மைதிலியும் “அது மட்டுமில்லை ஷ்யாம். வீட்டில் இந்த ஏற்பாடு எல்லாம் பண்ணினால், அக்கம் பக்கம் என்னன்னு கேட்க மாட்டாங்களா? அதனால் நாம முன்னாடியே சொல்லிட்டோம்னா , நாளைக்கு யாரும் காது பட தேவையில்லாம பேச மாட்டாங்க. அதுக்கு எல்லாம் எங்களுக்கு கொஞ்சம் டைம் வேணும் டா”
அப்போது அங்கே வந்த மித்ராவின் பாட்டி என்ன விஷயம் என்று கேட்க, கௌசல்யா, மைதிலி சொன்ன விஷயத்தைக் கேட்டவர்,
“சம்பந்திம்மா, கல்யாணம் முடிஞ்சு மாப்பிள்ளை வீட்டில் கொண்டு விடறதுதான் நம்ம பக்க வழக்கம். ஆனால் ஷ்யாமிற்கு நம்ம வீடு அத்தை வீடும் கூட என்பதால், நம்ம வீட்டுக்கே இன்னிக்கு போகலாம். “
“அப்படியே செய்யலாம் மைதிலி. நாம முன்னாடி போய் நாளைக்கு இவங்கள வரவேற்க எல்லா ஏற்பாடும் செஞ்சு வைச்சுடலாம். நாளைக்குக் காலையில் வீட்டு வேலைக்கராங்கள சீக்கிரம் வரச் சொல்லி விட்டுடலாம். நைட்டுக்கு மட்டும் நமக்கு சாப்பாடு வெளியில் ஏற்பாடு பண்ணிடலாம். “
மைதிலி பதில் சொல்வதற்கு முன், “சம்பந்திம்மா, நாம என்ன தொலையாத தூரத்திலா இருக்கோம். நீங்க போய் வேண்டிய ஏற்பாடு பண்ணிட்டு நைட் சாப்பிட நம்ம வீட்டுக்கு வந்துருங்க. பிறகு அங்கே போய் படுத்தா காலையில் உங்களுக்கு சரியாயிருக்கும்”
கௌசல்யா சரி என, ஷ்யாம் இப்போது குரல் கொடுத்தான்.
“மா, நான் என்ன கேட்டேன்? அத விட்டுட்டு உங்க பிரச்சினையே பேசிட்டு இருக்கீங்களே?
“நீ என்னடா கேட்ட?
“ஹ்ம்ம். ட்ரெஸ் மாத்திக்கவான்னு கேட்டேன். “
“ஏன் இதுலே இருக்கிறதுக்கு என்ன?
“மா, பட்டு வேஷ்டி. ஒரே கச கசன்னு இருக்கு”
“டேய். அங்கே பாரு மித்துவ, அத்தனை நகைய போட்டுட்டு, ஜடை அலங்காரம் கூட கலைக்காம பேசாம இருக்கா. உனக்கு என்னடான்னா ஒருநாள் வேஷ்டி கட்டிட்டு நிக்க முடியலையா?
“மா, நானே இது எப்போ அவிழ்ந்து விழுமோன்னு இருக்கேன். நீங்க வேறே நாள் பூரா இதிலே இருக்கணும்ன்னு சொல்றீங்க?
“டேய். நீதான் மாப்பிள்ளை. “
“என்னமா சீரியல் பேர் எல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க?
“ஐயோ, நீதான் கல்யாண மாப்பிள்ளை. அத்தை வீட்டிற்கு போகும் வரையாவது பேசாமல் இரு”
“என்னது அத்தை வீட்டுக்கு போகனுமா? நானே மூணு நாளா சரியா தூங்கமா இருக்கோமே, இன்னிக்காவது வீட்டில் என் அறையில் போய் நல்ல தூங்கலாம்னு இருக்கேன். இப்படி ஒரு குண்டைத் தூக்கி போடுறீங்க?
“நல்லவேளை பாட்டிங்க ரெண்டு பேரும் வெளியில் போயிட்டாங்க. நீ கொஞ்சமாவது யோசனையோடு பேசுடா”
“என்னம்மா” என்று கேட்கும்போதுதான், அவனுக்கும் புரிந்தது.
அப்போது ராம் மைதிலியைத் தேடி வர, ஷ்யாம் , மைதிலி இருவரும் சங்கடமாக நின்று கொண்டு இருப்பதைப் பார்த்தான்.
“என்னாச்சு மைதிலி?
“இல்லை ராம். ஷ்யாம் இன்னிக்கு சபரி வீட்டிற்கு போக வேண்டும் இல்லியா? அதைப் பற்றித் தான் பேசிக் கொண்டு இருந்தோம்”
“ஏண்டா.. அத்தை வீட்டிற்குத் தானே போகபோற? அப்புறம் என்ன?” என்று கேட்க,
“அது வந்து ..” என்று ஷ்யாம் தயங்குவதைப் பார்த்த ராம், மைதிலியிடம் திரும்பி
“மைதிலி உன்னை உன் குரூப் ஆட்கள் தேடினார்கள் பார். அவர்களுக்கு என்ன இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்க வேண்டுமோ கொடுத்து விட்டு வா” என்று அனுப்பி வைத்தான்.
மைதிலி செல்லவும் ராம் “என்னடா ஷ்யாம்?”
“இல்லைப்பா. நம்ம வீட்டில்ன்னா உங்ககிட்டே சொல்லி மற்ற ஏற்பாடுகள் எதுவும் இப்போ செய்ய வேண்டாம்னு சொல்லிடுவேன். ஆனால் அத்தை கிட்டே எப்படி சொல்றது?
“ஒஹ்” என்று யோசித்தவன், “நான் பார்த்துக்கறேன் அதை. ஆனால் நீயும், மித்ராவும் இன்னைக்கு அங்கே தங்குங்க. நாளைக்கு நம்ம வீட்டிற்கு வந்துடலாம்” என்று கூறவும், மைதிலி மீண்டும் வந்தாள்.
“சரிப்பா “ என்ற ஷ்யாம் , மைதிலியிடம் திரும்பி “மா, நாளைக்கு மிதுவோட வருவேன் இல்லையா?” என்று கூறும்போதே ராம், மைதிலி இருவரும் அவனை முறைக்க,
“எதுக்கு முறைக்கறீங்க?” என்று கேட்டவன், பின் புரிந்தவனாக “மிதுன்னு சொன்னதுக்கா? நான் என்ன பண்றது ? மித்ராவ மிதுன்னு தான் சொல்ல முடியும்? நீங்க உங்க பொண்டாட்டிய வேறே பேர் வச்சிக் கூப்பிடுங்க?
“டேய்.. நான்தாண்டா சீனியர். இத்தனை நாளா கூப்பிடறத என்னாலே மாத்த முடியாது. நீ வேணா உன் பொண்டாட்டிக்கு வேறே பேர் தேடு”