‘எனக்கு நாளைக்கு ஈவினிங் போனா போதும் பெரியப்பா. நாம தாதாவை பார்த்திட்டு போகலாம்’ சம்மதித்து இருந்தாள் அவள். உடனே தலை அசைத்திருந்தான் ஹரிஷ். காரை எடுத்துக்கொண்டு கிளம்பி இருந்தனர் மூவரும்.
டிரைவர் காரை செலுத்திக்கொண்டிருக்க பெரியப்பா டிரைவரின் அருகில் அமர்ந்திருக்க பின் சீட்டில் அனுவின் அருகில் அமர்ந்திருந்தான். ரகிசயமாக அவள் கையை எடுத்து தனது கைகளுக்குள் வைத்துக்கொண்டான்.
‘ஸ்... சும்மா இரு...’ அவள் மெதுவாய் கிசுகிசுத்து கையை விலக்கிக்கொள்ள முயல
‘முத்தம் கொடுக்கிறதுக்கதான் பெர்மிஷன் இல்லை. கை பிடிச்சுக்கலாம்’ அவள் காதுக்குள் கிசுகிசுத்துவிட்டு இன்னுமாக இழுத்து வைத்துக்கொண்டான் அவள் கையை.
‘அங்கே ஊரிலே தாத்தா தனியா இருக்காரா அங்கிள்‘ அப்படியே முன்னால் அமர்ந்திருந்த பெரியப்பாவிடம் பேசத்துவங்கினான் ஹரிஷ்.
‘ஆமாம்பா. பார்த்துக்க வேலைக்காரங்க இருக்காங்க. நான் பத்து நாளைக்கு ஒரு தடவை போய் பார்த்திட்டு வருவேன்’’
‘ஏன் அங்கிள்.....’ ஏதோ கேட்க ஆரம்பித்து அவன் சட்டென நிறுத்திக்கொள்ள ஒரு முறை திரும்பி அவன் முகம் பார்த்தார் பெரியப்பா.
‘தொண்ணூறு வயசு ஆச்சுப்பா. இருந்தாலும் அவருக்கு இன்னும் கொஞ்சம் தன்மானம், சுயமரியாதை எல்லாம் இருக்கு’ அவன் கேட்க நினைத்ததற்கு பதில் சொல்வதைப்போல் சொன்னார் அவர். ‘வீட்டுக்குள்ளே ஓரளவு நடமாடிப்பார். சாப்பாடு ஒரு வேளை. ஒரு பழம் பால். சந்தோஷமா, நிம்மதியா இருக்கார் அங்கே’
கார் நெடுஞ்சாலையில் பறந்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் சற்றே அதிர்ந்தான் தனது கைப்பேசியில் விழி பதித்திருந்த ஷங்கர். அவனது முகநூல் பக்கத்தில் இருந்தது அந்த புகைப்படம்.
நேற்று இரவு விருந்தில் ஹரிஷையும் அனுவையும் சேர்த்து எடுக்கப்பட்ட அந்த புகைப்படம். இவர்கள் இருவருக்கும் திருமணம் என்ற செய்தியுடன் முக நூலில் வலம் வந்துக்கொண்டிருந்தது அது. அடுத்த நிமிடம் அம்மாவை அழைத்திருந்தான் அவன்.
இங்கே ஹரிஷின் சின்ன சின்ன ரகசிய கொஞ்சல்கள், சீண்டல்கள் கிசுகிசுப்புகள் என எல்லாவற்றிலும் மூழ்கி திளைத்துக்கொண்டிருந்தாள் அனுராதா. தாத்தாவின் ஊருக்கு வந்திருந்தனர் மூவரும். மேட்டுப்பாளயத்திற்கு மிக அருகில் என்பதால் பசுமையும், இயற்கையும் அவ்விடத்தில் ஒன்றாக குடி இருந்தன.
நரைத்த தலை, மெலிந்த தேகம், தளர்ந்த உடல் இவை எல்லாம் அவரது அடையாளமாக அமர்ந்திருந்தார் தாத்தா. கண்களில் மாட்டப்பட்ட கண்ணாடியின் உதவியுடன் ஏதோ ஒரு புத்தகத்தை கூர்ந்து படித்துக்கொண்டிருந்தார் அவர்.
அவரை பார்த்ததும் அவரிடம் அனு ஓடிச்செல்ல
‘ஆரு? அனுவா?’ கண்ணாடியை சற்றே உயர்த்திக்கொண்டு கண்களை சுருக்கிக்கொண்டு அவர் பார்த்த விதத்தில் புன்னகை பூத்தது ஹரிஷின் இதழ்களில்.
பல்லில்லாத பொக்கை வாயுடன் அவர் பேசிய விதமும், அதிலிருந்து கொஞ்சம் தெளிவில்லாமல் வந்த வார்த்தைகளும் தடுமாறி எழுந்து அவர் மெல்ல அவனருகில் வந்த விதமும் ஒரு குழந்தை போலவே இருந்தது.
‘இது ஆரு?’ அவர் கேட்க
பெரியப்பா அவரிடம் அவனை அறிமுகப்படுத்தி வைக்க அவனை கைப்பிடித்து இழுத்து தனதருகில் அமர்த்திக்கொண்டார். அனுவும் இன்னொரு பக்கத்தில் அமர்ந்துக்கொள்ள அவன் கன்னம் வருடி அவன் முகத்தையே சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்தார் தாத்தா.
‘அடுத்த மாசம் எங்க கல்யாணம். அது முடிஞ்சதும் நீங்க நம்ம வீட்டுக்கு வந்திடுங்க. நாங்க உங்களை நல்லா பார்த்துப்போம்’ மனம் தாங்காமல் சொன்னான் ஹரிஷ். கண்களில் லேசாக நீர் சேர புன்னகைத்துக்கொண்டார் பெரியப்பா.
‘ஒரு மாசமா. அதுவரைக்கும் எல்லாம் நானு’ .என அவர் ஏதோ சொல்ல முயல
‘அதெல்லாம் இருப்பீங்க. எங்க பசங்களை எல்லாம் நீங்க கொஞ்ச வேண்டாமா?’ அவசரமாக மறுத்தான் ஹரிஷ் நிஜமா கல்யாணம் முடிஞ்சதும் நான் உங்களை என்னோட கூட்டிட்டு போயிடுவேன்’ அவர் கையை தனது நெஞ்சோடு வைத்துக்கொண்டு ஹரிஷ் சொன்ன விதத்தில் கொஞ்சம் கரைந்து போனாள்
அவர்கள் அருகில் அமர்ந்து சாப்பிட வைத்தார் தாத்தா. இவர்கள் அவர் பாதம் தொட்டு வணங்க தனது பர்சினுள் மடித்து வைத்திருந்த இரண்டு நூறு ரூபாய் தாள்களை தேடி எடுத்து இருவருக்கும் ஒவ்வொரு தாளை அவர் கொடுக்க நெகிழ்ச்சியில் நீர் பூத்தது அவன் கண்களில்
‘அடுத்த மாசம் தயாரா இருங்க. கல்யாணம் ஆனதும் நேரா இங்கேதான் வருவேன் உங்களை கூட்டிட்டு போக’ அவர் கரம் பிடித்து சொல்லிவிட்டு கிளம்பினான் அவன்.
ஊருக்கு கிளம்பும் நேரத்தில் பெரியப்பா பெரியம்மாவை அழைத்த போது அவர் கேட்ட கேள்வியில் கொஞ்சம் தடுமாறித்தான் போனார் பெரியப்பா.
‘அனுவுக்கு கல்யாணம் நிச்சியம் ஆயிடுச்சு இல்லையா?’ என்றார் லோசனா நேரடியாக
‘வரேன். வரேன். நேரிலே வந்து சொல்றேன்..’ பெரியப்பா நிதானமாக சொல்ல
‘கல்யாணம் முடிவு பண்ற எண்ணத்திலேதான் ரெண்டு பேரும் போனீங்க இல்லையா?’ அடுத்த கேள்வி.