தொடர்கதை - தாரிகை - கதையின் கதை - மதி நிலா
"ஒவ்வொரு மனிதரும் தமது பாலினத்தைத் தேர்வு செய்துகொள்வதற்கு உரிமை உள்ளது.. சாதி, மத, பாலினத்துக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் சமஉரிமை வழங்கிட அரசியலமைப்பு வழிவகுக்கிறது", ஏப்ரல் பதினைந்தாம் தேதி திருநங்கைகளுக்கு “மூன்றாம் பாலினம்” என்ற அங்கீகாரத்துடன், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட தினம் இன்று..
இத்தினத்தை தேசிய தேசிய திருநங்கைகள் தினமாக கொண்டாடுகின்றனர் மூன்றாம் பாலினத்தினர்..
மூன்றாம் பாலினத்தவரைப் பற்றிய கட்டுரை அல்ல இது.. தாரிகை (சில்சீ யில் மாதம் ஒரு முறை பதிவிடப்படும் கதை) பிறந்ததன் கதை இது..
எங்கள் பாட்டி வீட்டில் திருவிழா சமயத்தில் கிடாவெட்டு நடப்பது வழக்கம்.. அப்பொழுது எனக்கு அறிமுகமானவர் தான் அவர்..
அவருடன் நான் கழித்தது வெறும் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் மட்டும் தான் இருக்கும்.. ஆனால் இன்றும் அது நெஞ்சில் பசுமையாய்..
கிடாவெட்டு என்றால் சமையல் எப்பொழுதும் வீட்டுத் தோட்டத்தில் தான்..
தங்கை தம்பிகளோடு விளையாடிக் கொண்டிருந்த நான் வித்யாசமாக உடையனிந்தவரால் ஈர்க்கப்பட்டு சிறிது நேரம் அவர் செய்வதை நோட்டமிட்டுக் கொண்டிருந்தேன் சற்றே சுவாரஸ்யமாய்..
அவருக்கு தன்னை யாரோ நோட்டமிடுவதுபோல் உள்ளுணர்வு தோன்றியிருக்கும் போல..
சட்டெனத் திரும்பி என்னை நோக்கியவர் அவரருகில் என்னை அழைத்தார்..
பயந்து போய் பின்னடைந்த என்னிடம்,”நான் சத்யா.. (பெயர் மாற்றியுள்ளேன்) நீங்க..??”,என்றார்..
புதிய நபரிடம் பேசுவதால் மனதில் சற்று பயம் இருந்தாலும் அவரின் தோழமையான பேச்சு சகஜமாக அவருடன் என்னை கலந்துரையாட வைத்தது..
அன்று என்னைப் பற்றி அவரிடம் நான் பகிர்ந்து கொண்டதை விட அவரைப் பற்றி தெரிந்து கொண்டதே அதிகம்..
அவரைப் பற்றி நான் தெரிந்து கொண்ட சில விஷயங்கள் இதோ........
சத்யாவின் குடும்பம் மிடில் கிளாஸ்.. இரண்டு அண்ணன்கள் ஒரு அக்காவுடன் பிறந்த கடைகுட்டி..
அவரது குடும்பத்திலேயே பதினொன்றாம் வகுப்பு வரை பள்ளி சென்றவர்..
(டாக்டருக்கு படிக்க வேண்டும் ரொம்ப ஆசைப்பட்டாராம்..)
பதினொன்றாம் வகுப்பு படித்த பொழுது தான் ஒரு திருநங்கை என்பதை உணர்ந்திருக்கிறார்..
அதன் விளைவு அவரை பள்ளியை விட்டு நீக்கியிருக்கின்றனர்..
வீட்டில் தன்னை முழு மனதாக ஏற்றுக் கொள்ளாவிடினும் தன்னை ஒதுக்கி வீட்டை விட்டு துரத்தவில்லை என்று அவர் கூறியபோது ஒரு சோகம் இழையோடியது..
தன்னை நிலைபடுதிக்கொள்ள சமையல் கற்றுக் கொண்டு சிறு சிறு வீட்டு விசேஷங்களுக்கு சமைத்துக் கொண்டு தனது வாழ்கையை நகர்த்திக் கொண்டிருந்தார்..
சத்யாவுடனான முதலும் இறுதியுமான அந்த சந்திப்பில் அவரின் முகம் எனக்கு சரியாக நியாபகம் இல்லை என்றாலும் (நான் இரண்டாவது படிக்கும் பொழுது அவரை சந்தித்தேன்..) அவரது தன்னம்பிக்கையான பேச்சு இன்றும் என் மனதில் பதிந்து கிடக்கிறது..
(பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது அவர் ஊரை விட்டு சென்று விட்டார் என்று கேள்விப்பட்டேன்.. இப்பொழுது அவர் எங்கு இருக்கிறார் என்பது யாருக்கும் புரியாத புதிர் தான்..)
இவரே எனது கதை தாரிகைக்கு முதல் வித்திட்டவர்..
{kunena_discuss:1168}