‘நான் போய்க்குவேன் பெரியப்பா. அப்புறமா போய்க்கறேன். நீங்க தாத்தா பக்கத்திலேயே இருங்க’
‘நீ மட்டும் தனியா எப்படிமா? உன் கல்யாணத்துக்கு போறே நீ.’
‘இல்ல பெரியப்பா. நான் கிளம்பும் போது... ஹரிஷுக்கு போன் பண்ணுவேன். அவன் ஏதாவது வழி சொல்வான்.’
‘சரி இப்போ கிளம்புமா. மணி அஞ்சரை இப்போவே’
இடம் வலமாக அசைந்தது அவள் தலை ‘நான் கொஞ்ச நேரம் தாத்தா பக்கத்திலே இருக்கேன்.. ராத்திரி போயிக்கறேன்’
‘அனு... அங்கே கொஞ்ச நேரத்திலே மெஹந்தி ஃப்ங்ஷன்இருக்குமா’
‘பெரியப்பா.. இங்கே தாத்தா இப்படி இருக்கும் போது என்னாலே அங்கே போய் மெஹந்தி போட்டுட்டு டான்ஸ் ஆட முடியாது பெரியப்பா. நான் காலையிலேகுள்ளே போயிடுவேன்.’
‘அங்கே எல்லாரும் உனக்காக வெய்ட் பண்ணுவாங்கமா. இருக்கட்டும் பரவாயில்லை, ஹரிஷ் சொன்னா புரிஞ்சுப்பான்’ அப்படியே தாத்தாவின் அருகில் அமர்ந்துவிட்டாள் அனுராதா.
நேரம் கடக்க கடக்க
இன்னும் கல்யாண பொண்ணு வரலையா? கேள்வி பிறக்க துவங்கியது ஹரிஷின் வீட்டில். வெளியே பத்திரிக்கைகார்களும் கூடி நிற்க அவரவர்கள் அவர்களுக்கு தெரிந்ததை பேச ஆரம்பிக்க கொதிக்க ஆரம்பித்தது சுவாமிநாதனின் உள்ளே.
‘ஹரிஷ்..’. என்றார் அவனிடம் வந்து ‘என்னடா நடக்குது? பேசினியா இல்லையா அவகிட்டே?’
அவள் எதோ பிரச்சனையில் இருக்கிறாளோ என்ற எண்ணம் மெல்ல மெல்ல ஹரிஷுக்குள் ஏற ஆரம்பிக்க
‘ஆங்.. பேசினேன்பா. வந்திட்டே இருக்கா..’ சமாளிக்க முயன்றான்
‘என்னடா... உன் முகமே சரியில்லை’ அடிக்குரலில் அவனிடம் உறுமிவிட்டு பெரியப்பாவின் எண்ணுக்கு முயன்றார் சுவாமிநாதன். அது அவரின் நல்ல நேரமோ கெட்ட நேரமோ அவரின் கைப்பேசி தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தது.
‘டேய்.... ஹரிஷ்... என்ன குடும்பம்டா அது?’ என்றார் கொதிப்புடன். ‘ஒரு வேளை நம்மை நிஜமாவே பழி வாங்கணும்னு ஏதாவது பண்றாங்களா?
‘இல்லப்பா. கண்டிப்பா அனு அப்படி இல்லை. வந்திடுவா.’ என்றான் உறுதியாக. அவள் கொடுத்த முத்தம் திரும்ப திரும்ப அவன் நினைவில் வந்து வந்து போய்க்கொண்டிருந்தது.
‘டேய்... சீக்கிரம் பேசி எங்கே இருக்கான்னு கேளு அவகிட்டே..’ பொரிந்தார் தந்தை. அழைத்தான் அவளை .
‘ஹலோ..’
‘லவ் யூ அனும்மா..’ அவன் சொல்ல அப்படியே கண்களில் குளம் கட்டிக்கொண்டது அவளுக்கு.
அவன் இப்போது இருக்கும் சூழ்நிலை நன்றாக தெரியும் அவளுக்கு. இப்போது கூட கொஞ்சம் கூட பதற்றம் இல்லாமல் எப்படி இப்படி பேசுகிறான் இவன்?’
‘எனக்கு வோர்ல்ட் கப் கிடைக்குமா. கிடைக்காதா? அது மட்டும் சொல்லு அனும்மா’ என்றான் மிக மிக இதமான குரலில்.
‘உனக்குத்தான் வோர்ல்ட் கப் கண்டிப்பா உனக்குத்தான். இப்போ மழையினாலே கொஞ்ச நேரம் மேட்ச் தடை பட்டிருக்கு ஹரிஷ். ப்ளீஸ்... நாளைக்கு காலையிலே வோர்ல்ட் கப் உன் கைக்கு வந்திடும்.. ப்ளீஸ்.... புரிஞ்சுக்கோ ஹரிஷ்’ என்றாள் அழுதுவிடக்கூடாது என்பதில் உறுதியாக நின்றுக்கொண்டு
‘அடியேய்... பொண்டாட்டி’ என்றான் அவன். ‘எங்கேடி இருக்கே?’
‘சொல்றேன். நான் நேரிலே வந்து எல்லாம் சொல்றேன் இப்போ மெஹெந்தி ஃபங்ஷன் மட்டும் கொஞ்சம் சமாளிச்சுக்கோ ப்ளீஸ் ஹரிஷ்...’ என்னதான் குரலில் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் அவள் கண்களில் கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது.
அதை பார்த்துக்கொண்டிருந்த கீதாவின் கண்களிலும், ஏன் பெரியம்மாவின் கண்களிலும் கூட நீர் சேர தவறவில்லைதான்.
‘ஹேய்...’ என்றான் கொஞ்சம் பொறுமை இழந்து ‘இருக்கிற இடத்தையாவது சொல்லலாம் இல்ல நீ. வாடி வா. நாளைக்கு உனக்கு தாலி கட்டிட்டு அப்புறம் இருக்கு உனக்கு. சகல வித அர்ச்சனையும் பண்றேன்’
‘கண்டிப்பா எல்லாத்தையும் வாங்கிக்கறேன். நீ கொடுக்கிறது எல்லாம் கேட்டு வாங்கிக்கறேன். ப்ளீஸ்... ஹரிஷ்.. இன்னும் கொஞ்ச நேரத்திலே கிளம்பிடுவேன் ’
‘போடி... இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. சீக்கிரம் வந்து சேரு’ சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான் ஹரிஷ்.
இன்னமும் தாத்தா மூச்சுக்கு தடுமாறிக்கொண்டிருக்க
இத்தனை நாள் நல்லா இருந்த மனுஷன் இன்னும் ரெண்டு நாள் நல்லா இருந்திருக்கலாம்’ ஆதங்கத்தில் வெளி வந்தன பெரியப்பாவின் வார்த்தைகள்.
‘நல்லா இருப்பார் பெரியப்பா’ என்றாள் அவள் தாத்தாவின் அருகில் வந்து ‘இப்போ சரியாகிடும். எங்களுக்கு நாளைக்கு கல்யாணம். அதுக்கு அப்புறம் நானும் ஹரிஷும் அவரை எங்ககூட கூட்டிட்டு போய் நல்லபடியா வெச்சுக்குவோம்’