருந்தா என்ன செய்யறதாம்.. “ என