தொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 19 - மீரா ராம்
மேடை எங்கும் விளக்குகள் அலங்கரிக்கப்பட்டிருக்க, அதில் இருவர் வந்து உற்சாகமாய் விழாவை துவக்கி வைத்தனர் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் என்ற பெயரில்…
மங்களமாக பரதநாட்டியத்துடன் விழா ஆரம்பித்திட, அரங்கத்திற்கு வெளியே வந்திட்ட ஒரு காரை கேமரா படம்பிடித்திட்டது வேகமாய்…
தீபன், மஞ்சுளா காரை விட்டு இறங்க, மறுபக்கம் சாரு இறங்கினாள் அழகு மங்கையாக…
பட்டுப்புடவையில் தேவதையாக இருந்திட்டாள் சாரு… தீபன் வந்து அவளின் கைப்பிடித்து உள்ளே அழைத்து செல்ல, அவளும் புன்னகையுடன் இரண்ட்டி தான் எடுத்து வைத்திருப்பாள்…
ஒரு மைக்குடன் அவளின் முன் வந்து நின்றாள் ஒரு பெண்…
“ஹாய்… சாரு மேம்… ரொம்பவே அழகா இருக்குறீங்க… வெல்கம்…” என வரவேற்று சிரிக்க, பதிலுக்கு புன்னகைத்தாள் சாருவும்…
சில புகைப்படங்கள் அப்போது எடுக்கப்பட, அவள் அமைதியாக தீபன் மற்றும் மஞ்சுளாவுடன் அரங்கிற்குள் சென்றாள்…
அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தவுடன், அவள் விழாவை கவனிக்க துவங்க, அந்நேரம் அரங்கிற்குள் நுழைந்தார் ஸ்ரீநிவாஸ்… அவரின் பின்னேயே வந்தார் சகுந்தலாவும்…
“வந்துட்டாங்களா?... ஷப்பா…”
தீபன் சகுந்தலாவை பார்த்து முணுமுணுத்திட, சாரு முறைத்தாள் அவனை…
சாருவிற்கு இரண்டு இருக்கை தள்ளி அவர் இருக்கை இருக்க, அவர் அவளைத் தாண்டி செல்கையில், அவளும் தீபனும் அவரை வணங்கிட, அவரும் அவர்களை வாழ்த்திவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தார்…
பின்னே வந்திட்ட சகுந்தலாவின் முறைப்பினை சாரு கவனித்து தலை கவிழ்ந்து கொள்ள, தீபன் பதிலுக்கு எதிர் முறைப்பு முறைக்க, சகுந்தலாவிற்கு சுர் என்று கோபம் தலைக்கேற, பல்லைக்கடித்தபடி சென்று ஸ்ரீநிவாஸ் அருகில் அமர்ந்தார்…
பின்னர் ஒவ்வொரு பிரபலங்கள் வருவதும், அவர்களை கேமரா பளிச்சிட்டு காட்டுவதுமாய் இருந்திட, மேடையில் விழாவும் நடந்து கொண்டே இருந்தது…
“சாரு… எதோ சஸ்பென்ஸ் சொன்னீயே?... என்ன அது?...”
தீபன் சாருவிடம் அமைதியாக கேட்டிட, அவளோ புன்னகையுடன், “இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கே தெரியும்…” என்றாள் அமைதியாக…
“இதைத்தான் நேத்துல இருந்து சொல்லிட்டிருக்குற?... ஹ்ம்ம்… பார்ப்போம்… அப்படி என்ன சஸ்பென்ஸ் கொடுக்கப்போறேன்னு…”
அவன் அவளிடம் புன்னகை மாறாமல் கேட்டுவிட்டு, விழாவினைப் பார்க்க,
“அடுத்ததா, இங்க வரப்போற ஸ்பெஷல் கெஸ்ட், ரொம்பவே ஸ்பெஷல்… சின்ன வயசிலேயே சாதனை பண்ணினவர், வளர்ந்து வரும் இளம் நடிகரும் கூட… யெஸ்… நம்ம ஃபக்ஷன் ஸ்பான்ஸரே அவர் தான்… ஹீ இஸ் நன் அதர் தேன்… மிஸ்டர். கௌஷிக்….”
நிகழ்ச்சி தொகுப்பாளினி அழைத்திட,
அரங்கத்திலிருந்த பெண்கள் குரல் சற்று ஓங்கி ஒலித்திட, லேசான புன்னகையுடன் எழுந்தவன், தனக்கே உரிய மிடுக்குடன் மேடை ஏறி இரு கரம் குவித்திட, இங்கே சாருவின் அதரங்களோ விரிந்திட்டது அழகாய்…
“சாரு… கௌஷிக் சார்…”
தீபன் புன்னகையும் ஆச்சரியமுமாய் சொல்லிக்கொண்டே சாருவைப் பார்த்திட, அவள் பார்வை முழுவதும் கௌஷிக்கிடமே இருந்திட,
“சாரு………. இதான் நீ சொன்ன சஸ்பென்சா?... ஓகே… ஓகே…” என்றவன் சிரித்துக்கொண்டே அடுத்து நடக்கப்போவதைப் பார்க்க தயாரானான்…
“ஹலோ… கௌஷிக்…”
நிகழ்ச்சி தொகுப்பாளர் அவனை வரவேற்க, பதிலுக்கு அவனும் தலையசைத்து லேசான புன்னகையை வெளிப்படுத்த, அவனிடம் மைக்கை கொண்டு வந்து கொடுத்தாள் ஒரு பெண்…
“நீங்க மேடை ஏறினதும், உங்க பேரை சொன்னதும், எவ்வளவு கைத்தட்டல் தெரியுமா கௌஷிக்?...”
மீண்டும் ஒரு முறை கைத்தட்டல் பலமாக கேட்டிட, அவனோ எதுவுமே கூறாது அமைதியாக நின்றான் அதே புன்னகையுடன்…
“எதைக் கேட்டாலுமே ஸ்மைல் தான்ல கௌஷிக்… ஹ்ம்ம்… ஐ திங்க் இந்த ஸ்மைல் தான் மத்தவங்களை சட்டுன்னு உங்க பக்கம் பார்க்க வைக்குது… சரிதானே கேர்ள்ஸ்?...” என்று கூடியிருந்தவர்களிடம் அந்த தொகுப்பாளினி கேட்டிட, கூக்குரல்கள் ஒலித்திட்டது வேக வேகமாய்…
சாருவோ, கௌஷிக்கையும், அவனுக்கு வெளிப்பட்ட ஆதரவான குரலையும் கேட்டு புன்னகைத்திட, தீபன் அதனை பார்த்து சிரித்திட்டான் சட்டென…
“எதுக்குடா சிரிக்குற?...”
“இல்ல நியாயமா இந்நேரத்துக்கு நீ கோபப்படணும்… பட் நீ சிரிக்குறீயே… அதான்…”
“நான் ஏன் கோபப்படணும்… அதெல்லாம் எதுவுமே இல்லை… சந்தோஷம் மட்டும் தான்…”
என்றவளின் இதழ்கள் தீபனுக்கு பதிலளித்தாலும், அவளது கண்கள் கௌஷிக்கை விட்டு அகலவில்லை… மேலும் அவளின் இதழ்களில் தன்னவனுக்கான புன்னகையும் மாறவில்லை..