தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 32 - ஜெய்
பாரதி யோசனையுடன் கைப்பேசியைப் பார்க்க, மதி அவளை ஸ்பீக்கரை on செய்யுமாறு சைகை செய்துகொண்டே, தன்னுடைய கைப்பேசியில் கண்ட்ரோல் ரூமிற்கு அழைத்து பாரதிக்கு வந்த அழைப்பை ட்ரேஸ் செய்ய சொன்னான்...
“ஹலோ என்ன மேடம்.... அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள்ல அப்படியே ஆடிப்போய் இருக்கீங்களா...”
“ஏய் யார் நீ... எங்க இருந்து பேசற....”
“ஏம்மா இதுக்கு முன்ன கடத்தல் காரங்களோட பேசினதில்லையா... இந்த விஷயம் எல்லாம் அவங்க சொல்ல மாட்டாங்கன்னு தெரியாது....”, பேசும்போதே லைன் கட் ஆனது....
“ச்சே இது என்ன ஒரு நிமிஷத்துக்குள்ள கட் பண்ணிட்டான்...”, மறுபடி அதே எண்ணிலிருந்து அழைப்பு வர, தாமதிக்காமல் அழைப்பை எடுத்தாள் பாரதி...
“உன் பக்கத்துல இருக்கற ACP என் காலை ட்ரேஸ் பண்ண சொல்லி இருப்பார்ன்னு தெரியும்... அதுதான் கட் பண்ணிட்டேன்....”
“உனக்கு என்ன வேணும்... அதை மட்டும் சொல்லு....”
“என்னம்மா உன் காதலனை கட்டி போட்டு வச்சிருக்கேன்... ரொம்ப கூலா பேசிட்டு இருக்க....”, மதி பாரதியை இது எப்போலேர்ந்து என்பதுபோல் பார்வை பார்த்தான்....
“காதலனா... என்ன சொல்ற....”
“என்னம்மா நடிக்கற... அதுதான் ஹோட்டல்ல பார்த்தோமே... ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தத...”
“இங்க பாரு உனக்கு என்ன வேணும் அப்படிங்கறத மட்டும் சொல்லு... தேவையில்லாம பேசாத....”
“எனக்கு என்ன வேணும்ங்கறத நான் சொல்றத விட உன்னோட ஆளு சொன்னா நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறேன்...”,மறுபடி அழைப்பு நின்று போனது....
“இது யாரு பாரதி புதுசா உனக்கு ஒரு காதலன் கேரக்டர்....”
“அதை பத்தி விரிவா அப்பறம் சொல்றேன் மதி சார்... கடத்தினவன் ரொம்ப அறிவாளியா இருக்கான்... நாம இடத்தை ட்ரேஸ் பண்றது கஷ்டம்ன்னு நினைக்கிறேன்.... சரியா 1 நிமிஷத்துல காலை கட் பண்ணிடறான்.... அதுவும் இல்லாம அவன் இங்கதான் பக்கத்துல எங்கயோ நின்னுட்டு பேசிட்டு இருக்கான்...”, பாரதி சொல்ல மதி சந்தேகம் வராத வகையில் சுற்றி பார்க்கஅவனால் ஆளை கண்டுபிடிக்க முடியவில்லை...
“பாரதி, ராஜா வேற பயங்கர பயந்த சுபாவம் இருக்கறவர்... அவரு வேற பயந்துக்காம இருக்கணும்.... நாம சீக்கிரம் அவர் இருக்கற இடத்தை கண்டுபிடிக்கணும்... மதி சார் கேஸ் ஹியரிங் எத்தனை மணிக்குன்னு தெரிஞ்சிதா....”
“நாலு மணிக்கு மாத்தி இருக்காங்கன்னு இன்ஸ்பெக்டர் மெசேஜ் பண்ணி இருக்கார் சாரங்கா...”
“இன்னும் ரெண்டு மணிநேரத்துக்குள்ள நாம ராஜா இருக்கற இடத்தைக் கண்டுபிடிக்கணும்...”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது புதிய எண்ணிலிருந்து ஒரு வீடியோ கால் வந்தது.... அதில் ராஜா நாற்காலியுடன் கட்டப்பட்டு அமர்ந்திருந்தான்.... அவனின் கண்களும் கட்டப்பட்டிருந்தன...
“என்னம்மா ஜான்சி ராணி... உன் ஆளோட நிலையைப் பார்த்தியா... எங்களுக்கு என்ன வேணும் அப்படிங்கறதை அவனே சொல்லுவான்... ஒழுங்கா அதைக்கேட்டு அதுப்படி நட....”
“Listen barathi… around 4 people kidnapped me… but don’t worry… I can manage here… so don’t do whatever they are telling… Continue with your case proceedings barathi…Jesus... save me....”,பத்தே செகண்டில் பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் சொல்லி முடித்தான்...
“யோவ் என்ன வாத்தின்னு காட்டுறியா.... இப்போ உன் டாவுக்கிட்ட என்ன சொன்ன....”
“இங்க நாலு பேர் என்னைக் கடத்தி வச்சிருக்காங்க... அவங்க சொல்றதைக் கேக்கலைன்னா என்னைக் கொன்னுடுவாங்க கடவுளே காப்பாத்துன்னு சொன்னேன்...”,ராஜா சொல்லி முடித்தவுடன் லைன் கட் ஆனது...
ராஜா மிக வேகமாக பேசியதால் ஒன்றும் புரியவில்லை... நல்ல வேளையாக மதி அவர்கள் பேசுவதை ரெகார்ட் செய்ததால் அதை மறுபடி போட்டுக் கேட்டார்கள்...
“என்ன சாரங்கா... ராஜா ரொம்ப பயந்த சுபாவம் உள்ள ஆள் அப்படின்னு சொன்னீங்க... ஆனா அவர் தைரியமா அதுவும் சமயோசிதமா அவங்களுக்கு தெரியக்கூடாதுன்னு பேசுறார்....”
“மதி சார்.... என்கிட்டே முதல் நாள் பேசும்போதே ராஜா, உன்னோட வக்கீல் வேலைக்கு எப்பவும் நான் சப்போர்ட்டா இருப்பேனே தவிர தடுக்கறா மாதிரி இருக்க மாட்டேன்னு சொன்னார்... அதுனால அவர் இப்போ பேசறதை வச்சு அவர் தைரியமா இருக்கார், சமாளிச்சுடுவார்ன்னு நம்ப முடியாது.... எத்தனை சீக்கிரம் அவர் இருக்கற இடத்தைக் கண்டுபிடிக்கறோமோ அத்தனை நல்லது....”
இப்பொழுது முதலில் அழைத்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தது...
“கேட்டுக்கினியா இப்போ என்ன பண்ற.... நீங்க எடுத்து நடத்தற ரெண்டு வழக்கையும் ஒண்ணும் இல்லாம பண்ற... இன்னும் ரெண்டு நாள்ல நரேஷ், நாராயணன் ரெண்டு பேரும் வெளிய வந்திருக்கணும்....”, கட்டளையிட்ட மறுநிமிடம் அலைபேசி வைக்கப்பட்டது....
மதி கண்ட்ரோல் அறையைத் தொடர்பு கொள்ள, எல்லாமே மிக சுருக்கமான அழைப்புகளாக இருந்ததால் இடத்தை ட்ரேஸ் செய்யமுடியவில்லை என்று தகவல் வர அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார்கள்... அவர்களை அழைத்த எண்களும் தற்பொழுது உபயோகத்தில் இல்லை என்று வந்தது....