தொடர்கதை - அன்பின் அழகே - 06 - ஸ்ரீ
“பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்
நீ விழியால் விழியை பறித்தாய்
உன் உயிரினை எனக்குள்ளே விதைத்தாய்
உன் அழகால் எனை நீ அடித்தாய்
அய்யோ அதிசய உலகத்தில் அடைத்தாய்”
மறுநாள் சீக்கிரமாகவே எழுந்தவள் குளித்து தனதறையை விட்டு வெளியே வர அதிகாலை ஆதலால் யாரும் எழுந்திருக்கவில்லை.மெதுவாய் சமையலறைக்குச் சென்றவள் பாலை காய்ச்சி காபி தயார் செய்து தனக்கு எடுத்துக் கொண்டு வந்து டைனிங் டேபிளில் அமர சாரதா அறையிலிருந்து வெளியே வந்தார்.
அவருக்கு எடுத்து வருவதற்காக எழப் போனவளை தடுத்தவர் தானே சென்று கையில் காபியோடு வந்து அவளருகில் அமர்ந்தார்.
“ஏன்டா அதுகுள்ள எழுந்துட்ட?”
“இல்ல அத்தை எப்பவுமே இந்த டைம் எழுந்துருவேன் அப்போ தான் சமையல் முடிச்சு ஸ்கூல்க்கு கிளம்ப சரியா இருக்கும்..இன்னைக்கு என்ன சமைக்கட்டும்?”
“என்னது நீ சமைக்க போறியா அதெல்லாம் வேணாம் நானே பண்ணிக்குறேன்..நீயும் அவனும் எங்கேயாவது வெளில போய்ட்டு வாங்க..”
“அவரு அப்படி எதுவும் சொல்லல அத்தை.அப்படியே போனாலும் வேலையை முடிச்சுட்டு போலாம்..ப்ளீஸ் நானனே பண்றேன்..”
“ம்ம்சரி இன்னைக்கு ஒரு நாள் தான்..எனக்கு இருக்குற ஒரே வேலை சமையல் தான் அதையும் நீயே பண்ணிட்டா அப்பறம் எனக்கு பொழுது போக வேணாமா?”,என்றவர் சிரித்து நகர அவரோடு சமையலறைக்குச் சென்று வேலையை ஆரம்பித்தாள்.
காலை உணவையும் முடித்து மதியத்திற்கான சமையலை தொடங்கியிருக்க அபினவ் குளித்து தயாராகி வெளியே வந்தவன் அவளைத் தேடினான். கிட்சனில் கேட்ட சத்தத்தில் மெதுவாய் உள்ளே எட்டிப் பார்த்தவன் வேறு யாரும் இல்லை என்பதை உறுதிப்டுத்தியவாறு மெதுவாய் உள்ளே சென்று பின்னிருந்து லேசாய் அவள் இடுப்பை அணைத்தவாறு கன்னத்தில் இதழ்பதித்து குட்மார்னிங் திஷா டியர் என காதில் கிசுகிசுக்க,
சட்டென நடந்த இந்த அதிரடி தாக்குதலில் பயந்தே போனவள் கையிலிருந்த கரண்டியை கீழே தவறவிட அது முன்னிருந்த பாத்திரத்தின் தண்ணீரோடு சென்று கீழே விழுந்து அடங்கியது..புடவையிலெல்லாம் தண்ணீர் கொட்டியிருக்க நடந்த களேபரத்தில் கண்களை இறுக மூடியிருந்தவள் விழி திறந்த போது அவனை அங்கு காணவில்லை..மாறாக சாரதாவும் ராகவனும் அடித்து பிடித்து ஓடி வந்தனர்.
“என்னம்மா ஆச்சு..உனக்கு ஒண்ணுமில்லையே?”
“இல்ல இல்ல அத்தை..கரண்டி தவறி கீழே விழுந்துருச்சு வேற ஒண்ணுமில்ல..”,என திக்கித் திணறி கூறி முடித்தாள்.
“அய்யோ சரி சரி பாரு புடவையெல்லாம் நனைஞ்சுருக்கு போ நீ போய் மாத்திட்டு வா..நா பாத்துக்குறேன்”,என அவளை அனுப்பி வைத்தார்.
அவனை ஒரு வழி பண்ணும் எண்ணத்தோடு உள்ளே சென்றவளுக்கு ஏனோ அவனை பார்த்த பின் வார்த்தை எழாமல் போக அதை மறைப்பதற்காக அவனை முறைத்தாள்.
“ஏன் டீ ஒரு குட்மார்னிங்க்கு இந்த அக்கப் போரா?”,என அவன் இவளை கேட்க..
“என்னதுடீ யா..??”
“பின்ன என்ன காபியா??ஐயோ காலைலேயே இப்படி மொக்க ஜோக்லா சொல்ல வைக்காத..உன்னை யாரு குட்மார்னிங் சொல்லாம வெளியே போக சொன்னது..??”
“இதெல்லாம் ரொம்ப ஓவர் இத்தனை வருஷமா நா குட்மார்னிங் சொல்லி தான் நீங்க எழுந்தீங்களா?”
“ம்ம் இத்தனை வருஷமா நீ சமைச்சுது தான் இங்க எல்லாரும் சாப்டாங்களா?”
“ப்ச்ச்ச்”
“இதுக்கு ஒண்ணும் குறைச்சலே இல்ல..நல்ல வேளை அம்மா பாக்கல என்னை கலாய்ச்சே கொன்னுருப்பாங்க..சரி ஏதோ சின்ன பொண்ணு தெரியாம பண்ணிட்ட மன்னிச்சு விடுறேன்..இப்போ சொல்லு”என கன்னத்தை காட்ட அவனை எரிக்கும் பார்வை பார்த்தவாறே அவனை தாண்டிச் சென்று கபோர்டைதிறந்து வேறு புடவையை எடுத்து அவள் திரும்ப அப்படியே அவளை சிறை பிடித்திருந்தான்.
விரல்நுனி கூட படாமல் அவளின் இருபுறமும் கபோர்டில் கை ஊன்றி அவன் நிற்க அத்தனை நெருக்கத்தில் மூச்சடைக்க அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.